குழந்தைப் பருவ ஒபிஸிட்டிக்கு பால் காரணமில்லை: புதிய ஆய்வு முடிவு வெளியீடு!

பசும்பால் அருந்தும் பழக்கம் தொடர்ந்து நீடித்தால் ஒரு கட்டத்தில் உடலில் எடையைக் கூட்டும் ஹார்மோன்களின் செயல்பாடு அதிகரித்து குழந்தைப் பருவ ஒபிஸிட்டிக்கும் அது வழிவகுக்கும்
குழந்தைப் பருவ ஒபிஸிட்டிக்கு பால் காரணமில்லை: புதிய ஆய்வு முடிவு வெளியீடு!

குழந்தைப் பருவத்தில் பிற உணவுகளோடு ஒப்பிடுகையில் பால் அதிகம் அருந்தினால் அதனால் பலனேதும் இல்லை. உடல் பருமன் தான் அதிகரிக்கும் என்பது மக்களிடையே உள்ள பொதுவான நம்பிக்கை. முன்னொரு காலத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கூட பசுவின் சுத்தமான பால் இருந்தால் போதும், வேறு போஷாக்கான உணவு தேவையில்லை. பசும்பால் குடித்து பயில்வானாகலாம் என்றொரு நம்பிக்கை வயதானவர்களிடையே நிலவியது. பிறகு வந்த அயல்நாட்டு ஆராய்ச்சி முடிவுகள் குழந்தைகளுக்கு பாலே கொடுக்கத் தேவை இல்லை. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதும். அதைத் தவிர எதுவும் தேவையில்லை, பசும்பால் அருந்தும் பழக்கம் தொடர்ந்து நீடித்தால் ஒரு கட்டத்தில் உடலில் எடையைக் கூட்டும் ஹார்மோன்களின் செயல்பாடு அதிகரித்து குழந்தைப் பருவ ஒபிஸிட்டிக்கும் அது வழிவகுக்கும் என்றன. இதைக் கண்டு குழந்தைகளுக்கு பால் அருந்தத் தராமல் சத்து மாவுக் கஞ்சியை பழக்கப் படுத்திய அம்மாக்கள் நிறைந்திருந்தனர் நமது சம காலத்தில். இது ஒரு வகை. பாலை அடிப்படையாக் வைத்து எதற்கு இத்தனை குழப்பங்களும், சஞ்சலங்களும்?!

உண்மையில் பால் அருந்தினால் குழந்தைகள் குண்டாவார்களா? 

கடந்த 27 ஆண்டுகளாக இப்படி ஒரு கேள்வியைத் தங்களது ஆராய்ச்சியின் அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர். இவர்களது சார்பாக ஊடகங்களிடம் பேசிய ஆய்வாளர் அனெஸ்டிஸ் டெளகஸ் தெரிவிப்பது என்னவென்றால், பால் மற்றும் பால் பொருட்களை தொடர்ந்து உட்கொள்வதால் குழந்தைப் பருவ ஒபிஸிட்டி வரும் என்பது கற்பனை. இது தொடர்பாக கடந்த 27 ஆண்டுகளாக நாங்கள் நிகழ்த்திய ஆய்வு முடிவுகளின் படி, பால் மற்றும் பால் பொருட்களில் இருந்து கிடைக்கும் மினரல்கள், நியூட்ரிஷன்கள் அனைத்துமே மனித வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் அவர்களது உடல் ஆரோக்யத்துக்குத் தேவையான சத்துக்களை வழங்குவனவாக இருக்கின்றன. அப்படி இருக்கையில், பால் மற்றும் பால் பொருட்களைப் புறக்கணிப்பது நல்லதல்ல. என்கிறார் அவர். 

மனித ஆரோக்யத்தில் வாழ்நாள் முழுமைக்கும் தேவையான சத்துக்களைக் கொண்ட பாலை புறக்கணிக்க வைத்த இந்த கற்பனை நம்பிக்கை பரவியது எப்படி? என்பது குறித்து தெளிவாக ஆராய விரும்பி, 1990 முதல் 2017 வரையிலான ஆண்டுகளுக்கிடையில் பிறந்த குழந்தைகளை அடிப்படையாக வைத்து 32 விதமான நீள்வட்ட ஆய்வுகளையும் 43 விதமான குறுக்கு வெட்டு ஆய்வுகளையும் சேகரித்த தரவுகளின் அடிப்படையிலான 20 ரேண்டமைஸ்டு சோதனைகளின் வாயிலாக அதாவது இயற்கையாக மாடுகள் ஆடுகளில் இருந்து பெறப்பட்ட பால் மட்டுமல்லாது தாவரப் பொருட்களில் இருந்து செயற்கையாக உருவாக்கப்படும் பாலை அருந்தி வளர்ந்த குழந்தைகளுக்கிடையேயுமாக பால் அருந்துவதின் விளைவுகள் குறித்து தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வு முடிவுகளில் தெரிய வந்தது என்னவெனில், எக்காரணம் கொண்டும் பால் அருந்தும் வழக்கத்தால் குழந்தைகளிடையே ஒபிஸிட்டி வருவதில்லை என்பதே.

எனவே இனியும் பால் அருந்துவதால் குழந்தைப் பருவ ஒபிஸிட்டி வரும் எனப் பயந்து பாலை புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் இந்த மருத்துவக் குழுவினர்.

இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com