காந்திஜி காசியில் பாரத மாதா ஆலயத்தை பிரதிஷ்டை செய்தார். அன்னையின் ஆலயத் திறப்பு விழாவிற்கு ஏராளமான ஜனங்கள் வந்திருந்தனர்.
இவ்வைபவத்திற்கு காசியில் நடக்கும் காங்கிரஸ் பார்லிமென்டரி போர்டு கூட்டத்திற்கு வந்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் வந்திருந்தனர். பாரத தேவியை துதித்த பிறகு மங்களச் சடங்குகள் ஆரம்பமாயின.
காந்திஜி, கான் அப்துல் கபார் கான் மற்றும் வந்திருந்த தலைவர்களையும், பொதுஜனங்களையும் வரவேற்று டாக்டர் பகவன்தாஸ் பேசுகையில், எல்லா மதத்தின் போதனைகளும் ஒன்றுதானென்றும், பாரத மாதா ஆலயம், எல்லா மதத்தினரும் பேதமின்றி வந்து துதிக்கக்கூடிய ஆலயமாக இருக்குமென்றும் கூறினார்.
கான் அப்துல் கபார் கான் பேசுகையில், ஜனங்கள் மதத்தின் உண்மையான தத்துவத்தை இன்னும் உணரவில்லை என்றார். இஸ்லாத்தின் புராதான சரித்திரத்தை படிக்குங் காலையில், ஜாதி மத பேதமின்றி எல்லோரும் தொழக்கூடிய இடமாக ஒரு காலத்தில் மசூதிகள் இருந்து வந்ததாகத் தெரிகிறது என்றார்.
பிறகு காந்திஜி பேச ஆரம்பித்தார். ஆனால், அதற்குள் பெருந்திரளான ஜனங்களை சமாளிக்க முடிய வில்லை.
இதைக்கண்ட காங்கிரஸ் அக்ராசனர் ஸ்ரீ ஜவாஹர்லால் தம் இருப்பிடத்தை விட்டு எழுந்து எங்கு கூட்டம் மிக ஜாஸ்தியோ அங்கே சென்று ஜனங்கள் அமெரிக்கையாகவும், அமைதியாகவும் இருக்கும்படி செய்தார்.
பிறகு காந்திஜி பேசுகையில் இந்த ஆலயத்தில் எல்லா இந்தியர்களும் தொழ வேண்டுமென்றும் மத வித்யாசங்கள் மறந்துவிட வேண்டுமென்றும் கூறினார்.
இவ்வைபவத்திற்கு ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜைனர்கள், பெளத்தர்கள், சீனர்கள், ஹரிஜனங்கள் முதலியோர்கள் தேசத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்தனர்.
தினமணி (26-10-1936)