டெங்குவிலிருந்து தப்பிக்க சில எளிய வழிகள்!

டெங்கு காய்ச்சலை விட நம்மை பீதி அடையச் செய்வது அது குறித்த அச்சம் தான்
டெங்குவிலிருந்து தப்பிக்க சில எளிய வழிகள்!

டெங்கு காய்ச்சலை விட நம்மை பீதி அடையச் செய்வது அது குறித்த அச்சம் தான். தமிழகத்தில் தற்போதைய நிலையில் இது நமக்கு வந்துவிடுமோ என்று ஒரு தடவையாவது நினைக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தொலைக்காட்சி, பத்திரிகை, இணையம், சமூக வலைத்தளங்கள் என எங்கு திரும்பினாலும் டெங்கு பற்றிய செய்திகள். நம்முடைய பாரம்பரிய சித்த மருத்துவத்தில் இதற்கான தீர்வு உள்ளது என்று தெரிந்தும் மக்களுக்கு இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. 

நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எவ்வித நோயையும் தாக்குப்பிடிக்க நம் உடலால் முடியும். உணவில்  ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, நார்த்தம்பழம், நெல்லி ஆகியவற்றை தொடர்ந்து சேர்த்துக் கொள்வது நல்லது (சளி பிடிக்குமே என்று யோசிப்பவர்கள் ஒருமுறை டெங்குவை நினைத்துக் கொண்டால் அமைதியாக குடித்துவிடுவீர்கள்). மேலும் தினப்படி உணவில் மிளகு, பூண்டு, மஞ்சள், சீரகம் ஆகியவற்றை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். நம் தென்னிந்திய உணவு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் தான் உள்ளது. நமது பழக்கங்களிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச் செல்கிறோமோ நோய் நொடிகளுக்கு அவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று அர்த்தம்.

கொசுப் பிரச்னையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சில வழிகள் :

  • வியர்வை வாசம் இருந்தால் கொசுக்கள் அதிகம் கடிக்கும் என்பதால், தினமும் இருவேளை குளிப்பது நல்லது.
  • கொசுவை கொல்லும் எலெக்ட்ரானிக் பேட்களை பயன்படுத்தலாம்.
  • கொசு வலைகளைப் பயன்படுத்தலாம்.
  • மாலையில் வீட்டில் வேப்பிலை எண்ணெய், யூக்கலிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றைத் தெளிக்கலாம்.
  • உடலில் தேங்காய் எண்ணெயில் பளிங்கு சாம்பிராணி கலந்து இளஞ்சூடாக்கி, தேய்த்துக் கொண்டால் கொசு கடிக்காது. இது கிடைக்காதவர்கள் மருத்துவர்களிடம் கொசு கடிக்காமல் இருக்க தங்கள் சருமத்துக்கு ஏற்ற க்ரீம்களை வாங்கியும் பயன்படுத்தலாம்.
  • கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை எடுத்து, அதைத் தண்ணீரோடு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, வீட்டில் ஸ்ப்ரே  செய்யலாம். 
  • மழை நீர் தேங்கும் பொருட்களை, அப்புறப்படுத்த வேண்டும் அல்லது தண்ணீர் தேங்காத வகையில், தலைகீழாக வைக்க வேண்டும். தண்ணீரை சேமித்து வைக்கும் பாத்திரங்களை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும். 
  • குப்பையைச் சேர்த்து வைக்காமல், உடனுக்குடன் அப்புறப்படுத்துவது நல்லது. செடிகள் நிறைந்த வீட்டில், கூடுதல் கவனம் எடுத்துச் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • நொச்சி, வேப்பிலை, காட்டுத் துளசி, கற்பூரவல்லி, கற்றாழை போன்ற மூலிகைச் செடிகளை வளர்ப்பது நல்லது.

உணவுப்பழக்கம் :

டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள உணவில் இனிப்பைக் குறைக்க வேண்டும். கசப்பு அதிகம் சேர்க்க வேண்டும். காரம் தேவைப்படுவோர் மிளகாய்க்குப் பதில் குறுமிளகைச் சேர்க்க வேண்டும்.

மீனைத் தவிர பிற அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். காய்ச்சல் நோயாளிகளுக்கு அரிசிக் கஞ்சி, தானியக் கஞ்சி இருவேளை கொடுக்க வேண்டும். நீரோடு, பழச்சாறுகள், இளநீர், சீரகத் தண்ணீர் கொடுக்கலாம்.

கொசுக்கள் வராமல் இருக்க!

டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல நீரில் தான் உற்பத்தியாகும். எனவே வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், மேல்நிலைத் தேக்கத் தொட்டிகளில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொசுக்களைத் தவிர்க்க நொச்சி இலை சிறந்தது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ' லெமன் கிராஸ்' என்று அழைக்கப்படும் இலையை வாங்கி சிறுசிறிய கட்டுகளாகக் கட்டி வீட்டில் ஆங்காங்கே தொங்கவிடலாம். மேலும் வேப்பம் இலை, தழைளைக் கொண்டு புகை போடலாம்.

நிலவேம்பு குடிநீர்

டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு நிலவேம்பு குடிநீர்தான் முதல் நிலைத் தேர்வாக சித்த மருத்துவத்தில் உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்படும் அத்தனை பேரும் முதல் தேர்வாக நிலவேம்பு குடிநீரைப் பயன்படுத்த வேண்டும். நிலவேம்பு குடிநீருக்கு காய்ச்சலைப் போக்கும் தன்மையுள்ளது, காய்ச்சல்களை உருவாக்கும் வைரஸுக்கு எதிராக ஆற்றல் புரியம் தன்மை கொண்டது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. நிலவேம்பு குடிநீருக்கு வைரஸை கட்டுப்படுத்தும் தன்மை உண்டு என்பதை தமிழக அரசின் கிங் ஆய்வகத்தின் ஆய்வில் தெளிவானது.

நிலவேம்பு பொடி பயன்படுத்தக் கூடாது!

கடைகளில் நிலவேம்பு பொடி என்று விற்பனை செய்வதை வாங்கி அதில் குடிநீர் தயாரித்து பருகக் கூடாது என்று ஆயுஷ் மருத்துவத்துக்கான மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் பிச்சையா குமார் கூறினார்.

நிலவேம்பு குடிநீரில் நிலவேம்பைத் தவிர மிளகு, சுக்கு, கோரைக்கிழங்கு, வெட்டிவேர், விலாமிச்சவேர், சந்தனத்தூள், பற்படாகம், பேய்ப்புடல் ஆகிய 9 மூலிகைகள் உள்ளன. கடைகளில் நிலவேம்பு பொடி என்று விற்பனை செய்வதை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. 'நிலவேம்பு குடிநீர் சூரணம்' என்ற பெயரிடப்பட்ட பொடியையே வாங்க வேண்டும். அவற்றிலும் உரிமம் பெற்றதற்கான விவரங்கள், குறியீட்டு எண்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளதா என்று பரிசோதித்து வாங்க வேண்டும்.

நிலவேம்பு குடிநீர் சூரணத்தைக் கொண்டு கஷாயம் தயாரித்து மட்டுமே பருக வேண்டும். பொடியாக உட்கொள்ளக் கூடாது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com