ஆண்களுக்கு ஏற்படும் பிராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் பாதிப்பு ஆண்டுக்கு 4.5 சதவீதம் அதிகரித்து வருகிறது என்று இந்திய பிராஸ்டேட் புற்றுநோய் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் சிவராமன் கூறினார்.
ஒய்எம்சிஏ மெட்ராஸ் மற்றும் இந்திய பிராஸ்டேட் புற்றுநோய் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய பிராஸ்டேட் சுரப்பில் ஏற்படும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் டாக்டர் அனந்தகிருஷ்ணன் சிவராமன் பேசியது:
ஆண்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய பிராஸ்டேட் புற்றுநோய் தற்போது அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு 4.5 சதவீதம் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த புற்றுநோய்க்கான பிரத்யேகக் காரணங்கள் கண்டறியப்படாவிட்டாலும், புகை, மதுப்பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் உள்ளிட்ட புற்றுநோய்க்கான பொதுவான காரணிகளாலும் இது ஏற்படக்கூடும்.
சாதாரண ரத்தப் பரிசோதனை மற்றும் டிஜிட்டல் மலக்குடல் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் 80 சதவீத புற்றுநோயை கண்டுபிடித்துவிட முடியும். எனவே, 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், குடும்பத்தில் புற்றுநோய் பாதிப்பு இருக்கும் ஆண்கள் 45 வயதிலும் ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
முழு உடல் பரிசோதனையில் பிராஸ்டேட் புற்றுநோய்க்கான பரிசோதனை இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.இந்த அறக்கட்டளையின் மூலம் ராணுவத்தினர், காவல் துறையினர், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு இலவசப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.