ஈஸ்ட்ரோஜென் சுரப்பை துரிதப்படுத்தும் பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள் - அம்மாக்களே உஷார்!

பள்ளிச்  சிறுமிகள் இப்போதெல்லாம் பத்துப் பதினொரு வயதுகளிலேயே தங்களது குழந்தைமை கடக்கும் முன்பாகவே வெகுவிரைவாகப் பூப்படைந்து விடுகிறார்கள்,
ஈஸ்ட்ரோஜென் சுரப்பை துரிதப்படுத்தும் பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள் - அம்மாக்களே உஷார்!

பள்ளிச்  சிறுமிகள் இப்போதெல்லாம் பத்துப் பதினொரு வயதுகளிலேயே தங்களது குழந்தைமை கடக்கும் முன்பாகவே வெகுவிரைவாகப் பூப்படைந்து விடுகிறார்கள், இன்றைய இளம் அம்மாக்களை வெகுவாகக் கவலை கொள்ளச் செய்யும் விசயங்களில் இதுவும் ஒன்று;
 
ஏன் இப்படி ஆகிறது?! 
 
குடும்ப வாகு, மரபியல் காரணங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் இவையெல்லாம் தாண்டி இந்த விசயத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பூதம் ஒளிந்து கொண்டு சமீப காலங்களாக பெண்
குழந்தைகளைப் பெற்ற அம்மாக்கள் எல்லோரையும் அச்சுறுத்தி வருகிறது. அதைப் பற்றிய விழிப்புணர்வும் எச்சரிக்கையும் நம்மில் எத்தனை பேருக்கு உண்டோ தெரியவில்லை!
 
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள நேர்ந்தாலும் சரி அல்லது குழந்தைக்குப் தாய்ப்பால் போதவில்லை என்றாலும் சரி  சிலர் குழந்தை பிறந்த அன்றே கூட தங்கள் குழந்தைகளுக்குப்  பாலூட்ட  ஃபீடிங் பாட்டல்கள் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர். 
 
மகப்பேறு மருத்துவர்கள் பலர்  இதை அனுமதிப்பதில்லை. ஆனாலும் குழந்தை பசியால் அழுவதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் இப்படிச் செய்ய நேர்கிறது. குழந்தையின் பசி தீர்ப்பதில் தவறுகள் இல்லை. ஆனால் பயன்படுத்தப்படும் பொருளில் தான் பெரும் ஆபத்து ஒளிந்திருக்கிறது .
 
பிறந்த குழந்தைகளின் ஃபீடிங் பாட்டில்கள்  மட்டும் தான் என்றில்லை பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்கள், ட்ரான்ஸ்பரன்ட் ஸ்நாக்ஸ் டப்பாக்கள் இவை எல்லாமும் தயாரிக்கப் பயன்படும் பிளாஸ்டிக்குகள் பாலிகார்பனேட் பிளாஸ்டிக்குகள் என்று அழைக்கப்படுகின்றன.
 
இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக்குகளில்  இருக்கும் பிஸ்ஃபீனால்-A எனும் மூலக்கூறு ஃபீடிங் பாட்டில்கள் மூலம் குழந்தைகளின் உடலுக்குள் ஊடுருவி ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பை துரிதப்படுத்துகிறது. இதே மூலக்கூறு ஆண் குழந்தைகளின் உடலுக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா? ஆண் குழந்தைகள் வளர வளர அவர்களது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது.

வழக்கத்தை விட ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாவதால் தான்  இன்றைக்குப் பெண் குழந்தைகள் பத்து, பதினொரு வயதுகளிலேயே தங்களது விளையாட்டுப் பருவத்தை, குழந்தைமையைத் தொலைத்து அதி வேகமாகப் பூப்படைந்து  விடுகிறார்கள். அதற்கு காரணம் உள்ளிருந்து மிரட்டும் மாயபூதம் இந்த  பிஸ்ஃபீனால்-A  தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்!

அதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக காண்போமா!

குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கான உபயோகப் பொருட்களில்  இந்த பாலிகார்போனேட் பிளாஸ்டிக்குகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில்;
 

  • மிகவும் லேசானது, எடையற்றது.
  • தரமான பிளாஸ்டிக், உறுதியானது;
  • தோற்றத்தில் துல்லியமான கண்ணாடி போன்றது;
  • ஒளி ஊடுருவும்  தன்மை கொண்டது;
  • மின்சாரமோ, வெப்பமோ தாக்க இயலாதது;

- போன்ற லாபகரமான பிரதான காரணங்கள் இருக்கையில் இந்தப் பிளாஸ்டிக்குகளை தயாரிப்பாளர்களும் சரி நுகர்வோர்களும் சரி எப்படி தவிர்ப்பார்கள்!
 
பாலி கார்பனேட் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப் படும் வேறு பொருட்கள் ...
 
வீடியோ சி.டிக்கள், டி.வி.டிக்கள், எலக்ட்ரானிக் கருவிகள், ஆட்டோமேடிக் விளையாட்டுப் பொருட்கள், விளையாட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு சாதனங்கள், மருத்துவ சாதனங்கள் இத்யாதி, இத்யாதிகள்...

  • இதன் நீடித்த உழைப்பு
  • உடையாத் தன்மை
  • வெப்பம் தாங்கும் தன்மையினால்
  • இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருட்கள் மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

பிஸ் ஃபீனால் (A) என்றால் என்ன?

பிஸ்ஃபீனால்A   என்பது பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கின் மிக முக்கியமான கட்டுமானப் பொருள்.இது ஒரு வேதிப் பொருள், இதன் பெயர் 2 -2 பிஸ் 4  -ஹைட்ராக்சி ஃபினைல் ப்ரோபேன் (2 -2  Bis-4 -Hydroxy  phenyl  propane).

பாலி கார்பனேட் பிளாஸ்டிக்கின் பிஸ்பினால் -A  மிக மிக குறைந்த அளவில் நழுவி கரைந்து அது வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களில் ஊடுருவி நிற்கிறது என்று உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் நடத்தப் பட்ட மருத்துவ ஆய்வறிக்கைகளும் ஆராய்ச்சி முடிவுகளும் தகவல் தெரிவிக்கின்றன.

அப்படி உணவுப் பொருட்களில் கரைந்து ஊடுருவி நிற்கும் பிஸ்ஃபீனால் எவ்வளவு தெரியுமா?

௦ 0௦.000000005 (5 /100000000 ) மில்லிகிராம் அளவு அதாவது கோடியில் 5 மடங்கு தான். ஒருநாளில் நம் எடையின் ஒரு கிலோவுக்கு 0.0000125  மில்லி கிராம் அளவு பிஸ்ஃபீனால்-A நமக்குத் தெரியாமலே  நமது உடலுக்குள் சென்று விடுகிறது.

பிஸ்ஃபீனால்-A  என்னவெல்லாம் செய்கிறது?

இது மனிதனின் ஹார்மோன்களை நரம்பியல் செயல்பாடுகளைப் பாதிக்கிறது, ஜீன்களின் தன்மையை மாற்றி அமைக்கும் குணமுடையது என்று அறிவியல் சொல்கிறது. பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கில் இருந்து கரையும் பிஸ்ஃபீனால்-A  பெரியவர்களை விட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது.

முக்கியமாகப் பிறந்த குழந்தையிலிருந்து 18  மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு பிஸ்ஃபீனால் பாதிப்பு வழக்கத்தை விட நான்கு மடங்கு அதிகரிக்கிறது.

ஏனெனில் 3 மாத குழந்தையின் எடை சுமாராக 6  கிலோ தான் அப்படியெனில் பாதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கின் கோரமுகங்கள்...

பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கால் ஆன பால் பாட்டில்.தண்ணீர் பாட்டிலை சூடான நீரில் கழுவும் போது அல்லது சூடான பாலை ஊற்றும் போது பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கில் உள்ள பிஸ்ஃபீனால் -A  கரைந்து பாட்டிலுக்குள் உள்ள உணவில் கலந்து ஊடுருவி குழந்தையின் வயிற்றுக்குள்ளும் நுழைகிறது.

இதன் விளைவு என்ன?

  • வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தையின் மூளையைப் பாதிக்கிறது
  • இந்தக் குழந்தைகள் சீக்கிரமே பருவ வயதை எட்டுகின்றன.
  • தற்காப்பு சக்தியின் சமனத் தன்மை தடுமாறுகிறது.
  • இவர்கள் தங்கள் வாழ்நாளின் பிற்பகுதியில் பருமன், சர்க்கரை நோய், புற்று நோய்க்கு ஆளாகிறார்கள்.

பாதிப்பு?!

  • பிஸ்ஃபீனால் -A  எனும் வேதிப்பொருள் 1938  இல் கண்டுபிடிக்கப் பட்டது, இது செயற்கை ஈஸ்ட்ரோஜென் (பெண் ஹார்மோன்) உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. 
  • இதனால் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறையும்.
  • பிஸ்ஃபீனால்-A குழந்தைகளின் உடலில் ஈஸ்ட்ரோஜென் போலவே செயல்படும் .
  • நரம்பு மற்றும் நடத்தை தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.
  • எதிர்காலத்தில் ப்ராஸ்டேட் (PROSTATE) மற்றும் மார்பகப் புற்று நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

எல்லாம் சரி தான்... ஆனால் பாட்டிலில் பிஸ்ஃபீனால் A  உள்ளது என எவ்வாறு கண்டுபிடிப்பதாம்?

அது ரொம்ப ஈசி தாங்க!

பாட்டிலின் அடிப்பகுதியில் ' 7 ' என்ற எண் இருக்கும். ஒரு முக்கோணம் காணப்படும், அதற்கு அருகில் 'PC ' (Polycarbonate) என்ற எழுத்து இருக்கும், இப்படிக் குறிப்பிட்டிருந்தால் அந்த பிளாஸ்டிக்கில் பிஸ்ஃபீனால்  உள்ளது என்று அறியலாம் . 

  • முக்கோணத்திற்குள்   காணப்படும் எண்  ப்ளாஸ்டிக்கின் தரத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது, இவற்றில் 1, 2, 23  எண்களிருப்பின் அவை மிகவும் தரம் குறைந்தவை.
  • 3 ,5 ,7  எண் இருந்தால் பிளாஸ்டிக்கின் தரம் பரவாயில்லை .

சரி குழந்தைகளை பிஸ்ஃபீனால் A  யின் தாக்குதலில் இருந்து எப்படிக் காப்பாற்றுவது?!

  • கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தலாம்.
  • தொடர்ந்து பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தினால் பாட்டில்களை வெறும் சோப்பு நீரில் மட்டும் கழுவ வேண்டும்.
  • டிடர்ஜென்ட் அல்லது டிஷ்வாஷ் பார் பயன்படுத்தக் கூடாது .
  • பாட்டில் சூடாவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பாட்டிலை சூடான நீரில் கழுவுவதோ, வெயிலில் காயவைப்பதோ கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com