அரசு மருத்துவமனையில் பிறந்து 15 நாள் ஆன பெண் குழந்தை கடத்தல்

பிறந்து 15 நாள்களே ஆன ஒரு பெண் குழந்தை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவனையில் இருந்து கடத்தப்பட்டுள்ளது

பிறந்து 15 நாள்களே ஆன ஒரு பெண் குழந்தை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவனையில் இருந்து கடத்தப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ,குழந்தையின் தாயை ஏமாற்றி அழைத்து வந்து குழந்தையை பெண் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. அவரது மனைவி மணிமேகலை (27). இந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 
மணிமேகலை மீண்டும் கருத்தரித்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தம்பதியருக்குள் பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 
இதையடுத்து மணிமேகலைக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனைக்கு மணிமேகலையின் உறவினர் யாரும் வரவில்லை. இதனால், அந்த மருத்துவமனையில் பணியாற்றிய அவர் பெயரையே கொண்ட மணிமேகலை என்ற ஊழியர் அவருக்கு தேவையான உதவிகளைச் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, தங்கள் குடும்ப விஷயங்களையும் பறிமாறிக் கொண்டுள்ளனர்.
அப்போது தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், முதல் குழந்தையை வளர்க்கவே பொருளாதாரம் இல்லாத சூழலில் இரண்டாவது குழந்தையையும் வளர்ப்பது கடினம் என்று மணிமேகலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 
இதனையடுத்து அவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறிய மருத்துவமனை ஊழியர் மணிமேகலை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு திங்கள்கிழமை அழைத்து வந்துள்ளார். இருவரும் வாடகைக் காரில், அண்மையில் பிறந்த பச்சிளங்குழந்தையுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
மருத்துவமனைக்கு வந்ததும், உடல் பரிசோதனை செய்து கொண்டால்தான் வேலை கொடுப்பார்கள் என்று கூறி குழந்தையின் தாயை முழு உடல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார். குழந்தையை ஊழியர் மணிமேகலையிடம் விட்டு விட்டு தாய் பரிசோதனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனை முடிந்து வெளியே வந்தபோது அந்தப் பெண் குழந்தையைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயண பாபு கூறியது: குழந்தையின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
மருத்துவமனையில் உள்ள 180 கண்காணிப்பு கேமராக்களும் தற்போது செயல்பாட்டில் உள்ளன. மருத்துவமனைக்கு வரும் நபர்கள் தங்கள் குழந்தைகளை தங்களுடனே வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com