மகாத்மா காந்தி பின்கண்ட அறிக்கையை விடுத்திருக்கிறார்:
என்னுடைய தவறை நான் உணருகிறேன். இந்த உபவாசத்தைப்போல், வேறெந்த உபவாசமும் வெற்றி பெறவில்லை என்று ராஜ்கோட் உபவாசம் முடிந்தவுடன் நான் சொன்னேன். அதில் ஹிம்ஸையின் தன்மை தெரிகிறதென்று இப்போது எனக்குத் தெரிகிறது. தாகூர் சாஹிப் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஆதிபத்ய சர்க்கார் உடனடியாகத் தலையிடவேண்டுமென்று நான் உபவாசம் ஆரம்பித்தேன். மனதை மாற்றுதல், அல்லது அஹிம்ஸைக்கு இது வழியல்ல.
இது ஹிம்ஸை, அல்லது பலாத்கார வழி. என்னுடைய உபவாசம் பரிசுத்தமானதாயிருக்க வேண்டுமானால், தாகூர் சாஹிப்பிடம் மாத்திரம் நான் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும். அவருடைய ஹிருதயத்தையோ, அல்லது அதைவிட, அவருக்கு ஆலோசனை கூறுபவரான தர்பார் வீரவாலாவின் ஹிருதயத்தையோ இளகவைத்திருக்க முடியாவிட்டால் நாம் சாகவேண்டியதுதான் என்று நான் திருப்தியடைந்திருக்கவேண்டும். இடையே எனக்கு எதிர்பாராத கஷ்டங்கள் ஏற்பட்டிராவிட்டால் எனக்கும் உண்மைநிலை தெரிந்திராது.
ஸ்ரீ. வீரவாலா சம்பந்தப்பட்டவரையில், என்னுடைய சகபாடிகளுடன் சேர்ந்து நானும், அவரைப்பற்றி கெடுதலான எண்ணம் கொண்டிருந்தேன் என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் மீது சொல்லப்பட்ட புகார்கள் உண்மையா, இல்லையா என்பதைப்பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. அவைகளைப்பற்றி விவாதிப்பதற்கு இது இடமல்ல, அஹிம்ஸை முறை அவர் விஷயத்தில் இன்னம் அனுஷ்டிக்கப்படவில்லை என்று மாத்திரம் தெரிவித்துக்கொள்கிறேன்.
தினமணி (18-05-1939)