உலகிலுள்ள ஒவ்வொரு உயிரும் தன் சந்ததியை வளர்க்கும் நோக்கத்துடன் தான் செயல்படுகிறது. அதுதான் இயல்பு அதுதான் இயற்கை. காமம் என்பது உயிர்கள் ஜனிக்க இயற்கை தந்த ஓர் உணர்வு. அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் தவறு எங்கே நிகழ்கிறது எனில் அது முறைக் கேடாகும் போதும், வன்முறையாகும் போதும், அதிக நேரம் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதும்தான்.
மக்கள் காமம் பற்றிய செய்கைகளை விட, அதைப் பற்றிய சிந்தனைககளில் தான் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். சிலர் மனத்தளவில் காம உணர்வில் மூழ்கியிருப்பார்கள். அவர்கள் எண்ணத்தில் எப்போதும் காமமே நிரம்பியிருக்கும். மறைமுகமாக யாரும் அறியாமல் அவர்கள் இது போன்ற எண்ணற்ற செயல்களை செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் இறைவனையோ அல்லது தங்களுடைய குருவையோ நினைத்துக் கொண்டிருப்பதன் மூலம் மனத்தில் ஆழப் படிந்திருக்கும் காமத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியும். காம உணர்வுகள் மனத்தில் தோன்றுவதற்கு காரணமாய் உள்ளவைகளைக் கண்டறிந்து அவற்றிலிருந்து மனத்தை விடுவிக்க வேண்டும்.
இந்த வாழ்வின் உண்மையான நோக்கம் என்ன? ஒரு தடவையாவது யோசிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் அதற்குரிய விடை கிடைக்கும். இன்று இல்லையென்றாலும் என்றேனும் நிச்சயம் வாழ்தலுக்கான காரணம் தட்டுப்படும்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தை பக்தி பூர்வமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லா உணர்வுகளும் தோன்றும் உற்பத்தி ஸ்தானத்தை, மூல காரணத்தை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வுலகில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? உண்மையில் தெய்விகமான தன் ஆன்வாவை அல்லது தன்னைத் தானே அறிந்து கொள்வதே வாழ்வின் குறிக்கோளாகும். இந்நிலையை ஒருவர் உணர்ந்துவிட்டால் அவர் மீண்டும் பிறவி எடுப்பதில்லை. நம்மை நாம் உயர்த்திக் கொள்வதற்கு இவ்வுலக வாழ்வின் அனுபவங்கள் தேவை என்பதால் நாம் அனைவரும் இவ்வுலக வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.