பொறியியல் கல்வி பயிலும் மாணவர்கள் முதியோர்களுக்கு உதவும் மருத்துவக் கருவிகள், உபகரணங்களை உருவாக்க முன்வர வேண்டும் என்று முதியோர் நல மருத்துவ அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் வி.எஸ்.நடராஜன் வலியுறுத்தினார்.
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி மின்னணு, தகவல் தொடர்பியல் துறை சார்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:
இந்தியாவில் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கும் அதே வேளையில் முதியோர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு மொத்த மக்கள் தொகையில் 6.9 சதவீதமாக இருந்த 60 வயதிற்கும் மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டு 9.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தற்போது நாட்டிலேயே அதிக முதியோர்களைக் கொண்ட மாநிலமாக கேரளம் திகழ்ந்து வருகிறது. அங்கு மொத்த மக்கள் தொகையில் 12.6 சதவீதத்தினரும் பேர்களும், கோவாவில் 11.2 சதவீதத்தினரும் , தமிழ்நாட்டில் 10.3 சதவீதத்தினரும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்.
முதியோர்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டபோது அதிர்ச்சி அளிக்கும் பல தகவல்கள் கவலை அளிப்பதாக உள்ளது. வயோதிகம், நோய், இயலாமை ஆகிய மூன்று பிரச்னைகளால் சிரமப்படும் அவர்கள், குடும்ப, சமூக, பொருளாதார, புறக்கணிப்பு, அவமரியாதை, இழப்புகளையும் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
முதியோருக்கு உதவும் வகையில், முதியோருக்கான மருத்துவ உபகரணங்களை பொறியியல் மாணவர்கள் உருவாக்க முன்வர வேண்டும் என்றார் அவர்.