வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் இடதுபுற சிறுநீரகத்தை ஒட்டியிருந்த 6.2 கிலோ எடை கொண்ட கட்டி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியைச் சேர்ந்த சேகர் மனைவி கலா (45). தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இவர் சில மாதங்களாக வயிறு வீக்கத்தால் அவதியுற்றதோடு, மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதையடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலாவை சிறுநீரக மருத்துவர்கள் நாராயணமூர்த்தி, அருண்பிரசாத் உள்ளிட்டோர் தீவிர பரிசோதனைக்கு உள்படுத்தியதோடு, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையும் செய்தனர்.
அதில், கலாவின் இடதுபுற சிறுநீரகத்தை ஒட்டி கட்டி இருப்பதும், அதனால் சிறுநீரகம் செயலிழந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த வாரம் அறுவைச் சிகிச்சை மூலம் இடதுபுற சிறுநீரகத்துடன் 6.2 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு கலா நலமுடன் உள்ளதாக சிறுநீரகப் பிரிவு மருத்துவர்கள் தெரிவித்தனர்.