எந்தவொரு நோய்க்கும் மருந்து மட்டும் போதாது!

பொதுவாகவே தொடர்ந்து ஆங்கில மருந்து சாப்பிடுபவர்களுக்கு, உபாதைகளின் தாக்கம் குறையாதிருக்கும் போது
எந்தவொரு நோய்க்கும் மருந்து மட்டும் போதாது!

என் வயது 63. கடந்த 12 வருடங்களாக நீரிழிவு நோயினால் இன்சுலின் போடுகிறேன். கண் பாதிக்கப்பட்டுள்ளது. இன்சுலின், மற்ற மருந்துகளுடன் மதுமேக சூரணம் சாப்பிடலாமா? அதன் அளவு, நேரம், கண் பாதுகாப்பு, உணவு முறை பற்றி கூறவும்.

-விஜயகுமார், நெற்குன்றம்,
சென்னை.

பொதுவாகவே தொடர்ந்து ஆங்கில மருந்து சாப்பிடுபவர்களுக்கு, உபாதைகளின் தாக்கம் குறையாதிருக்கும் போது, மாற்று மருத்துவ முறைகளின் மூலம் விடிவுகாலம் பிறக்காதா என்று நினைப்பு ஏற்படுவது தற்சமயம் அதிகரித்துள்ளது. மற்ற மருத்துவ சம்பந்தமான மருந்துகளைச் சாப்பிடும் போது, ஆங்கில மருந்தை விட்டு விடலாமா என்று பலரும் கேட்கின்றனர். இது சரியான வழியல்ல. ஆங்கில மருத்துவர் குறிப்பிடும் நேரத்திற்குத் தகுந்தாற்போல மருந்தைத் தொடர்ந்து, மற்ற மருத்துவ மருந்துகளை குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ சாப்பிடுவதே சிறந்தது. அந்த வகையில் நீங்கள் குறிப்பிடும் மதுமேக சூரணம் எனும் மருந்தை சுமார் 5 கிராம் அளவில் காலையில் வெறும் வயிற்றில், சிறிது சூடான தண்ணீருடன் சாப்பிட்ட பிறகு, நடை பயிற்சி செய்யலாம். இதில் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனென்றால், நாட்டு மருந்துகளில் பலவற்றையும் தாய்ச்சரக்கு என்பார்கள். அதாவது தாய்வழியாக பால் அருந்தும் குழந்தைக்கு எத்தனை ஆரோக்கியம் கிட்டுமோ, அத்தனை ஆரோக்கியத்தையும் இம்மருந்துகளின் தொடர் உபயோகத்தின் மூலம் பெறலாம்.

கண் பாதுகாப்பிற்கு உணவில் பொன்னாங்கண்ணி கீரையை வாரம் இரு முறையாவது சமைத்து உண்ணலாம். திரிபலை எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூரணத்தை இரவு படுக்கும் முன் 5 கிராம் எடுத்து சிறிது சூடான பாலுடன் சாப்பிடலாம். வெயிலில் செல்லும் போது குளிர்ச்சி தரும் கண்ணாடி அணியலாம். குடை பிடித்துச் செல்வதால், வெயிலின்தாக்கம் தலையில் இறங்குவதைத் தவிர்க்கலாம். பாத அணிகளை சூடான தரையில் நடக்கும் போது அவசியம் அணிந்திருக்க வேண்டும். தலைக்கு வெந்நீர்விட்டுக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். திரிபலாதி தைலத்தைத் தலைக்குத் தேய்த்து அரை, முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு காலையில் குளிக்கலாம். கண்ணொளி தரும் ஆலோசகம் எனும் பித்தம் கண்ணில் இருப்பதால் சூட்டை கண்களில் உணருபவர்கள், மேற்குறிப்பிட்ட வகையில் உணவையும் மருந்தையும் செயலையும் அமைத்துக் கொள்வதால், கண்சூட்டை வெகுவாகக் குறைக்கலாம்.

உணவில், சில கொடிக்காய்களான அவரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய், கொத்தவரை, பீன்ஸ் போன்றவற்றை அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவதால், சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். அதுபோலவே, கத்தரிக்காய், சுண்டைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், வெங்காயம், நூல்கோல், சௌசௌ, முருங்கைக்காய், தக்காளி, குடமிளகாய், வெண்டைக்காய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாள், பச்சைப்பட்டாணி, காலிபிளவர், புதினா, கீரைவகைகள் ஆகியவற்றையும் சமச்சீராக மெனுபோல் தயாரித்து நீங்கள் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் ரத்தத்தில் சர்க்கரைச்சத்து கூடாதபடி கவனித்துக் கொள்ளும் சிறப்பான உணவு வகைகளாகும். நெல்லிக்காயும் மஞ்சள்தூளும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் சிறந்த உணவுப் பண்டங்களாகும். நெல்லிக்காய் சாறு 15 மி.லி. அளவில் எடுத்து, 3-5 கிராம் மஞ்சள்தூளை நன்கு அதில் கலந்து, 2 சொட்டு தேன் சேர்த்து - காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, மிகச் சிறந்த டானிக் மருந்து போல, சர்க்கரை உபாதை வந்தவர்களுக்கு தெம்பையும், மனதிற்குத் தெளிவையும் அளிக்கக் கூடியது. சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் பழங்களில் எலுமிச்சம் பழச்சாறு, தக்காளி சாறு, சாத்துக்குடி ஜூஸ் அருந்தலாம்.

மாதுளம்பழம், கொய்யாக்காய், அரைஆப்பிள், ஆரஞ்சுபழம் மிதமாய்ப் பயன்படுத்தலாம். அன்னாசி, பப்பாளி, தர்பூசணி, திராட்சை குறைந்த அளவில் சாப்பிடலாம்.

நரம்பு பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, நல்லெண்ணெய் குளியலை வாரம் இரு முறை செய்யலாம். அமுக்கராக் கிழங்கு எனும் அஸ்வகந்தா சூரணத்தை, சிறிது சூடான பாலுடன் இரவு உணவிற்கு 1/2மணி அல்லது 1 மணி நேரம் முன்பாகவோ சாப்பிட மிகவும் நல்லது. எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்ற சொல்லிற்கு ஏற்ப, தலையினுள் அமைந்துள்ள நரம்புகளை வலுவூட்ட, தலைக்கு க்ஷீரபலா தைலத்தை வெது வெதுப்பாகத் தேய்த்து அரை- முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு குளிக்கலாம். உடல் இளைத்துப் போகும் தறுவாயில், மஹாமாஷ தைலம், பலாஅஸ்வகந்தாதி தைலம் போன்றவற்றைக் கலந்து சூடாக்கி, உடலெங்கும் தேய்த்துக் குளிக்கலாம். பூனைக்காலிவிதை, தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலப்பனைக்கிழங்கு போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்படும் மருந்துகளை உட்கொள்வதால், ஆண்களுக்கு ஏற்படும் விந்தணுக்குறைபாடு, தளர்ச்சி ஆகியவை நீங்கும், நரம்புகளுக்கு வலுவூட்டும்.

வாழ்க்கை முறை, உணவு முறை, செயல்களில் காட்டும் நிதானம், மகிழ்ச்சியான மனநிலை, சீரான உடற்பயிற்சி போன்றவை ஒன்றோடு ஒன்று கைகோர்க்கும் போது, மருந்து சிறப்பாக வேலை செய்யும். அதைவிடுத்து மதுமேகசூர்ணம் மட்டும், ஆங்கில மருந்துகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகுமா என்றால் குணமாகாது. மருந்தினுடைய வீரியம், உட்புறப் பகுதிகளில், உடலில் விரைவாகச் சேர்க்கப்பட்டு, அவற்றினுடைய திறமை வெளிப்பட, மேற்குறிப்பிட்ட முறை அனைத்தும் தங்களுக்கு உதவிடக் கூடும்.
(தொடரும்)


பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com