ஒரு அந்திய நாட்டு பத்திரிகை நிருபர் கேட்ட கேள்வி பின்வருமாறு:-
"கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா சட்டத்தை துளிக்கூடக் குறைக்க விரும்பவில்லையென்று தாங்கள் சொல்கிறீர்கள். ஆகவே உடனே இந்தச் சட்டத்திற்குத் திருத்தம் வர வேண்டியதில்லை யென்றும் பின்னால் வரட்டுமென்றும் தாங்கள் நினைக்கிறீர்களா?''
அதற்கு காந்திஜி பின்வருமாறு பதிலளித்தார்:-
"அது தவறான அபிப்ராயம். உடனேயோ அல்லது பின்னால் ஒரு காலத்திலோ திருத்தம் வரவேண்டுமென்பது எனது எண்ணமன்று. இந்த சட்டம் முழுவதுமே ரத்தாக வேண்டுமென்றும், ஜனங்களாலேயே தயாரிக்கப்பட்ட ஓர் சட்டம் சீக்கிரம் வரவேண்டுமென்றும் காங்கிரஸ் வற்புறுத்துகிறது. நானும் அதையே வற்புறுத்துகின்றேன்.
"மாகாண ஆட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவதில்லையென்று வாக்குறுதி தர கவர்னர்களுக்கு அதிகாரமிருப்பதாகவே நான் இன்னமும் கூறுகின்றேன்''
பிறகு நிருபர் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டார்:- ""கவர்னர் அபிப்ராயப்படி மிக்க நெருக்கடியான நிலையொன்று தோன்றிவிட்டால் அப்போதுகூட கவர்னர் தலையிடலாகாது என்பது தங்கள் எண்ணமா?''
"நான் அந்த மாதிரி நினைக்கவில்லை. ஒரு மந்திரி கேவலமான ஒரு தவறைச் செய்துவிடக்கூடும். எந்த ஜனங்களுக்காக அவர் வேலை பார்க்கின்றாரோ அந்த ஜனங்களுக்கே கெடுதல் செய்வதாக அவர் ஒரு காரியம் செய்துவிடலாம். அப்போது கவர்னர் செய்ய வேண்டியது தெளிவாகத் தெரிகிறது. அந்த மந்திரியைக் கூப்பிட்டு கவர்னர் காரணங்களைக் காட்டிப் பேச வேண்டும். மந்திரி அப்போதும் கேட்காவிட்டால் மந்திரி சபையையே கவர்னர் கலைத்துவிட வேண்டும். நாங்கள் கேட்கும் வாக்குறுதியில் "வேலையில் தலையிட வேண்டாம்' என்று கேட்கின்றோமேயன்றி "வேலையினின்று எங்களை தள்ளக்கூடாது' என்று கேட்கவில்லை''.
தினமணி (21-04-1937)