தமிழ்நாடு நோயாளர் நிதி அமைப்பின் கீழ் வழங்கப்படும் மருத்துவ நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள், ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் உள்ளவர்களுக்கு மருத்துவ நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி உயிர் காக்கும் உயர் சிகிச்சைகளான இருதயம், சிறுநீரக அறுவை சிகிச்சை உள்ளிட்ட 12 வகையான அறுவை சிகிச்சைகளுக்கு குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை மருத்துவ நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பயனாளிகள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.