தாய்ப்பால் – தவறான நம்பிக்கைகளும், சரியான விளக்கங்களும் – நிறைவுப் பகுதி

சில சமயம் தாய் பாலூட்டும் போது குழந்தைக்கு தேவையான பால் கிடைத்திருக்காது. சில சமயம் நீண்ட நேரம் பாலூட்டினாலும் பசி தீர்ந்திருக்காது.
தாய்ப்பால் – தவறான நம்பிக்கைகளும், சரியான விளக்கங்களும் – நிறைவுப் பகுதி

1.பாலூட்டிய பின்னரும் சில குழந்தைகள் அழுது கொண்டே இருப்பது எதனால்?

சில சமயம் தாய் பாலூட்டும் போது குழந்தைக்கு தேவையான பால் கிடைத்திருக்காது. சில சமயம் நீண்ட நேரம் பாலூட்டினாலும் பசி தீர்ந்திருக்காது.  சிறுநீர், மலம் போதல், அதிக கதகதப்பு, குளிர் எடுத்தல், உடல் நலக்குறைவு, வயிற்று வலி, உடல்வலி, புண்,  மூக்கடைப்பு என அழுவதற்கு காரணங்கள் இருக்கலாம்.

2. போதுமான பால் குழந்தைக்கு கிடைத்திருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

குழந்தை பிறக்கும் போது இருக்கும் எடையினைப் பொருத்து, தினந்தோறும் ஏறும் எடை, ஒரு நாளைக்கு 6 முறைக்கு மேல் சிறுநீர் கழித்தல், பால் போதுமானதா என்பதினை அறிய சுலபமான வழிகளாகும்.  இரண்டாம் வாரத்தில், பிறந்த எடையினை குழந்தை அடைவது ,மாதம் ஒன்றிற்கு 600-900 கிராம் எடை ஏறாமல் இருந்தால் பரிசோதிக்க வேண்டும்.  தாய்ப்பால் பருகும் குழந்தையின் சிறுநீர் வெளிர் மஞ்சளாக இல்லாமல், அடர்த்தியான மஞ்சளாகவோ, ஒரு நாளைக்கு 6 முறைக்கு கீழேயோ இருந்தால், பால் குறைவு என சந்தேகிக்கலாம்.  பாலெடுக்கும் கருவி மூலம் பாலினை வெளியெடுத்து சரியான அளவினை கணக்கிட முடியாது.  ஏனெனில் தாயிடம் நேரடியாகப் பால் அருந்தும் குழந்தைக்கு, மார்பகத்திலிருந்து சுரக்கும் பாலின் அளவு அதிகமாக இருக்கும்.

3. மார்பகத்தின் அளவு மற்றும் கடினத் தன்மையினைப் பொறுத்து தான் தாய்ப்பாலின் அளவு இருக்கும்!!

கொழுப்புத் திசுக்கள் தான் மார்பகத்தின் அளவினை தீர்மானிக்கின்றன . கொத்து கொத்தாக அமைந்த ஆல்வியோலை என்னும் சிற்றரைகள் பால் சுரப்பிகளாகச் செயல்படுகின்றன. அவை தாய்ப்பாலின் சுரப்பு அளவினை தீர்மானிக்கின்றன., பெரும்பான்மையான மார்பகங்களில் ஒரே எண்ணிக்கையில் தான் பால் சுரப்பிகள் அமைந்துள்ளன.  மார்பகங்களின் அளவு, அமைப்பு கனமாக இருப்பது, நிரம்பியது போல் உணர்வது இவை பாலினுடைய அளவினை தீர்மானிக்காது.  பாலினை உள்வைத்துக் கொள்வதில் வேண்டுமெனில் வேறுபாடு உண்டு.  எப்போதும் மார்பகம் தாய்ப்பால் இல்லாமல் காலியாக இருந்ததில்லை.  குழந்தை  அருந்த அருந்த பால் தொடர்ந்து சுரக்கிறது.

4. எப்போதும் பாலூட்டுவது வலிக்கும்

முதல் சில நாட்களுக்கு பாலூட்டும் போது தோல் கவ்வும் உணர்வு மற்றும் வலி இருக்கும்.  சரியான முறையில் குழந்தை வாய் கவ்வி பால் அருந்தினால் வாயும், நாக்கும் கருவட்டம் மற்றும் மார்புக் காம்பினை காயப்படுத்தாது.  வலி இருப்பின் குழந்தை பாலூட்ட கவ்வுதல் மற்றும் மார்பகத்தில் பிரச்னை இருத்தல் காரணமாக இருக்கலாம். சொல்லப் போனால் சரியாகப் பாலூட்டுதல் வலி தராது.  சுரக்கும் ஆக்ஸிடேசின் இயக்க நீர் நல்ல உணர்வினையும் அமைதியையும் தாய்க்குத் தரும்.

5. தாய்ப்பால் மட்டும் பருகும், 6 மாதத்திற்குட்பட்ட குழந்தைக்கு தண்ணீர் தர வேண்டும்

முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் ஊட்டப்படும் குழந்தைக்கு தண்ணீர் அல்லது வேறு திரவ உணவோ தேவையில்லை என்பதினை ஏராளமான ஆராய்ச்சிகளின் முடிவுகள் நமக்குத் தெரிவிக்கிறது.  தாய்ப்பாலில் 88 சதவிகிதம் தண்ணீர்  சத்து உள்ளது.  அதுவே குழந்தையின் தாகத்தினை பூர்த்தி செய்துவிடும்.  மற்ற திரவ உணவுகள் தரப்பட்டால் குழந்தை பெற வேண்டிய தாய்ப்பால் கிடைக்காது.  மேலும் தண்ணீர் (அ) திரவ உணவுகள் தரப்படும் குழந்தைகளுக்கு 2 மடங்கு அதிகமாக, வயிற்றுப்போக்கு ஏற்படும்.

6. தாய்ப்பாலூட்டும் குழந்தைகளுக்கு வைட்டமின், தாதுப்பொருள்கள், இரும்புச்சத்து சொட்டு மருந்து தேவை

குறைந்தபட்சமாக, முதல் 6 மாதங்களில் குழந்தைக்குத் தேவையான வைட்டமின், தாதுச்சத்து மற்றும் இரும்புச்சத்து, ஆரோக்கியமான தாயிடமிருந்து குழந்தைக்கு கிடைத்துவிடுகிறது.  வைட்டமின் ’டி’ மட்டும் குறைவாக இருப்பதால் தினமும் குறைந்தபட்சமாக 20-30 நிமிடம் இளவெயிலில் தாயும் சேயும் உலவுவது, அதனை உற்பத்தி செய்துவிடும்.  இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் சத்து அளவு பாலில் குறைவாக இருப்பினும், குழந்தையின் உடலில் சேரும் தன்மை அதிகமாக இருப்பதால், தனியாக சொட்டு மருந்தாக தர வேண்டியதில்லை.  குறை மாதத்தில் பிறந்த குழந்தை, எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் 6 மாதத்திற்கு முன்னதாகவே, இச்சத்துகளை சொட்டு மருந்தாக தர வேண்டும்.

7. குழந்தைக்கு, வாந்தி மற்றும் பேதி இருந்தால் தாய்ப்பால் தருவதை நிறுத்த வேண்டும் !!

குடல் சம்பந்தமான நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்து தாய்ப்பால் மட்டுமே.  முதல் 6 மாதங்களில் வாந்தி பேதியினால் பாதிக்கப்படும் குழந்தைக்கு தாய்ப்பால் தருவது மட்டுமே மிகச் சரியான தீர்வு.  பாலில் உள்ள சர்க்கரையான லேக்டோஸ் சீரணிக்க குழந்தைகளுக்கு சிரமம் இருக்கும்.  அது 10-14 நாட்களில் சரியாகி வருவதால் எக்காரணத்தினைக் கொண்டும் தாய்ப்பாலினை நிறுத்தக் கூடாது.  லேக்டோஸ் இல்லாத பால்பவுடர்கள் தாய்ப்பாலிற்கு மாற்றாக என்றும் அமைய முடியாது.  நோய் வாய்ப்படும் குழந்தைகளுக்கு தாகம் அதிகம் இருக்கும்.  எனவே அடிக்கடி தாய்ப்பால் தரவும்.  புட்டிப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கு மிக மோசமாகவும், அதன் விளைவுகள் கடுமையானதாகவும் இருக்கும் என்பது உண்மை.

8. சளி, காய்ச்சல் போன்ற நோய் உள்ள தாய் தாய்ப்பால் தரக்கூடாது !!

சாதாரணமாக தாய்க்கு வரும் சளி, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களின் போது சில பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு தொடர்ந்து பாலூட்டலாம்.  கைகளைக் கழுவிய பின் குழந்தையை தொடுவது, உடல்மேல் வேறு துணியினைப் போட்டுபின் பால் தருவது, சளிக்கிருமி வராமல் இருக்க முகத்திரை அணிவது போன்றவை நோய்க்கிருமி குழந்தைக்கு பரவாமல் தடுக்கும்.  தாய்ப்பாலில் உள்ள நிறைய சத்துக்கள், திசுக்களில் நோய்க்கிருமியின் வளர்ச்சியினைத் தடுக்கும்.  தாய்க்கு நோயிருக்கும் போது, தாய்ப்பாலில் சுரக்கும் நுண்ணிய எதிர்ப்புப் பொருள் குழந்தை பாதிப்படையாமல் தடுக்கிறது.

9. மருந்து உட்கொள்ளும் தாய், பாலூட்டக் கூடாது !!

தாய் உட்ககொள்ளும் சில மருந்துகள் தாய்ப்பாலில் கலந்து வரும் சில மருந்துகளை உட்கொள்ளும் தாய்மார்கள் பாலூட்டக் கூடாது.  சில மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அதற்குப் பதிலாக தாய் வேறு பாதுகாப்பான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.  நவீன மருத்துவ மருந்துகளில் எவை எவை கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் போதும் உட்கொள்ளக் கூடாது  என்ற எச்சரிக்கையோடு வரும்.  கர்ப்பத்தடை மாத்திரைகள் பால் சுரப்பினை பாதிக்கும்.  ஆகவே குழந்தை பிறந்தபின் முதல் 6 வாரங்களுக்கு உபயோகப்படுத்தக் கூடாது.  புரோஜெஸ்டிரோன் கர்ப்பத்தடை மாத்திரைகளை 6-ம் வாரத்திற்கு பின் உபயோகிக்கலாம்.  மருத்துவர் பரிந்துரைக்காத, மருந்துகளைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசித்து பின் உட்கொள்ளவும்.

10.தாய்ப்பாலூட்டும் தாய்க்கு கர்ப்பம் தரிக்காது?

குழந்தைக்கு பாலூட்டும் போது சுரக்கும் இயங்கு நீர்கள் கருமுட்டை உற்பத்தியினை தடுக்கும்.  எனவே மாதவிலக்கு ஏற்படுவதும், கர்ப்பம் தரிப்பதும் தள்ளிப் போகலாம்.  இந்தமுறை ‘தாய்ப்பாலூட்டி கர்ப்பத்தடை முறை” எனப்படும்.  இந்த முறையினைப் பின்பற்ற 3 நிபந்தனைகள் உண்டு.

1.            பிரசவித்தபின் தாய்க்கு மாதவிலக்கு வந்திருக்க கூடாது.

2.            குழந்தை 6 மாதத்திற்குள் இருக்க வேண்டும்.

3.            தாய்ப்பாலினை மட்டும் தந்திருக்க வேண்டும்.

இந்த 3 நிபந்தனைகளையும் பின்பற்றிய தாய்க்கு கர்ப்பம் தரிக்க 2 சதவிகதற்கு கீழே தான் வாய்ப்பு.  6 மாதம் கழித்த பின்னரும் தாய்க்கு மாதவிலக்கு வராமலும் குழந்தைக்கு, அடிக்கடி தாய்ப்பாலூட்டிக் கொண்டு இருந்தாலும் ஒரளவிற்கு பாதுகாப்பு கிடைக்கும்.  மாதவிலக்கு வந்துவிட்டால், பாதுகாப்பு அதன்பின் இல்லை.  எனவே வேறு குடும்பக் கட்டுப்பாடு முறையினைக் கையாள வேண்டும்.

11.பாலூட்டும் தாய் மீண்டும் கர்ப்பம் தரித்தால் பால் தரக்கூடாது?

தாய்க்கு குறைமாதம் பிரசவம் முன்னர் ஏற்பட்டிருந்தால் பால் தர வேண்டாம்., முதல் குழந்தை பால் அளவு குறைவது (அ) பால் ருசி மாறுவதாலோ பாலூட்டுவதை விட்டு விடலாம்.  சொல்லப்போனால், குழந்தை பிறந்த பின்னரும் தாய் முதல் குழந்தைக்கும் பாலூட்டலாம்.  அதற்குத் தேவைப்படும் அளவு உணவினை தாய் உட்கொள்ள வேண்டும்.

12. பாலூட்டும் தாய் நல்ல சத்தான உணவு உட் கொள்ளவேண்டும் இல்லையெனில் குழந்தைக்குத் தேவைப்படும் சத்து கிடைக்காது

சத்துணவு பற்றாக்குறையுள்ள தாயிடமிருந்து கிடைக்கும் பாலின் அளவு மற்றும் தரம் சீராக மாறுபடாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  தாய் நல்ல சத்துள்ள, சரிவிகித உணவினை சாப்பிட வேண்டும்.  தாயின் உணவில் அதிக பால் தேவையில்லை.  தாய்க்கு ஒத்துக்கொள்ளும் பதத்தில் காரம், மசாலா குறைத்து உணவுகளை தரவும்.

13. தாய்ப்பாலூட்டும் குழந்தைகள் இணைஉணவினைச் சேர்க்கும் வரை இரவில் தூங்காது

தேவையான சத்து கிடைப்பதற்காக இரவு, பகல் பாராமல் முதல் சில மாதங்களுக்கு பாலூட்டுவது இயற்கையே.  தாய்ப்பால் வெகு எளிதில் சீரணமாவதால் இரவிலும் பாலூட்டுதில் பிரச்சனை ஏதுமில்லை.  இரவுநேரங்களில் பாலூட்டும் போது அதிக புரொலேக்டின் இயங்கு நீர் தாயிடம் சுரக்கும். பால் சுரப்பினை அதிகப்படுத்துவதுடன் தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆழ்ந்த உறக்கத்தினையும் புரோலேக்டின் அளிக்கிறது.  தூக்கம் வர தேவையான மெலடோனின் இயங்குநீர் 3 மாதத்திற்கு அப்புறமே, தேவையான அளவில் சுரப்பதால், உறக்கம் குழந்தைக்கு குறைவாகவே இருக்கும்.

14. படுத்துக் கொண்டு பாலூட்டுனால் காதில் சீழ் பிடிக்கும்?

இந்த நம்பிக்கை தவறு. பாட்டிலில் பாலூட்டும் குழந்தைக்கு மட்டும் 2.4 மடங்கு உட்காது சீழ் நோய் அதிகமாக ஏற்படுகிறது.  பாட்டிலிலிருந்து பாலினை உறிஞ்சும்போது ஏற்படும் வெற்றிட அழுத்தம் தொண்டைக்கும் பரவுகிறது.  அதனால் உட்காதில் நீர்கோர்த்து அதில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.  தாய்ப்பாலூட்டும் போது இந்தப் பிரச்சினை ஏற்படாது.  மேலும் பாட்டிலில் பருகும்போது குழந்தை உறிஞ்சாத போதும் தூங்கும் போதும் பால் வழிந்தோடவும் வாய்ப்பு உண்டு.

15.தாய் இரவில் பாலூட்டினால் பால் பிரச்சனைகள் வரும்?

உண்மையிலே பல பிரச்சனைகள் பாட்டிலில் பாலூட்டினால் தான் வரும்.  தாயிடம் பால் இருந்த போதும் மார்புக் காம்பினிலிருந்து வரும் பால் வாயின் பின்பகுதிக்கு போகிறது.  பாட்டிலில் அருந்தும் போது வாயின் முன், நடுப்பகுதியில் பால் கொட்டுகிறது.  எனவே பற்சொத்தை (பாட்டில் பால் பற்சொத்தை) ஏற்பட வாய்ப்பு உள்ளது.  பாட்டிலினை வாயினுள் வைத்துத் தூங்கும் குழந்தைக்கு, இரவு முழுவதும் பால் வாயினுள் கொட்டிக் கொண்டே இருக்கும்.  வாயினுள்ள கெட்ட நுண்ணுயிரிகள் வேகமாக வளரவும், பற்சொத்தையினை உருவாக்கவும் பாட்டில் பால் தருவது உதவும்.

16. தாய்ப்பாலூட்டுவது தாயின் சுதந்திர, வெளியுலக நடமாட்டத்தினை குறைக்கும்?

தாய்ப்பாலினைப் பெறும் குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்கள் தாயிடமிருந்து தான் கிடைக்கும் என்பது உண்மை.  இதற்காக, தாய் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே அடைபட்டு இருக்க வேண்டும் என்பது கிடையாது.  தாய்ப்பாலூட்டுதலை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தரலாம்.  ஒரு நீளமான டர்க்கிடவல், மற்றும் அமர இடம் (தாய்ப்பாலூட்டும் அறை உட்பட) இருந்தால் போதுமானது.  டர்க்கி டவலை மார்பின் மேல் போட்டு சுலபமாக எங்கு வேண்டுமானாலும் பால் தரலாம்.  பாட்டிலில் தர வேண்டுமெனில் என்னென்ன கூடவே எடுத்து செல்ல வேண்டும் என யோசித்துப் பார்த்தால் எது சிரமம் என்பது புரிந்துவிடும் தாயின் சுதந்திரத்திற்கு உதவியாக இருப்பது தாய்ப்பாலூட்டுதல் மட்டுமே ஆகும்.

17. தாயின் உடற்கட்டு, மார்பின் அழகினை தாய்ப்பாலூட்டுதல் கெடுத்துவிடும்?

தாயின் உடற்கட்டானது வயது, மரபணு, உடலமைப்பு உள்ளிட்ட நிறைய காரணங்களால் நிர்ணயிக்கப்படுகிறது.  கர்ப்ப காலத்தில் இயற்கையாகவே உடற்கட்டில் மாற்றம் ஏற்படும், பிரசவத்திற்கு முந்திய உடற்கட்டினை திரும்பப்பெற உடல், மார்பக மற்றும் வயிற்றுத் தசைகளுக்கு சரியான பயிற்சிகளைத் தர வேண்டும்.  அதிக தேவையில்லாத வெற்று கலோரி உணவுகளை உண்ணக் கூடாது.  தினம் தினம் வீட்டுவேலைகளையும், பயிற்சிகளையும் செய்து வர வேண்டும்.  உண்மையில் பாலூட்டும் தாய்க்கு தினமும் 500 கலோரி கூடுதலாக தேவைப்படுகிறது.  தாய் உண்ணும் உணவினை சரிவிகித உணவாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து பாலூட்டினால் தினம் தேவைப்படும் சத்து தாயின் உடலின் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் அதன்பின் சுலபமாக எடை குறைந்து உடற்கட்டு சீராகும்.

18. ஒரு வயதிற்கு அப்புறம் கிடைக்கும் பாலில் சத்து இல்லை?

ஒரு வயதிற்கு அப்புறமும் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தேவையான சத்தில் 3-ல் 1 பங்கு தாய்ப்பாலில் இருந்து கிடைக்கிறது என்பதினை லேன்செட் தொடர் (2016) நிரூப்பித்துள்ளது..  இணை உணவினை விட தரத்தில் உயர்ந்த சத்துக்களையும், நோய் எதிர்ப்பு பொருட்களில், இயங்குநீர் இவைகளையும் அளிக்கிறது.  எனவேதான் உலக சுகாதார நிறுவனம் 2 வயது வரை தாய்ப்பாலுடன் இணை உணவு தரவேண்டும் என பரிந்துரைக்கிறது.

19. பவுடர் பால் மற்றும் பாட்டிலில் உள்ள இரசாயனப் பொருட்கள் எவை?

பால் பாட்டில் மற்றும் நிப்பிளில், தாலேட் மற்றும் பிஸ்டீனால் உள்ளது.  பவுடர் பாலில் அலுமினயம் மற்றும் கனரக உலோகக்கூறு, மரபணுமாற்றம் செய்யப்பட்ட பொருட்கள், பைட்டே ஈஸ்ரோஜன் மற்றும் தீங்கிழைக்கக் கூடிய என்டிரோபேக்டர் முதலியன கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கனரக உலோகங்களான காரீயம், அலுமினியம், காட்மியம், பாதரசம் மற்றும் ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

20.கட்டின தாய்ப்பால் தரக்கூடாது?

பால்கட்டிய மார்பகத்தினை துணியால் கட்டுவது, நீர்போக்கி மருந்துகளை தருவது, நீர் அருந்துவதைக் குறைப்பது, இயக்குநீர் மருந்துகளை தருவது ஆகியவை தவறான சிகிச்சைகளாகும்.  குழந்தை மார்பைக்  கவ்வி சப்ப சரியான நிலையில் பொருத்த வேண்டும்.  சரியாக  சப்பவில்லையெனில் கையில் கறந்து எடுத்து குழந்தைக்கு தரலாம்.  மார்பில் வலியிருந்தால் பம்பு மூலம் எடுக்கலாம் பால் கறந்த பின் மீண்டும் பால் அருந்த வைக்கலாம்.

- டாக்டர் இர.செல்வன், குழந்தைகள் நல மருத்துவ நிபுணர், ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர், தாய்ப்பால் ஊக்குவிப்பார் கூட்டமைப்பு, ஈரோடு. தொடர்புக்கு - selvanr4@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com