காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடாதீர்கள்!

நம்மில் பலர் தினமும் காலையில் காபி குடிக்காவிட்டால் தலை வெடித்துவிடும்
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடாதீர்கள்!

காபி

தினமும் காலையில் காபி குடிக்காவிட்டால் தலை வெடித்துவிடும் அளவுக்கு பலர் காபி மற்றும் டீக்கு அடிமையானவர்கள். ஆனால் காலையில் சூடான காபியை வெறும் வயிற்றில் குடிப்பது உடல் நலத்துக்கு கெடுதல் விளைவிக்கும் என்பது தெரியுமா உங்களுக்கு? காபியில் இயற்கையிலேயே அதிகமாக அமிலத்தன்மை உள்ளது.

காலை நேரத்தில் காபியை முதலில் குடிப்பதால் இது அதிகரித்து அல்சர் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். எனவே முதலில் ஒரு தம்ளராவது தண்ணீர் குடித்துவிட்டு சிறிது இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறிய கப் காபிக்கு மேல் பருக வேண்டாம். காபிக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபட வேண்டுமெனில் உடனடியாக காபி குடிப்பதை நிறுத்திவிட வேண்டாம். சிறுகச் சிறுக காபியின் அளவைக் குறைத்து அதன் பிறகு நிறுத்திவிடலாம். தினசரி 2 கப் காபி என்ற கட்டுப்பாட்டைப் பின்பற்றலாம். அதுவும் வெறும் வயிற்றில் குடிக்கவே கூடாது என்ற உறுதியினையும் பின்பற்றவேண்டும்.

தேநீர்

சிலர் டென்ஷன் ஏற்படுகிறது என்று அடிக்கடி டீ குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பார்கள். மேற்சொன்னபடி வெறும் வயிற்றில் காலை எழுந்ததும் பால் சேர்க்கப்பட்ட டீயை குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீயைப் பொருத்தவரையில் அதிக பிரச்னைகள் இல்லை. ஆனால் எதுவொன்றைப் பருகுவதாக இருந்தாலும் முதலில் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு அதன் பின் காபி டீ குடிப்பது நல்லது.

டீயிலும் காஃபின் அதிகம் உள்ளதால் அளவாகப் பயன்படுத்துவது நல்லது. டீயை அதிகமாகக் குடிப்பதால் புற்றுநோய் மற்றும் இதயநோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்றது ஒரு மருத்துவ ஆய்வு. உயர் ரத்த அழுத்தம், தூக்கப் பிரச்னைகள், எனவே அதிகமாக டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் உடனடியாக குறைத்துக் கொள்ளுங்கள். அல்லது படிப்படியாக நிறுத்தி கொள்ளுங்கள்.

பால் மற்றும் தயிர்

பால் மற்றும் தயிர் இயற்கையின் அருமருந்து என்பதில் மாற்று கருத்து இல்லை. தயிரை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டால் வயிறு உப்புசத்தை ஏற்படுத்திவிடும். காலையில் வெறும் வயிற்றில் சூடான பாலைக் குடிப்பதால் பிரச்னைதான். காரணம் அதில் கால்ஷியம், புரதம் மற்றும் வைட்டமின் பி போன்றவை இருப்பதால் உடலில் அவை செரிக்க அதிக நேரம் எடுக்கும்.

பாலை விட தயிர் விரைவாக செரிக்கக் கூடியது என்றாலும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிலுள்ள பாக்டீரியாக்கள் சில வேதியில் மாற்றங்களை வயிற்றில் ஏற்படுத்தி மந்தமாக்கிவிடும்.

தக்காளி

தக்காளியை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிடாதீர்கள். காரணம் அதிலுள்ள டேனிக் அமிலம் இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் சேர்ந்து ஒருவகையான கரைய முடியாத ஜெல்லை உருவாக்கிவிடும். இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாக ஒரு காரணமாகும்.

வாழைப்பழம்

இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிட்டால் அது ரத்தத்தில் மெக்னீஷியத்தின் அளவைக் கூட்டி விடும். இது தொடர் பழக்காமாக இருந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறது ஒரு ஆராய்ச்சி.

சோடா மற்றும் குளிர்பானம்

சோடா மற்றும் செயற்கை குளிர்பானங்களில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் உள்ளது. காலையில் எழுந்ததும் இதனை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள அமிலங்களுடன் ஒன்று கலந்து, வாந்தி அல்லது குமட்டல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இவைத் தவிர மது, காரமான உணவுகள், மாத்திரை போன்றவற்றையும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை உடலில் அசெளரியத்தை ஏற்படுத்துவதுடன் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும்; இரைப்பையின் உட்பகுதி பாதிக்கப்படும்.

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின் சி உள்ளதால் இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல. இவையும் அமிலச் சுரப்பை அதிகப்படுத்தி நெஞ்செரிச்சல் மற்றும் குடல்புண்களை ஏற்படுத்தும்.

காலை எழுந்ததும் நீர் ஆகாரம் குடித்து வாழ்ந்த நம் முன்னோர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நிறைந்த ஆயுளுடனும் இருந்தார்கள் என்பதை நாம் மறந்துவிட்டோம். எனவே உணவு குறித்த அதிக விழுப்புணர்வுடன் எதை எப்போது எவ்வகையில் சாப்பிடலாம் என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப சாப்பிட்டால் நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com