ஆத்திர அவசரத்துக்குப் பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்துகிறீர்களா? ஒன் மினிட் ப்ளீஸ்!

ரயில் நிலையம், பஸ் நிலையம், நூலகம், தியேட்டர் உள்ளிட்ட பொது கழிவறைகளை நீங்கள் பயன்படுத்தும் போது
ஆத்திர அவசரத்துக்குப் பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்துகிறீர்களா? ஒன் மினிட் ப்ளீஸ்!

ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், நூலகம், தியேட்டர் உள்ளிட்ட பொது கழிவறைகளை நீங்கள் பயன்படுத்தும் போது சற்று கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். காரணம் சுகாதாரமற்ற கழிப்பிடங்களைப் பயன்படுத்தும் போது உங்களுக்கே தெரியாமல் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. சுத்தமில்லாத அத்தகைய இடங்களில் அதிகளவில் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் கிருமிகள் உறைந்திருக்கும். இத்தகைய பொதுக்கழிப்பிடங்களின் சுத்தம் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், சில விஷயங்களில் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மருத்துவர் K. நாத் இது குறித்து கூறுகையில், 'ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இத்தகைய நோய்த்தாக்கம் இருக்கும் என்றாலும், பெண்கள் சிறுநீர் கழிக்கும் போது அவர்கள் வெஸ்டர்ன் டாய்லெட் இருக்கையில் நேரடியாக அமர்வதால் நோய்த்தாக்குதலுக்கான அதிக வாய்ப்புகள் அவர்களுக்கு உள்ளது, எனவே வெளியிடங்களில் பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்தும் போது முதலில் உங்கள் கைகளை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். எப்போதும் சானிடைஸர்களை (sanitisers) கைவசம் வைத்திருப்பது நல்லது.’

Roca Bathrooms Products Pvt Ltd நிறுவனத்தின் நிறுவனர் கே. ரங்கநாதன் உங்கள் பொதுக் கழிவறை அனுபவம் ஆரோக்கியமானதாக விளங்க சில குறிப்புகள் கூறுகிறார்.

கதவுகள் மற்றும் கைப்பிடிகளை எப்படி கையாள்வது?

பொது கழிவறைகளின் கதவை நீங்கள்  திறக்கும் போது அதன் கைப்பிடியை தொடாமல் திறக்க முயற்சி செய்யுங்கள். காரணம் அக்கதவுகளின் கைப்பிடிகளை பலரும் பயன்படுத்துவதால், வகைவகையான கிருமிகள் அதில் படிந்திருக்கும். அவை தொற்றுகளை ஏற்படுத்தலாம். கைப்பிடியின் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்தபடி திறக்க முயற்சி செய்யுங்கள். டிஷ்யூ பேப்பர் இல்லாவிட்டால் கதவைத் திறந்த பின் முதலில் கைகளை நன்றாகக் கழுவி விடுங்கள்.

சுத்தமான கழிவறையைத் தேர்ந்தெடுங்கள்

திரையரங்குகளில் அல்லது நூலகத்தில் உள்ள கழிவறைக்குள் நுழையும் போது முதலில் ஒவ்வொரு டாய்லெட்டையும் சரிபார்த்து,. எது சுத்தமாக இருக்கிறதோ அதை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள். ஈரமான தரையோ, அல்லது முன்பு பயன்படுத்தியவர் சுத்தமாக விடாமல் சென்றுவிட்டாலோ அதற்குள் நுழையவே நுழையாதீர்கள். மேலும் பொது கழிவறைகளில் இந்திய பாணியில் அமைந்துள்ள டாய்லெட்டைப் பயன்படுத்துவது நல்லது. வெஸ்டர்ன் டாய்லெட்டுகளை வெளியிடங்களில் பயன்படுத்துவதைக் கூடுமான வரையில் தவிர்த்துவிடுங்கள். வேறு வழியில்லாத நிலையில், டாய்லெட் சீட்டை கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தம் செய்துவிட்டுப் பயன்படுத்துங்கள். அது கைவசம் இல்லையென்றால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் டாய்லெட் பேப்பரால் இருக்கையை சுத்தமாகத் துடைத்தபின் பயன்படுத்துங்கள்.

எப்போது ஃப்ளஷ் செய்ய வேண்டும்?

சிலர் வெஸ்டர்ன் டாய்லெட்டில் சிறுநீர் கழித்தபின் அப்படியே அமர்ந்த நிலையில் ஃப்ளஷ் செய்வார்கள். இது தவறு. உள்ளாடைகளை அணிந்த பின்னர், அறையை விட்டு வெளியேறும் முன், டாய்லெட் இருக்கையின் மூடியை முழுவதும் மூடிய பின்னரே ஃப்ளஷ் செய்ய வேண்டும். காரணம் ஃப்ளஷ் செய்யும் போது காற்றில் பாக்டீரியாக்கள் பரவும். மேலும் ஃப்ளஷ் பட்டனை அழுத்தும் போதும் டிஷ்யூ பேப்பரை கைகளில் வைத்து அழுத்தவும். இதுவும் கிருமி தொற்றுவதைத் தவிர்க்க உதவும்.

பொறுமையாக காத்திருங்கள்

உங்களுக்கு முன்னால் ஒருவர் உள்ளே டாய்லெட்டைப் பயன்படுத்திவிட்டு வெளியேறுகையில், நீங்கள் உடனே பாய்ந்து உள்ளே செல்லாமல் சற்று பொறுமையுடன் காத்திருங்கள். அவசரம் என்றாலும் ஆரோக்கியமும் முக்கியம் அல்லவா? ஏற்கனவே அவர் ப்ளஷ் செய்துவிட்டு சென்றிருப்பதால் கிருமிகள் காற்றில் இருக்கும் எனவே நோய்த் தொற்று ஏற்படலாம். ஓரிரு நிமிடங்கள் கழித்துச் செல்வது நல்லது.

கைகளை நன்றாகக் கழுவி, உலர வைக்கவும்

கழிவறைக்குச் சென்றுவிட்டு திரும்பிய 20 நொடிகளுக்குள் கைகளை நன்றாக கழுவிவிடுங்கள். குழாய்களைப் பயன்படுத்தும் போது டிஷ்யூ பேப்பரால் அதைத் திறந்து மூடவும். ஆட்டோமெட்டிக் குழாயாக இருந்தால் பிரச்னையில்லை. எப்போதும் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி உங்கள் கைகளை நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள். ஈரம் என்றால் கிருமிகளுக்கு பிரியம் அதிகம் என்று சொல்லவும் வேண்டுமா?

உங்கள் உடைமைகள் பத்திரம்

பொது கழிவறைகளைப் பயன்படுத்தும் போது உங்கள் மொபைல் ஃபோன், பர்ஸ், கைப்பை உள்ளிட்ட பொருள்களையும் பத்திரமாக பாதுக்காக்க வேண்டும். கிருமிகள் அதன் மீதும் படிந்து பின்னர் உங்கள் மீதும் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. பொது கழிவறைகளின் தரை அல்லது சுவர்களில் ஒரு போதும் இவற்றையெல்லாம் வைக்காதீர்கள். எல்லாவற்றையும் ஹேண்ட் பேக்கில் பத்திரமாகப் போட்டு அதன் ஜிப்பை மூடி கைப்பையை தொங்க விடுவதற்கு கதவுக்குப் பின்னால் அமைக்கப்பட்டிருக்கும் ஆணியில் மாட்டிவிடுங்கள். சிலர் டிஷ்யூ பேப்பரால் ஹேண்ட் பேக்கை கூட துடைப்பார்கள். அவர்கள் சுத்த விஷயங்களில் தீவிரவாதிகளாக செயல்படுபவர்கள். அவர்களை விடுங்கள். உங்களால் முடிந்ததை நீங்கள் செய்தால் போதும்.

வெளியேறும் முன் ஒரு விஷயத்தை மறக்க வேண்டாம். உள்ளே சென்ற அதே முறையில் டிஷ்யூ பேப்பரால் கதவின் கைப்பிடியைத் திறந்து வெளியேறுங்கள்.

கைவசம் நிச்சயம் இது தேவை 

எப்போதும் உங்கள் கைப்பையில் ஹாண்ட் சானிடைஸர் வைத்திருங்கள். நீங்கள் போகும் எல்லா இடங்களிலும் தண்ணீர் வசதி இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே கிருமித் தொற்றிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள ஒரே வழி இதுதான். குறிப்பாக பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்தி வெளியேறும் போது உங்கள் கைகளை ஹாண்ட் சானிடைஸர் பயன்படுத்தி சுத்தப் படுத்தினால் கிருமித் தொற்று பிரச்னையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com