நான்கு வயது சிறுமியின் மூளைப்பகுதியில் உருவாகியிருந்த அரிய வகை புற்றுநோய்க் கட்டி அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
அஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு நாள்தோறும் வலிப்பு ஏற்பட்டது. மேலும் பேசுவதிலும் நடப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. பரிசோதனையில் சிறுமியின் மூளையில் புற்றுநோய்க் கட்டி உருவாகியிருப்பது தெரியவந்தது. அஸாம் மாநில மருத்துவமனைகளில் போதிய நவீன வசதி இல்லாததால் சிறுமி சிகிச்சைக்காக சென்னைக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பாலமுருகன் மற்றும் ரத்னா ஆகியோர் கூறியது:
மூளையில் இடதுபுறத்தில், பேச்சுக்குரிய பகுதியில் புற்றுநோய்க் கட்டி உருவாகியிருந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட இடத்தைத் தனித்து அறியும் வகையில் ஒருவகையான சாயம் மூளைக்குள் செலுத்தப்பட்டது. நுண்ணோக்கியின் மூலம் அவற்றைக் கண்காணித்தபோது, பாதிக்கப்பட்ட செல்கள் மட்டும் தனியாகக் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்து 5 செ.மீ., நீளமுள்ள கட்டி அகற்றப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் துல்லியாமாக புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டுள்ளது. இதன் பிறகு சிறுமிக்கு 33 அமர்வுகள் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.