காசநோய் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்தினர் முழுமையாகக் குணமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா கூறினார்.
உலக காசநோய் தினத்தையொட்டி, காசநோய் விழிப்புணர்வு மையம் மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இலவசமாக காசநோயைக் கண்டறிந்து, நேரடி கண்காணிப்பு சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதில், சிறப்பம்சமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களை உள்ளடக்கிய தாம்பரம் அரசு நெஞ்சக மருத்துவமனை (மருந்து எதிர்ப்பு காசநோய் மையம்) மூலமாக காச நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவர்களின் கண்காணிப்பில் காசநோய் சிகிச்சை மேற்கொள்ள விரும்புவோருக்கு அரசின் இலவச மருந்துகள் கிடைக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2016-2017-ஆம் ஆண்டில் மொத்தம் 1,33,935 நபர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. அதில், காச நோயாளிகளாக 6,910 பேர் கண்டறியப்பட்டனர். இதில், 1,696 பேர் சளியில் கிருமி உள்ளவர்களாகவும், 1,497 பேர் சளியில் கிருமி அல்லாதவர்களாகவும், 900 பேர் மறு பதிவு நோயாளிகளாகவும் தேர்வு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 90 சதவீதத்தினர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். மேலும், பன்மருந்து எதிர்ப்பு காச நோயாளிகள் 56 பேருக்கு பிரத்யேக முறையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாநிலத்திலேயே முதல்முறையாக எச்ஐவி, தொற்று உள்ள காச நோயாளிகளுக்கு, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, 99 சதவீதம் நேரடி கண்காணிப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டக் கட்டுப்பாட்டில் இயங்கும் தாம்பரம் நெஞ்சக மருத்துவமனை தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு, பன்மருந்து எதிர்ப்பு காச நோயாளிகளுக்கு உலகத் தரமான 'பெடாக்கியூலைன்' சிகிச்சை தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டு, செயல்
படுத்தப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் பணியாற்றி வரும் அனைத்து முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்களுக்கு 14 புதிய இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர் இருமல், மாலை நேரக் காய்ச்சல், பசியின்மை, எடை குறைவு, சுவாசிப்பதில் சிரமம், சளி மற்றும் சளியில் ரத்தம் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்று இலவச காசநோய் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சுந்தரராஜு, காசநோய் துணை இயக்குநர் மீனாட்சி, இந்திய மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் விக்டோரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.