நான்கு வயது சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களிலும் தலா 4.5 செ.மீ. அளவுள்ள கற்களை நுண்துளை சிகிச்சையின் மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.
இது தொடர்பாக ஆர்.ஜி.யூராலஜி மற்றும் லேப்ராஸ்கோப்பி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஆர்.விஜயகுமார் சென்னை செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: சென்னையைச் சேர்ந்த காய்கறி விற்பனை செய்யும் பெற்றோரின் நான்கு வயது மகள் கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்தனர்.
சிறுமியைப் பரிசோதனை செய்ததில் இரண்டு சிறுநீரகங்களிலும் தலா 4.5 செ.மீ. அளவுள்ள கற்கள் உருவாகியிருந்தது தெரியவந்தது. குழந்தை பிறந்த 3 மாதங்களில் இருந்து இந்த கற்கள் சிறுநீரகத்தில் வளர்ந்து வந்துள்ளது. இதனால் அந்தச் சிறுமி ஊட்டச்சத்து குறைபாட்டுடனும், ரத்த சோகையுடனும் காணப்பட்டார். பொதுவாக குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு பதில் புட்டிப்பால் அல்லது பவுடர் பால் கொடுப்பதால் அதிலுள்ள வேதிப்பொருள்கள் சேர்ந்து சீறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும். இதை எளிதாகக் கையாள முடியும். ஆனால் சீறுநீரகங்களில் கற்கள் உருவாவது அரிதானது. எனவே, நுண்துளை சிகிச்சை மூலம் கற்களை அகற்றத் தீர்மானிக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் 4 மி.மீ. அளவுள்ள சிறுதுளைகள் போடப்பட்டன. அதன் வழியாக அல்ட்ரா சவுண்ட் கருவி செலுத்தப்பட்டு, கற்கள் உடைக்கப்பட்டு நீக்கப்பட்டன.