தொடர்கிறது அரசு மருத்துவர்கள் போராட்டம்
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கக் கோரி அரசு மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முதுநிலை மாணவர் சேர்க்கையில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்தாகும் வகையில் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது.
இதனை எதிர்த்து அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
2-ஆவது நாள்: சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுமார் 800 மருத்துவர்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை காலை 2 மணி நேரம் புறநோயாளிகள் சிகிச்சையை மருத்துவர்கள் புறக்கணித்தனர்.
தொடர்ந்து போராட்டம்: சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் கவுன்சில் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தனர்.
அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை புறநோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணித்தும் அறுவைச் சிகிச்சைகளை புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் சங்கத்தின் சார்பில் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்றார்.