பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணர் எம்.கே.மணியின் மருத்துவச் சேவையைப் பாராட்டி டாக்டர் கே.வி.திருவேங்கடம் விருது வழங்கப்பட்டது.
சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் மற்றும் காவேரி மருத்துவமனையும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் சிறந்த மருத்துவ சேவைக்காக 2017-ஆம் ஆண்டுக்கான டாக்டர் கே.வி.திருவேங்கடம் விருது, சர்வதேச அளவில் சிறுநீரக மருத்துவ சிகிச்சையில் புகழ்பெற்ற டாக்டர் எம்.கே.மணிக்கு வழங்கப்பட்டது.
காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் விருதை வழங்கினார்.
விழாவில் டாக்டர் எம்.கே.மணி பேசியது: சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்கு உறவினர்கள் அல்லாத அந்நியர் சிறுநீரகத் தானம் அளிப்பது தற்போது ஒரு தேர்வாக உள்ளது. இருப்பினும் சொற்ப பணத்துக்காக ஒருவர் தனது முக்கியமான உறுப்பை இழப்பது அறமற்றது.
தற்போதைய இளம் மருத்துவர்கள் நல்ல முன்மாதிரிகளைத் தேடுகின்றனர். மூத்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் அறத்தோடு செயல்பட்டால், அதனை இளம் மருத்துவர்கள் உடனே பின்பற்றுவார்கள் என்றார் அவர்.
டாக்டர் கே.வி.திருவேங்கடம், சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் புருஷோத்தம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.