குழந்தைகளைத் தாக்கும் தீர்க்கமுடியாத சில அரிய நோய்கள்!

புற்றுநோய், ஏய்ட்ஸ் போன்றவைக்குதான் இன்னும் சரியான தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை மற்றபடி அறிவியல் மற்றும் மருத்துவ துறையில் நாம் பெரிதும் வளர்ச்சி அடைந்து விட்டோம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். 
குழந்தைகளைத் தாக்கும் தீர்க்கமுடியாத சில அரிய நோய்கள்!

உலகில் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு வகை நோயால் பாதிக்கப்பட்டுதான் ஆவார்கள். பொதுவாக நமக்குத் தெரிந்த நோய்கள் என்னென்ன சிறியதென்றால் காய்ச்சல், ஜலதோஷம், வயிற்று வலி மற்றும் தலைவலி பெரிய நோய்கள் என்றால் இதய நோய், புற்று நோய், தொழு நோய் போன்றவை. ஆனால் நாம் அறியாத, ஏன்? இதுவரை நாம் கேள்வி கூடப் படாத பல நோய்களால் அவதிப் படுபவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள். 

இதைப்பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி அரிய நோய் தினம் கருதப்படுகிறது. நோய்கள் பொதுவாக கிருமிகள் வழியாகவோ அல்லது மரபணு வாயிலாகவோ ஏற்படுகின்றன. அவ்வாறு வரக்கூடிய நீங்கள் அறியாத சில நோய்களைப் பற்றி பார்ப்போம்.

1. பேட்டன் நோய்:

இது மரபணுக் கோளாற்றால் ஏற்படக்கூடிய நோய். இந்த நோய்க்கான அறிகுறி பெரும்பாலும் 5 வயதில் துவங்கி குழந்தை 10 வயதை எட்டுவதற்குள் அவர்களை முழுவதுமாய் முடக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்து விடும். முதலில் கண் பார்வையைப் பாதிக்க தொடங்கி பின்னர் கை, கால்களைச் செயலிழக்க செய்து குழந்தையின் மூளை வளர்ச்சி, சிந்திக்கும் திறன் ஆகிய அனைத்தையும் செயலிழக்க செய்து ஒருவரைச் சார்ந்து வாழும் நிலைக்கு அவர்களைத் தள்ளும். 24 மணி நேரமும் மற்றவர்களின் கண்காணிப்பில் வாழ்ந்தாலும் அதிகபட்சம் 20 அல்லது 30 வயதிற்கு மேல் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களால் உயிர் வாழ முடியாது. 

2. புரோஜெரியா நோய்:

இது மிகவும் அரிதான மரபணுக் கோளாற்றால் ஏற்படக்கூடிய நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை பிறக்கும்போதே வயதானவரைப் போல் தோல் சுருங்கிய தோற்றத்துடன் பிறக்கும். வயது முதிர்ந்தவர்களுக்கு இருக்கக்கூடிய பல பிரச்னைகளுக்கான அறிகுறிகள் இவர்களின் உடலிலும் காணப்படும். இவர்கள் வளர வளரச் சிறு வயதிலேயே முடிகள் கொட்டும், உடலளவிலும் விரைவில் தளர்ச்சி அடைந்து சோர்ந்து விடுவர். இருபது வயதின் ஆரம்பத்திலேயே முழுவதுமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டு, உயிர் இழக்கவும் நேரிடும்.   
 
3. கேண்டில் நோய்க்குறி:

மிகவும் அரிதான ஒரு அழற்சி நோயாகும் இது. இதனால் பாதிக்கப்பட்டவரின் உடல் எப்பொழுதும் நெருப்பைப் போல் கொதித்துக் கொண்டே இருக்கும். நோய்வாய்ப்பட்டவரின் வளர்ச்சி மிகவும் குறைவாகவும், தாமதமாகவும் இருக்கும், சருமத்தில் தடிப்புகளும், வீங்கிய கண்களும், தடிமனான உதடுகளும் இந்த நோய்க்குறிகளில் ஒன்று. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கை, கால் விரல்கள் ஒன்றோடொன்று இனைந்து கொள்ளும், கல்லீரல் படிப்படியாக வீக்கம் அடையும். இதைப்போன்ற உறுப்புகளின் வீக்கத்தாலேயே பாதிக்கப்பட்டவர்களின் மரணம் ஏற்படும்.

4. ஏஞ்செல்மேன் எனப்படும் சிரிப்பு நோய்: 

இது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஓர் சிரிப்பு நோய் ஆகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்கும். சிறிய தலை அமைப்பு, பேசுவதற்குச் சிரமப்படுவது, தூக்கமில்லாமல் கஷ்டப்படுவது போன்றவை இந்த நோயின் அறிகுறிகள். என்னதான் உடல் ரீதியாக எவ்வளவு துன்பங்களை அனுபவித்தாலும் எப்பொழுதும் சிரித்த முகத்துடனே இந்தக் குழந்தைகள் காணப்படும், இதனால் இதை ஆப்பி பப்பட் நோய்க்குறி என்றும் கூறுவார்கள். இவர்களால் சரியாக பேச முடியாவிட்டாலும் அதிகம் அறிவாற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். எப்பொழுதும் சிரித்து கொண்டே இருக்கும் இந்தக் குழந்தைகள் உண்மையில் என்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடிவதில்லை.     

5. தசைவளம் சீர்கேடு:

இந்த நோய் என்பது உடலை அசைக்க உதவும் தசைகளை பலவீனமடையச் செய்து, அவற்றை அழித்துவிடும். இதனால் நரம்பு, தோல், கண், மூளை ஆகிய அனைத்திலும் குறைபாட்டினை ஏற்படும், பெரும்பாலும் 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளையே இந்த நோய் தாக்கும். கழுத்து எலும்பு வலுவிழந்து தலையை நிமிர்த்தவே முடியாமல் மூச்சு விடவும் கஷ்டப்பட்டு முழுவதுமாக படுத்த படுக்கையாகி விடுவார்கள். இந்த நோய்க்கு இன்றுவரை எந்த மருந்தும் கண்டறியப்படவில்லை. எவ்வளவுதான் மருத்துவ கவனிப்பிற்கு கீழ் இருந்தாலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்சம் 20 வயதைத் தாண்டி வாழ்வதைக் கடினம். 

6. தாமதமாகச் செயல்படுவது:

சமீபத்தில் வெளியான டியூப்லைட் என்ற தமிழ் படத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தில் நாயகனுக்கு நன்கு காது கேட்கும் ஆனால் செவி வழி செல்லப்பட்ட செய்தியானது சாதரான மனிதர்களை விட சில விநாடிகள் தாமதமாக மூளையைச் சென்றடைந்து அதன் பின்னர் அதற்கான பதில் வெளியே வரும். கேட்கும் திறன் மட்டுமல்ல பார்ப்பது, உணர்வது போன்ற மற்ற புலன்களையும் இந்த நோய் பாதிக்கும். நம்முடைய ஐம்புலன்களும் வெறும் கருவிகள் மட்டுமே அதற்கான வேலைகளை அவை சரியே செய்ய மூளையிடமிருந்தே கட்டளைகள் வரும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்தச் செயல்பாடானது தாமதமாக இருக்கும். இது குழந்தைகளின் உயிரைப் பாதிக்காவிட்டாலும் சில சமயங்களில் அவர்களை ஆபத்தின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும். 


புற்றுநோய், ஏய்ட்ஸ் போன்றவைக்குதான் இன்னும் சரியான தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை மற்றபடி அறிவியல் மற்றும் மருத்துவ துறையில் நாம் பெரிதும் வளர்ச்சி அடைந்து விட்டோம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். அது ஒரு வகையில் உண்மைதான் என்றாலும், இன்னமும் சிறு குழந்தைகளை வாழும்போதே நரகத்தின் துயரை காட்டும் இதைப்போன்ற பல நோய்களுக்குத் தீர்வு கண்டுபிடிக்கப்படாத வரையில் அதை முழுமையாக ஒப்புக்கொள்வது என்பது இயலாத ஒன்று. அனைவருக்கும் ஆயிரத்தில் ஒருத்தர், லட்சத்தில் ஒருத்தர், கோடியில் ஒருத்தராக வேண்டும் என்று ஆசையுள்ளது ஆனால் இதைப்பொன்ற நோய்களும் லட்சத்தில், கோடியில் ஒருவரை மட்டும் பாதிப்பதால்தான் என்னவோ இது பலருக்கும் தெரியாமலேயே மறைந்து கிடக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com