சமூகத்தில் மருத்துவர்கள் கடவுளாக பார்க்கப்படுவதாக திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் கூறினார்.
சென்னையில் ஹம்சத்வனி அமைப்பின் 27-ஆம் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா, அடையாறில் உள்ள இளைஞர் விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் துணைத் தலைவர் முரளி தலைமை வகித்தார். சுந்தர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் கே.பாக்யாராஜ், சமூகத்தில் மருத்துவர்கள் கடவுளாகப் பார்க்கப்படுகின்றனர். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் இன்முகத்துடன் சிகிச்சையளித்து குணப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உயரிய சேவையால் கடவுளுக்கு இணையாக பார்க்கப்படுகின்றனர் என்றார்.
மியாட் மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவப் பிரிவு இயக்குநர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரனுக்கு 2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த குடிமகனுக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில், இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் செய்திருந்தது.