பெண்களின் அந்தரங்கப் பிரச்னைகளும் ஹோமியோபதி தீர்வுகளும்

இந்திய சமூக அமைப்பில் ஒரு குடும்பத்தில் பெண்ணின் உடல்நலம் பாதிக்கப்பட்டால்
பெண்களின் அந்தரங்கப் பிரச்னைகளும் ஹோமியோபதி தீர்வுகளும்

இந்திய சமூக அமைப்பில் ஒரு குடும்பத்தில் பெண்ணின் உடல்நலம் பாதிக்கப்பட்டால் குடும்பமே பாதிக்கப்படுகிறது. எனவே பெண்கள் தங்கள் உடல்நலம் குறித்து அலட்சியமாக இருந்து விடக்கூடாது. பருவமடைந்த காலம் முதல் மாதவிடாய் நிற்கும் காலம் வரை ஏற்படக்கூடிய பெண்களின் உடல்நலப் பிரச்னைகள் ஏராளம். வெளியில் சொல்ல முடியாமலும், தங்கள் பிரச்னைகளுக்கு எந்தவிதச் சிகிச்சையும் மேற்கொள்ளாமலும் இருக்கும் பெண்கள் பலர். கல்வியும், நாகரிகமும் வளர்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் ஓரளவுக்குப் பெண்கள் தங்கள் அந்தரங்கப் பிரச்னைகளுக்கு மருத்துவம் செய்து கொள்ள முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. பெண்களுக்கு சிறப்பாக பயன் தரக்கூடிய மருந்துகள் ஹோமியோபதியில் அதிகளவு இருப்பதால், பெண்கள் தங்களின் எவ்வித உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளுக்கும் முழுநம்பிக்கையோடு ஹோமியோபதி சிகிச்சைக்கு வரலாம்.

பெண்களின் ஐந்து முக்கிய அந்தரங்கப் பிரச்னைகளைப் பற்றிப் பார்ப்போம்.

முன்மாதவிடாய் நோய்க்குறிகள்

P.M.S (Pre Menstrual Syndrome) எனப்படும் முன் மாதவிடாய் நோய்குறிகள் சில பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு ஓரிருநாள் முன்பாகவே வந்துவிடுகிறது. இதன் விளைவாக அன்றாட வாழ்க்கையும், பணிகளும் பாதிக்கப்படுகின்றன. மாதவிடாய் முற்றுப்பெற்றதற்கு (Menopause) பின்பு தான் P.M.S பிரச்னைகளிலிருந்து சில பெண்கள் விடுதலை அடைகின்றனர்.

பெண் உடலில் ஹார்மோன்கள் நடத்தும் திருவிளையாடல்கள் இவை. மாதவிடாய் சுழற்சிக் காலத்தில் ஹார்மோன் அளவுகளில் அதிக மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது கூறுணர்ச்சி மிக்க பெண்களை அதிகம் தாக்குகிறது. ஏற்கனவே மன அழுத்தமும் மன நெருக்கடிகளும் இருப்பின் P.M.S தொந்தரவுகள் மேலும் அதிகரிக்கின்றன.

P.M.S.ன் முக்கிய அறிகுறிகள் : பயம், பதற்றம், படபடப்பு, சிடுசிடுப்பு, கோபம், எரிச்சல், பலவீனம், தூக்கம் பாதிப்பு, பசியின்மை, உடல்வலிகள், தலைவலி, மார்பக வீக்கம், வலி, தாம்பத்திய வெறுப்பு போன்றவை P.M.S.ன் முக்கிய அறிகுறிகளாகும். பெண்ணுக்குப் பெண் அறிகுறிகள் வேறுபடலாம். துல்லியமாக உற்றுநோக்கி, பாதிப்புகளை ஹோமியோபதி மருத்துவரிடம் எடுத்துரைத்தால் குறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் மூலமும் உடலைப்புக்கேற்ற (Constitutional Remedy) மருந்து மூலமும் முழுகுணம் பெற முடியும். சிமிசிபியூகா, பல்சடில்லா, லாச்சஸிஸ், கல்கேரியா கார்ப், கிரியோசோட்டம், லில்லியம் டிக், பொவிஸ்டா, லைகோபோடியம் போன்ற போன்ற மருந்துகள் மாதவிடாய் அவதிகளிலிருந்து முழுவிடுதலை அளிக்க உதவுகின்றன.

வலிமிக்க மாதவிடாய் (Dysmenorrhea)

மரங்களில் செடி கொடிகளும் பருவ காலங்களில் பூத்துச் சிரிப்பது போல் பெண்களும் மாதமாதம் பூக்கிறார்கள். ஆனால் இது பல பெண்களுக்கு தொந்தரவும் துயரமும் ஏற்படுத்திவிடுகிறது. மாதவிடாயுடன் தொடர்புடைய பல பிரச்னைகளில் பெண்களை பெருமளவு வாட்டி வதைக்கும் பிரச்னை மாதவிடாய் கால வலிகள் தான். இதனால் மாதவிடாய் காலம் என்பது நெருப்பை நீந்திக் கடக்கும் துயர அனுபவமாக அமைந்துவிடுகிறது.

நரம்பியல் காரணங்களால், பிறப்புறுப்பில் ஏற்படும் ரத்த தேக்கத்தால் (Congestion), கர்ப்பப்பையின் உட்புற சவ்வு வீக்கத்தால், கர்ப்பப்பையின் இடப்பெயர்ச்சியால், கட்டிகள் போன்ற தேவையற்ற வளர்ச்சிகளால், நாட்பட்ட மலச்சிக்கலால், கடுமையான மனநல பாதிப்புக்களால் மாதவிடாயின் போது வலிகள் தோன்றுகின்றன அடிவயிறு, முதுகு, இடுப்பு, தொடைப்  பகுதிகளில் வலிகள் தாக்கக் கூடும். இது நீடித்தால் மலட்டுத்தன்மை, ஹிஸ்டீரியா மற்றும் பல மோசமான விளைவுகளைச் சந்திக்கக்கூடும். இந்தப் பிரச்னைக்கு அவரவர் குணங்குறிகளுக்கேற்ப ஹோமியோபதியில் மருந்துகள் அளிக்கப்படும் போது வலித்துயரம் நீங்கி இயல்பான மாதவிடாய் ஏற்படும். முக்கிய மருந்துகள் : கோலாசிந்திஸ், அக்டியாரசிமோசா, காலோபைலம், வைபூர்ணம் ஓபுலஸ், மேக்பாஸ், சைக்ளமென், லாக்கானினம், செபியா, பெல்லடோனா, சாந்தோசைலம், போராக்ஸ், பல்சடில்லா

மார்பக அளவும் ஆரோக்கியமும்

பெண்மைக்கு அழகூட்டும் மார்பகங்கள் பெண்கள் அனைவருக்கும் ஒரே அளவில் அமைவதில்லை. திசுக்கள் (Tissues), கொழுப்பு (Fat), சுரப்பிகள் (Glands), மற்றும் நாளங்களால் (Ducts) ஆனது மார்பகம். இதன் பருமனும் அளவும் பாரம்பரியக் காரணங்களாலும் கொழுப்பைப் பொறுத்தும் அமைகின்றன. மார்பகங்களின் பிரதானப் பணிகள் தோற்றப் பொலிவைத் தருதல், பாலுணர்ச்சியில் பங்கு வகித்தல், பால் சுரந்து ஊட்டுதல்.

மாதவிடாய் காலத்திலும், கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் மார்பகங்களின் அளவு, செயல்பாடு, தன்மைகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன. எனினும் வயதுக்கேற்ற, உயரம் மற்றும் உடல் அமைப்புக்கேற்ற மார்பகங்கள் அமையாவிட்டால் பெண்மனம் படும்பாடு கொஞ்சமல்ல! பருவமடைந்த பிறகும் குறைவான மார்பக வளர்ச்சி, ஒரு மார்பகம் மட்டும் அளவில் சிறுத்துக் காணப்படுதல், முன்பு வட்ட வடிவில் சதைப்பற்றுடன் அழகாக இருந்த மார்பகங்கள் இப்போது தட்டையாகிச் சிறுத்துவிடுதல் – காம்புகள் உள் அமுக்கி இருத்தல், கர்ப்பப்பை வளர்ச்சி அடையாமையுடன் (Infantile Uterus) மார்பகமே வளராமை அல்லது மிகச் சிறிய அளவில் மார்பக வளர்ச்சி காணப்படுதல், வயதுக்கும் உடலுக்கும் பொருந்தாத பெருத்த மார்பகங்கள் போன்ற அனைத்து வித மார்பக அளவு சார்ந்த பிரச்னைகளுக்கும் ஹோமியோபதியில் சிறந்த நிவாரணம் பெற முடியும். சிறைய மார்பகங்களின் அளவை அதிகரிக்கவும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும், சபல்செருலேட்டா, சிமாபிலா, கோனியம், மமரி, கல்கேரியா, கார்ப், ஓனோஸ்மோடியம், பிட்யூட்டரினம், அயோடியம், லைகோபோடியம், நக்ஸ்மாஸ் போன்ற ஹோமியோபதி மருந்துகள் நம்பகமான பலன் அளிக்கின்றன.

வெள்ளைப்பாடு என்ற தொல்லைப்பாடு

கர்ப்பப்பை சார்ந்த கோளாறுகளால் பலருக்கும் வெள்ளைப்பாடு ஏற்படுகிறது. கருப்பை வாய்ப்பகுதி அழற்சி, புண், சிறுகட்டிகள் காரணமாக மஞ்சள் நிற வெள்ளைப்பபாடு வரக்கூடும். அடிவயிற்றிலும் கடும்வலி ஏற்படும். கர்ப்பப்பை கட்டி, புற்று உள்ள பெண்களுக்கு மிகுந்த துர்நாற்றமுள்ள வெள்ளைப்பாடு ஏற்படும். இது நாளடைவில் அதிகளவிலும் உள்ளாடை நனைத்து கறையேற்படுமளவும், ரத்தம் கலந்தும் கூட வெளிப்படும். புணர்புழை அழற்சி காரணமாகவும் வெள்ளைப்பாடில் ரத்தம் கலந்திருக்கக்கூடும். ஆனால் அது புற்று அல்ல. பலருடன் உடலுறவு கொள்வதன் மூலம் வெட்டை நோய் (Gonorohea). கிரந்திநோய் (Syphillis) காரணமாகவும் வெள்ளைப்பாடு நிகழ்கிறது. காப்பர் டி போன்ற கருத்தடைச் சாதனங்களைப் பொருத்துதல், செருகு மாத்திரைகளை பயன்படுத்துதல், களிம்புகள், சிலவகை மருந்துகள் காரணமாக அழற்சி உருவாகி வெள்ளைப்பாடு ஏற்படுமானால் அவற்றை நீக்கினால் மட்டுமே வெள்ளைப்பாடு நீங்கும்.

வெள்ளைப்பாடு துயரிலிருந்து விடுதலைபெற போராக்ஸ், அலுமினா, செபியா, பல்சடில்லா, சிபிலினம், பியூலெக்ஸ், கிரியோசோட்டம், நைட்ரிக் ஆசிட், ஓவாடோஸ்டா போன்ற ஹோமியோ மருந்துகள் உறுதுணை புரிகின்றன.

பாலுணர்வுப் பிரச்னைகள்

பதின்பருவம் (teen Age) சுவாரசியமானது. இந்த வயதில்தான் ஆண் பெண் இருவரும் எதிர் எதிர் துருவங்களை விட வேகமாக ஈர்க்கப்படுகின்றனர். இத்தகைய ஈர்ப்பை, இனக்கவர்ச்சியை (Infactuation) காதல் என்று தவறாகக் கருதி பாதிப்புக்குள்ளாகும் பருவப் பெண்கள் ஏராளம். ஊடகங்களின் தவறான வழிகாட்டல்களால், மேற்கத்திய கலாச்சார தாக்கங்களால், அதீத உடல், மன இயக்கங்களால் சுய இன்பப் பழக்கத்திற்கு ஆண்களைப் போலவே பெண்களும் ஆட்படுகின்றனர்.

இன்றைய பெண்களில் 60 சதவிகிதங்கள் மேற்பட்டோரிடம் சுய இன்பப் பழக்கம் காணப்படுகிறது. எப்போதும் பாலுணர்வு பற்றியே எண்ணுதல், அடிக்கடி சுய இன்பம் காணுதல், நீண்ட கால சுய இன்பப் பழக்கத்தால் உறுப்பு குளிர்ந்து, தளர்ந்து, பலவீனமடைதல், பருவமடையும் முன்னரே இப்பழக்கத்திற்கு அடிமையாதல், தூக்கத்தில் சுய இன்பத்தில் ஈடுபடுதல், மாதவிடாய் நாட்களில் சுய இன்ப உணர்வு மேலோங்குதல், கீரிப் பூச்சிகளால் பெண்ணுறுப்பில் நமைச்சல் ஏற்பட்டு சுய இன்பத்தில் ஈடுபடுதல், ஆண்கள் தொட்டாலே பாலுணர்வு கிளர்ந்து சுய இன்பத்தில் ஈடுபடுதல். பெண்ணுறுப்பில் கடுமையான தினவு ஏற்பட்டு சுய இன்பம் காணுதல், விதவைகள் மற்றும் துணைவரைப் பிரிந்து வாழும் பெண்களுக்குக் கட்டுப்படுத்த இயலாத பாலுணர்வு தூண்டுதல் நிலை காரணமாக சுய இன்ப பழக்கம் ஏற்படுதல் போன்ற வெவ்வேறு தன்மைகள் கொண்ட இப்பழக்கத்திலிருந்தும், அதன் தீய பின் விளைவுகளிலிருந்தும் பெண்களின் ஆரோக்கியத்தை மீட்க ஹோமியோபதியில் நூற்றுக்கும் மேலான மருந்துகள் பயன்படுகின்றன. அவைகளில் சில : அக்னஸ் காஸ்டஸ், பிளாட்டினா, ஜிங்கம் மெட், கலாடியம், ஜெல்சிமியம், ஸ்டாபிசாக்ரியா, மூரக்ஸ், அபிஸ்மெல். மிகக் குறிப்பாக சுய இன்பப் பழக்க அடிமைத்தனத்திலிருந்து பெண்களை மீட்க ஓரிகானம், கிராஷியோலா, மூரக்ஸ், ட்ரைகிளினம் ஆகிய மருந்துகள் சிறந்த பயனளிக்கின்றன. பெண்கள் தங்களின் எவ்வித பாலியல் குறைபாடுகளையும் ஹோமியோபதி சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்து இல்லறத்தை நல்லறமாக்க முடியும்.

Dr. S. வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

செல் 94431 45700

Email – altmed@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com