கூடுதலாக 41 மருத்துவமனைகளில் வாழ்வியல் சிகிச்சை மையங்கள்
தமிழகத்தில் கூடுதலாக 41 மருத்துவமனைகளில் வாழ்வியல் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிறப்பு உடல் பருமன் குறைப்பு சிகிச்சைத் தொகுப்பு அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இந்த மருத்துவமனையில் உள்நோயாளியாகவும், வெளிநோயாளியாகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உள்நோயாளிகள் ஒரு வாரம் முதல் 4 வாரம் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தச் சிகிச்சைத் தொகுப்பில் பக்கவிளைவுகள் இல்லாத நீராவி குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், இயற்கை உணவு, உண்ணாநோன்பு சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, யோகா, மசாஜ் சிகிச்சை உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படும்.
உள்நோயாளிகளுக்கு தங்கும் வசதியும் இலவசமாக வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது:
இந்திய முறை மருத்துவத்துக்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு ரூ.6.43 கோடி செலவில், சென்னை உள்ளிட்ட இடங்களில் 31 வாழ்வியல் சிகிச்சை மையங்களும், மத்திய அரசுடன் இணைந்து 10 மையங்களும் அமைக்கப்பட உள்ளன என்றார் அவர்.
விழாவில், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் மணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.