36. ஐஸ்கிரீம் அவதிகள்! ஹோமியோபதி நிவாரணங்கள்!

குட்டிப்பாப்பா பரீதாவுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளைப் பிரியம். கண்ணால் பார்த்து விட்டால்
36. ஐஸ்கிரீம் அவதிகள்! ஹோமியோபதி நிவாரணங்கள்!

குட்டிப்பாப்பா பரீதாவுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளைப் பிரியம். கண்ணால் பார்த்து விட்டால் உடனே வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அடம்பிடிப்பாள். அவளுக்கு ஐஸ்கிரீம் சேராது என்பதால் பெரும்பாலான நேரங்களில் பெற்றோர் வாங்கித் தருவதில்லை. எப்போதாவது ஒருமுறை வாங்கிக் கொடுப்பார்கள். சுவைத்துச் சாப்பிடுவாள். பின் இரவு மூக்கடைத்து கொள்ளும். மருந்து, மாத்திரை கொடுத்தாலும் ஒரு வார காலம் ஜலதோஷம் நீடித்துவிடும். அவளுக்கும் கஷ்டம்! பெற்றோருக்கும் பெருங்கஷ்டம்.

முதன் முறையாக ஹோமியோ சிகிச்சைக்கு அவளை அழைத்து வந்தபோது, ஐஸ்கிரீம் சாப்பிட்டு தும்மலும் தடினமும் ஏற்பட்டுள்ளதாக அவளது அம்மா கூறினார். கசங்கிய மலராய் பரீதாவின் முகம் மாறியிருந்தது. அவளுக்கு மென்மையான அறிவுரை வழங்கிவிட்டு ‘ஆர்சனிகம் ஆல்பம் – 30’ ஹோமியோ மாத்திரை 3 வேளை கொடுத்தனுப்பினேன். தொந்தரவு நீடித்தால் அடுத்த நாளே மீண்டும் வரலாம் என்று கூறியிருந்தேன். ஆர்சனிகம் அவளுக்கு முழுநிவாரணத்தைக் தந்திருக்கும் என்பதால் மீண்டும் வரவில்லை.

***

ராஜனுக்கு வயது 48. சொந்தத் தொழில் பார்க்கிறார். வெளியில் அலைந்துவிட்டு வீடு திரும்பினால் குறைந்தது ஒரு செம்பு தண்ணீர் அருந்துவது அவரது வழக்கம். அன்று ஒருநாள் அப்படி அருந்தியும் தாகம் தணியவில்லை. குளிர்சாதனப் பெட்டியில் ஒரு பாட்டில் நீரை வைத்து வேகமாக குளிரூட்டி சில்லென்ற நிலையில் எடுத்துப் பருகினார். சிறிது நேரத்தில் தொண்டை கரகரத்தது. தொடர்ந்து இருமல் வரத் துவங்கிவிட்டது. அவரது துணைவியார் கஷாயம் தயார் செய்து சூடாகக் கொடுத்தார். இடையிடையே வெந்நீரும் பருகினார். சூடாகக் குடித்தால் தொண்டைக்கு இதமாக இருந்தது. இருமலும் சற்று தணிந்தது. ஆனாலும் மாலை நேரம் நெருங்க நெருங்க இருமல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியது. ஹோமியோபதி சிகிச்சையை நாடி வந்த அவருக்கு ‘ஆர்சனிகம் ஆல்பம் – 30’ ஒருவேளை மருந்தை வெந்நீரில் கலந்து சிறிது நேரத்திற்கு ஒருமுறை சிறிது சிறிதாக பருகுமாறு கொடுத்தனுப்பினேன். அன்றிரவு இருமலின்றி நன்கு தூங்கி மறுநாள் காலையில் நல்ல நிவாரணத்துடன் மீண்டும் வந்தார். மேற்கொண்டு மருந்து தேவைப்படாது என்றும் ஐஸ் வாட்டர் குடிக்க வேண்டாம் என்றும் கூறி அனுப்பி வைத்தேன்.

**

பார்வதி பாட்டிக்கு 65 வயது. குளிர்ந்த ஆகாரம் எதுவும் அவருக்கு ஒத்துக் கொள்ளாது. பேத்தி திருமணத்தின் போது சந்தோஷத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டார். அன்று காலையிலிருந்து மாலைக்குள் ஐந்தாவது முறை வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மிகவும் களைப்படைந்து விட்டார். அவருக்கு மருந்து தருமாறூ உறவினர் ஒருவர் அணுகிய  போது ஆர்சனிகம் ஆல்பம்-30 சிலவேளைகள் மட்டும் கொடுத்தனுப்பினேன். அடுத்த நாள் மாலையில் பார்வதி நேரில் வந்து இரவே வயிற்றுப் போக்கு நின்றுவிட்டதாகக் கூறினார். மேற்கொண்டு அவரது பொது உடல்நிலை குறித்து ஆலோசனை கேட்டுச் சென்றார்.

**

ஐஸ்கிரீம் அனைவரும் விரும்பும் ஓர் உணவுப் பொருளாகிவிட்டது. கடற்கரைக்கோ, பூங்காவிற்கோ, திரையரங்கிற்ஓ சென்றால் பெரும்பாலோர் கரங்களில் ஐஸ்கிரீம் குடியேறி விடுகின்றது. ஐஸ்கிரீம் இல்லாவிட்டால் கடற்கரைக் காற்றுகூட இதமாக இருப்பதில்லை! திரைப்படமும் சுவைப்பதில்லை! திருமண விழாக்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் சிற்றுண்டி அல்லது உணவுடன் ஐஸ்கிரீமும் இடம் பெற்று விடுகிறது. ஐஸ்கிரீம் நல்ல உணவா? ஐஸ்கிரீம் உண்பது ஆரோக்கியத்துக்கு நல்லதா? என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வெயிற்காலத்தின் தற்காலிக நிவாரணத்துக்காக பயன்படுத்தப்பட்ட ஐஸ், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் நாளடைவில் எல்லா சீசன்களிலும், ஏசி அரங்குகளிலும் கூட பயன்படுத்தும் அளவு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. இவை விளைவிக்கும் கேடுகள் ஏராளம் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

வெயிற்காலத்தின் பாதிப்புக்களைத் தணிப்பதற்கு எவ்விதத் தகுதியும் அற்ற பொருள் ஐஸ்கிரீம்! வெயிற்காலத்திற்கு ஏற்ற நிகரற்ற ஒரே பானம் தண்ணீர்தான். இளநீரும், மோரும், பதநீரும், பழச்சாறுகளும் மட்டும்தான் அற்புத ஆரோக்கிய பானங்கள். எலுமிச்சை மற்றும் சாத்துக்குடிச் சாறு அருந்தலாம். அவற்றில் அதிகளவு நார்ச்சத்தும் உள்ளது. அதிக இனிப்பூட்டப்பட்ட சில குளிர்பானங்கள் அருந்துவதால் பலவித வயிறு உபாதைகள் ஏற்படும்.

ஐஸ்க்ரீம் சாப்பிடும் பழக்கம் காரணமாக சைனஸ் நோய், டான்சில் நோய் மற்றும் குரல் பாதிப்பு நோய் போன்ற மூன்றுவித பொதுவான பாதிப்புக்கள் தான் ஏற்படும் என்று பலரும் கருதுகின்றனர். சிலர் நேர்மறையான பலன் உண்டு என்று நம்பி உண்கின்றனர். அதாவது ஐஸ்கிரிம் தொடர்ந்து சாப்பிட்டால் எடையும், மேனி அழகும் அதிகரிக்கும் என்று நம்புகின்றனர். ஐஸ்கிரீம் சாப்பிட்டு பருமனானால் ஏதிர் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும், எதிர்கால ஆரோக்கியம் எப்படி சீரழியும் என்று அவர்களுக்குத் தெரிவதில்லலி. உடல் பருமனை அதிகரிக்க உலகிலுள்ள எந்த மருத்துவ முறையும், எந்த மருத்துவரும் ஐஸ்கிரீமை பரிந்துரை செய்தது இல்லை.

ஐஸ்கிரீமிலுள்ள சர்க்கரைச் சத்தும், கொழுப்புப் பொருட்களும் நம் உடலிலுள்ள கொழுப்பைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகப்படுத்திவிடும். இதனைத்தான் உடல் பருமன் ஆகுதல் என்கிறோம். அதிகரித்து கொழுபுப்ச் சத்து நமது உடலில் ஓடுகிற ரத்த நாளங்களில் படிந்து படிந்து ரத்த நாளங்களின் விட்டம் குறைந்து, ரத்தக் குழாய் சுருங்கி விடுகிறது. இதுவரை தடையின்றி ஓடிய ரத்தம் ரத்தக்குழாய் சுருங்கிய நிலையில் சீரான ஓட்டம் தடைப்பட்டு குறைகிறது. இதனால் இதயத்துக்குச் செல்லக்கூடிய ரத்தத்தின் அளவும், ஆக்சிஜன் அளவும் குறைந்து, ரத்த அழுத்தம், மாரடைப்பு, தசை வலிமை குன்றுதல் ஏற்படுகின்றன.

ஐஸ்கிரீமில் அடங்கியுள்ள சர்க்கரை பல்வேறு நோய்களுக்கு காரணமாகிறது. குறிப்பாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது. ஐஸ்கிரிம் அல்லது அதிக இனிப்புள்ள செயற்கை பானங்கள் சாப்பிடும் போது அதனை ஜீரணிக்க அதிகளவு இன்சுலின் சுரக்கிறது. இதனால் திடீரென உடலின் குளூக்கோஸ் அளவு குறைந்து அதன் விளைவாக தலை வலியும் ஏற்படுகிறது.

உணவுக்குப் பின் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் செரிக்க உதவும் என்றொரு மூட நம்பிக்கையும் பலரிடமும் காணப்படுகிறது. இதனால் நாகரிக உணவு விடுதிகளில், விழாக்களில், திருமணங்களில் உணவுடன், மினி மீல்ஸ், மெட்ராஸ் மீல்ஸ், பாம்பே மீல்ஸ் ஆகியவற்றுடன் ஐஸ்கிரீம் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இது தவறான பழக்கம். உணவுக்குப் பின் நீர் அருந்துவது ஒன்றே செரிப்பதற்குப் போதுமானது. ஜீரணத்துக்கும் ஐஸ்கிரீமுக்கும் எந்தத் தொடர்புமில்லை.

குளிர்சாதனப் பெட்டியிலிருந்து அதிகக் குளிர்ச்சியான நீரை எடுத்து அருந்துவதும் மிகத் தவறான செயலாகும். இது பற்களுக்கும், ஈறுகளுக்கும் கேடு விளைவிக்கிறது. சளி சவ்வுகளையும் (Mucus Membranes) செயலிழக்கச் செய்கிறது. மேலும் குளிர்ந்த நீருக்கு பாக்டீரியா மற்றும் வைரஸைக் கட்டுப்படுத்தும் தன்மை கிடையாது. இந்நிலையில் அதிலுள்ள நோய்கிருமிகளை தொண்டையின் டான்சில் கோளங்கள் வடிகட்டித் தேக்கிவிடும். உடல் ஆற்றல் குறையும் போதும், நோய்க் கிருமிகளின் வீரியம் அதிகரிக்கும் போதும் நோய் விரைந்து தொற்றிக் கொள்ளும். இதன் காரணமாகவே பலருக்கும் ஐஸ்நீர் அருந்தியவுடன் சைனஸ் நோய் அல்லது டான்சில் அல்லது சளி, சுரம் அல்லது வயிற்று உபாதைகள் ஏற்பட்டு அவதிப்பட நேரிடுகிரது. எனவே ஐஸ்கிரீம், ஐஸ்வாட்டர் போன்றவற்றைத் தவிர்ப்பது அவசியம்.

- Dr.S. வெங்கடாசலம்

மாற்று மருத்துவ நிபுணர்

சாத்தூர்,

செல் – 94431 45700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com