இந்தியாவில் பார்வைத் திறனற்றோர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக பார்வையின்மைக்கான புதிய வரையறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
உலக சுகாதார நிறுவனம்(ரஏஞ)வகுத்துக் கொடுத்துள்ள நெறிமுறைகளின் அடிப்படையில் இந்த புதிய வரையறை உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவைப் பொருத்தவரை, கடந்த 1976-ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட என்.பி.சி.பி. (பார்வையின்மையைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டம்) அளவுகோலின் அடிப்படையிலேயே பார்வையின்மை என்பது வரையறுக்கப்படுகிறது. அதாவது, ஒரு நபரால் 6 மீட்டர் தூரத்தில் காண்பிக்கப்படும் கைவிரல்களை எண்ண இயலாத தன்மையை பார்வையின்மையாக வரையறுத்து வருகிறோம்.
ஆனால், உலக சுகாதார நிறுவனமானது மேற்குறிப்பிட்ட சோதனைக்கான தூரத்தை 3 மீட்டராக நிர்ணயித்துள்ளது. எனவே, உலக சுகாதார நிறுவனம் வகுத்துக் கொடுத்துள்ள நெறிமுறைகளின் அடிப்படையிலேயே இனி பார்வையின்மை வரையறுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையற்றோரின் எண்ணிக்கை குறையும்: இந்நிலையில், இந்தப் புதிய அளவுகோலின் அடிப்படையில் பார்வையின்மை வரையறுக்கப்பட்டால் இந்தியாவில் பார்வைத் திறனற்றோரின் எண்ணிக்கை கணிசமாக குறையும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பார்வையின்மையைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் (என்.சி.பி.டி.) துணை இயக்குநர் பிரோமிளா குப்தா கூறியதாவது: சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 1.20 கோடி பார்வைத் திறனற்றோர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய வரையறையின்படி சோதனை நடத்தும்பட்சத்தில், இந்த எண்ணிக்கை 80 லட்சமாக குறைய வாய்ப்பிருக்கிறது என்றார் அவர்.