பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் ஆவாரை தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் மிகக் கடுமையான வறட்சியையும் தாங்கி தன்னிச்சையாக வளரக்கூடியது. ஆவாரையின் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவாரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.
ஆவாரைப் பஞ்சாங்கத்தை தினம் ஒரு மேஜைக் கரண்டியளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் பருகிவர சர்க்கரை நோய், உடல் சோர்வு, நாவறட்சி, அடங்காத தாகம், தூக்கம் இன்மை ஆகியவை நீங்கும்.
ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ' என்ற பழமொழியில் இருந்து ஆவாரம்பூவின் மருத்துவ குணங்களை அறியலாம். சிலருக்கு உடலில் துர் நாற்றம் வீசும். அவர்கள் ஆவாரம் பூவை உணவில் சேர்த்துக்கொள்ள உடல் துர்நாற்றம் நீங்கும். உடல் பொன்நிறமாகும். ஆவாரம் பூவுடன் ஊறவைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால் நமைச்சல் துர்நாற்றம் நீங்கும்.
ஆவாரம் பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகிவந்தால் நீரிழிவு நோய் படிப்படியாக குடியும்.
உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூ கஷாயம் தவறாமல் குடித்து வர சூடு தணிந்து குளுமை அடையும். ஆவாரம் பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து அருந்த நாவறட்சி நீங்கும்.
சிலருக்கு உடல் சூட்டினால் கண் சிவந்து விடும். அவர்கள் ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து, நீர் விட்டு அரைத்துக் குழப்பிப் படுக்கும் முன் கண் புருவத்தின் மீது பற்றுப் போட கண்களின் சிவப்பு மாறும்.
ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து, அதனுடன் அதே அளவு அருகம் புல்லை வேருடன் சேகரித்து சுத்தம் செய்து இடித்து சூரணம் செய்து, இரண்டு தூளையும் ஒன்றாய் கலந்து ஒரு பாட்டிலில் போட்டு வைக்கவும். தினமும் காலை, மாலை, அரைத்தேக்கரண்டியளவு பசு நெய் சேர்த்துக் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்.
ஆவாரம் பூக்களை சேகரித்து பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.
இவ்வாறு சகலவிதமான நோய்களையும் அகற்றும் அருமருந்தாக ஆவாரம்பூ பயன்படுகிறது.