28. காலமிது! காலமிது! கண்ணுறங்கு மகளே!

சக்தியளிக்கும் உணவு, சக்திக்கேற்ற உழைப்பு, புத்துணர்வு நல்கும் ஓய்வு என்பவை மனிதனின் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் ஆதாரங்கள்.
28. காலமிது! காலமிது! கண்ணுறங்கு மகளே!

சக்தியளிக்கும் உணவு, சக்திக்கேற்ற உழைப்பு, புத்துணர்வு நல்கும் ஓய்வு என்பவை மனிதனின் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் ஆதாரங்கள். இவற்றில் ஏற்ற இறக்கம் ஏற்படும் போது பாதிப்புக்களிலிருந்து தப்ப முடியாது. சுமார் 50 சதவிகித மக்கள் ஏதேனும் ஒரு தூக்க நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 15 சதவிகித மக்களே உதவிகளை நாடுகின்றனர் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Primary Sleep Disorders, Secondary Sleep Disorders, Parasomnias என்று தூக்கக் கோளாறுகள் காணப்படுகின்றன. தூக்கத்தில் ஏற்படக்கூடிய சில அசாதாரண செயல்பாடுகள் Parasomnias என்றழைக்கப்ப்டுகின்றன. தூக்கத்தினூடே அலறி விழிப்பது, சிறுநீர் கழிப்பது, பற்களைக் கடிப்பது, தூக்கத்திலேயே எழுந்து நடப்பது, தூங்கிய நிலையிலே பேசுவது போன்ற அசாதாரண செயல்பாடுகளை (குறைபாடுகளை) ஆங்கிலச் சிகிச்சை மூலமாகவோ, வெறும் கலந்தாலோசனை மூலமாகவோ முழுமையாகக் குணப்படுத்த இயலாது.

‘Somnambulism’ என்பது தூக்கத்திலேயே நடப்பதைக் (Sleep Walking) குறிக்கும். பெரும்பாலும் தூங்க ஆரம்பித்த முதல் சில மணி நேரங்களிலேயே. தூக்கத்திலேயே எழுந்து, வெற்றுப் பார்வையோடு நடைபயிலக்கூடிய இவர்களோடு மற்றவர்கள் தொடர்பு கொள்ள இயலாது. இந்த நேரத்தில் இவர்களை விழிக்கச் செய்தலும், உணரச் செய்தலும் குழப்படையச் செய்துவிடும். கோபமடையச் செய்து விடும். மன நிலையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இக்குறை உள்ளவர்களில் சிலர் தூக்கத்திலேயே எழுந்து தனது படுக்கையை மட்டும் ஒரு சுற்று சுற்றி ஒரு முறை நடந்துவிட்டு மீண்டும் படுத்துக் கொள்வார்கள். வேறு சிலரோ கதவைத் திறந்து வெளியே அருகிலுள்ள சில இடங்களுக்குச் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பி படுக்கையில் படுத்துக் கொள்வார்கள். இத்தகைய பழக்கமுள்ளவர்கள் தூக்கஹ்திலே எழுந்து, வீடு தாண்டி, நடந்து தெருவை, சாலையைக் கடக்கும் போது ஆபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன. எனவே, உரிய சிகிச்சை மூலம் பூரண குணமடையும் வரை இவர்கள் தூங்கும் சூழ்நிலையைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

தூக்கத்தில் எழுந்து நடமாடும் கோளாறுகளைக் குணப்படுத்த ஹோமியோபதியில் கீழ்கண்ட மருந்துகள் சிறப்பாக பயன்படுகின்றன. நேரம்மூர், ஓபியம், பாஸ்பரஸ், சிலிகா, சல்பர், ஆர்டிமிசியா, வல்காரிஸ், டிக்டேனஸ், காலிபுரோமேட்டம், ஜிங்கம், காக்குலஸ்.

தூக்கத்தில் பீதியடைந்து பயங்கர அலறலுடன் (sleep terror / night mare) படபடக்கும் இதயத்துடன், வியர்த்து விறுவிறுத்து, மூச்சிறைத்து விழிப்பவர்களுக்கும் ஹோமியோபதியில் சிறந்த சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். இப்படி விழிப்பவர்களின் பதற்றம் ஒரு நிமிடம் முதல் பத்து நிமிடங்கள் வரை நீடிக்கலாம். அந்த நேரத்தில் அவர்களைச் சமாதானப்படுத்தவோ, சாந்தப்படுத்தவோ முயற்சி மேற்கொண்டால் எந்த பலனும் இருக்காது. அவர்களாகவே தூங்கி விழித்த பின் எல்லாவற்றையும் மறந்து போவார்கள்.

சிலர் சில நேரங்களில் பயங்கரக் கனவு கண்டு விழிப்பதுண்டு. அத்தகைய கனவுகள் கொடூரமானதாகவும், தெளிவாகவும் இருப்பதுண்டு. கனவுகளின் பாதிப்பினால் விழித்து பயந்து சத்தமிட முயற்சிப்பார்கள். ஆனால் அசைக்க முடியாது. ஏதோ இனம்புரியாத ஒன்று நெஞ்சில் அழுத்துவது போல் உணர்வார்கள். சில நிமிடங்கள் அசையாமல் இருந்துவிட்டு பின் தெளிவடைவார்கள். அதற்குப்பிறகு விழிகள் மூடித் தூங்கவே பயப்படுவார்கள். (பெண் குழந்தைகளிடம் இந்நிலை அதிகளவில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது) இத்தகையவர்களுக்குத் தகுந்த ஹோமியோபதி சிகிச்சையும், உள்ளத்தை வலிமைப்படுத்தும் பயிற்சிகளும் தேவை. கீழ்க்கண்ட மருந்துகள் மிகவும் பயனளிக்கக் கூடியவை.

பேராக்ஸ் - தூக்கத்தில் திடீரென பயந்து அலறுதல் குழந்தை தாயை அல்லது தொட்டிலை இறுக்கிப் பிடித்துக் கொள்ளும்.       

சாமோமில்லா - பயங்களூட்டும் கனவுகளால் தூங்கிக் கொண்டே அழத் துவங்குதல்.

சிலிகா - தூக்கத்திலிருந்து திடீரென எழுதல், எழும் போது உடம்பெல்லாம் நடுங்குதல்.

ஒபியம் – தூக்கத்தில் பயந்து கத்திக் கொண்டு எழுதல்.

பேயோனியா – நெஞ்சு மீது பேயோ, பிசாசோ ஏறி அமுக்குவது போன்ற உணர்வுடன் விழித்தல், முனகுதல்.

நக்ஸ்வாமிகா – அதிகளவு இரவு உணவாலும், குடிப்பழக்கத்தாலும், ஜீரணக் குளறுபடிகளாலும் அமைதி கெட்டு தூக்கம் கெட்டு, தூக்கத்தில் ஆளை அமுக்கும் (Night Mare) உணர்வோடு விழித்தல்.

டிஜிடாலிஸ் : உயரத்திலிருந்து கீழே விழுவதாக அல்லது நீரில் விழுவதாகக் கனவு கண்டு கலவரத்தோடு விழித்தெழுதல்.

'Primary Sleep Disorders’ எனப்படும் ‘தூக்கம் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலை’ ஒரு பகுதியினரிடம் உள்ளது. இவர்களிடம் தூக்கத்தின் அளவு, தன்மை பாதிப்பு தவிர வேறு பாதிப்புகள் இருப்பதில்லை. காரண காரியமற்று வெறுமனே விழித்துக் கொண்டிருப்பது இவர்களின் வாடிக்கையாகி விடுகிறது. இத்தகையவர்களுக்கு ’பாசிபுளோரா’ ‘அவீனாசடீவா’ போன்ற ஹோமியோ மருந்துகள் மிகவும் பயன் தரக்கூடியவை. அலோபதியிலுள்ள தூக்க மாத்திரைகளே கதி என்ற நிலையிருப்பவர்களையும் ஹோமியோ மருந்துகள் மூலம் மீட்க முடியும்.

Secondary Sleep Disorders எனப்படும் தூக்கக் கோளாறுகள் பிற காரணங்களால் ஏற்படக் கூடியவை. மன எழுச்சிகள், அதிர்ச்சிகள், கவலைகள், தீவிர உடல்நலக் குறைபாடுகள், மனநோய்கள் போன்ற வேறு பல பிரச்னைகளோடு ஒட்டியே தூக்க பாதிப்பும் ஏற்படுகிறது. அடிப்படை காரணங்கள் சரி செய்யப்படும் போது தூக்க பாதிப்பும் சரியாகிவிடுகிறது.

பயம் மற்றும் அதிர்ச்சி காரணமாகத் தூக்கமின்மை ஏற்பட்டு, படுக்கையில் அமைதியற்ற நிலையில் தவிப்போருக்கு அகோனைட், மாதவிடாய் நிற்கும் காலத்தில் கர்ப்பப்பை எரிச்சல், அசெளகரியம் காரணமாக ஏற்படும் தூக்கமின்மைக்கு செனிசியா, முதுமையில் ஏற்படும் தூக்கமின்மைக்கு ‘பரிடாகார்ப்’ பின்னரவில் தூக்கமின்மைக்கு ‘பெல்லிஸ் பெரனிஸ்’, வீட்டு நினைவுத் தூக்கம் வராமைக்கு ‘காப்சிகம்’ கவலையினாலும் கொள்ளையர்கள் குறித்த கனவுக்குப் பின்பும் தூக்கம் வராமைக்கு ‘நேட்ரம்மூர்’ உடற்களைப்பால் உளைச்சலால் ஏற்படும் தூக்கமின்மைக்கு ‘ஆர்னிகா’, பகலில் சிறு தூக்கம் (catnap sleep – பூனைத் தூக்கம்) + இரவில் தூக்கமின்மைக்கு ‘சல்பர்’ தாங்க முடியாத வலியால் ஏற்படும் தூக்கமின்மைக்கு ‘சாமோமில்லா’ உறவினர்களுக்குப் பணிவிடை செய்யவேண்டிய கவலை கொண்ட மனநிலையில், விழித்துப் பராமரிப்பதால் ஏற்படும் தூக்கமின்மைக்கு ‘காக்குலஸ்’ எலும்பு வலிகளால் தூக்கமின்மைக்கு ‘டாப்னே இண்டிகா’ தொழில் குறித்த கவலைகளால் ஏற்படும் தூக்கமின்மைக்கு ’பிரையோனியா’ ‘அம்ப்ரா கிரீஸா’ போன்ற மருந்துகள் தூக்கமின்றித் துயரப்படும் மனிதர்களை நலப்படுத்தும். இயற்கையான இனிய தூக்கத்தை வழங்கும்.

‘என்ன சொல்லுவேன்

என்னுள்ளம் தாங்கலே!

மெத்தை வாங்குனேன்

தூக்கத்த வாங்கலே!  என்று சோகம் ததும்ப ஆழ்மனத் துயரங்களில் மூழ்கிக் கிடப்போருக்கு அமைதியான தூக்கம் எப்படி அமையும் இவர்களுக்கு ‘இக்னேஷியா’, ’நேட்ரம்மூர்’ போன்ற மருந்துகள் அளித்தால் மனசின் பாரம் குறையும். நிம்மதியான தூக்கம் அரவணைக்கும்.

’எண்ணிரண்டு வயது வந்தால்

கண்ணுறக்கம் இல்லையடி

ஈறேழு மொழிகளுடன்

போராடச் சொல்லுமடி

தீராத தொல்லையடி! என்று பருவ வயதினரின் காதல் கிளர்ச்சிகளின் போதும்,

‘தூங்காத கண்ணென்று ஒன்று

துடிக்கின்ற சுகமென்று ஒன்று’

என்று துள்ளித் துள்ளி மனம் விளையாடி மகிழ்கிற போதும், உடலும் மனமும் கிளர்ச்சி அடைந்த நிலையில், தூக்கம் தூரப் போய்விடும். மண நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் மணமகன், மணமகளுக்கும், சுற்றுலா செல்லத் தயாராகும் சிறுவர் சிறுமியர்களுக்கும், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற விழாக் காலங்களில் அனைத்து வயதினருக்கும் தூக்கம் தொலைந்து போகிறது. இத்தகைய சூழ்நிலைப் பின்னணியில் தூக்கமின்மைக்கு சிறந்த மருந்து ‘காபியாகுரூடா’.

‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

இது தான் எங்கள் உலகம்’ என்றும்,

‘சோறுன்னா சட்டி தின்போம்

சொன்னபேச்சு கேட்க மாட்டோம்

ராத்திரிக்குத் தூங்கமாட்டோம்

விடியக்காலம் முழிக்க மாட்டோம்’

என்றும் முழக்கமிடும் நபர்களின் முறையற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் குடிபோதைப் பழக்கங்களால் தூக்கம் கெடுகிறது. தூங்கி விட்டால், அதிகாலை 3 மணிக்கே விழிப்பே ஏற்படுகிறது. இத்தகையவர்களின் தூக்கமின்மை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நக்ஸ்வாமிகா சிறந்தது.

Dr.S.வெங்கடாசலம்

மாற்று மருத்துவ நிபுணர்

சாத்தூர் – 626203

செல். 9443145700       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com