குதிரை வாங்குவதற்காக எடுத்துச்சென்ற பொருளைக் கொண்டு திருக்கோயில் திருப்பணிக்கும் அடியார்களின் நலனுக்கும் மணிவாசகர் செலவு செய்ததை அறிந்த அரிமர்த்தன பாண்டிய மன்னன், அவரிடம் குதிரைகள் எப்போது வரும் என்று வினவினான். அவரும் ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் தினத்தன்று குதிரைகள் வரும் என்று பதில் அளித்தார். ஆனால், வந்த குதிரைகள் அனைத்தும் இரவில் நரிகளாக மாறி ஊளையிட்டவாறு குதிரை லாயத்திலிருந்து வெளியேறிச் சென்றன. இதனை அறிந்த மன்னன் மிகுந்த கோபம் கொண்டு மணிவாசகரை சிறையில் அடைத்தான். மணிவாசகரின் பெருமையை உலகுக்கு உணர்த்த திருவுள்ளம் கொண்ட பெருமான், வைகை ஆற்றில் வெள்ளம் பொங்கி வருமாறு செய்தார். வெள்ளத்தை அடக்கவும் நதியின் கரையை உயர்த்தவும், மக்கள் அனைவரும் வீட்டுக்கு ஒரு ஆளை அனுப்ப வேண்டும் அன்று மன்னன் ஆணை பிறப்பித்தான். பிட்டு விற்கும் வந்தி என்ற கிழவியின் சார்பாக, சிவபெருமான் ஒரு கூலியாளாகப் பங்கேற்றார். ஆனால், வேலையில் ஈடுபடாமல் ஆடியும் பாடியும் காலத்தைக் கழித்தார். கோபமுற்ற மன்னன், கூலியாளாக வந்த பெருமானின் முதுகில் சாட்டையால் அடித்தான். ஆனால், மன்னன் உட்பட உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தங்களது முதுகில் எவரோ சாட்டையில் அடித்ததைப்போல் உணர்ந்தார்கள். அப்போதுதான், வந்தது சிவபெருமான் என்றும், வந்திக்கிழவி மற்றும் மணிவாசகரின் பெருமையையும் உணர்ந்தும், மணிவாசகரிடம் மன்னிப்பு கேட்டு வணங்கினான். இந்த நிகழ்ச்சி திருவிளையாடல் புராணத்தில் மிகவும் விரிவாகக் கூறப்படுகிறது. (சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி). படங்கள் உதவி: கொடுமுடி வசந்தகுமார்