அறுவைச் சிகிச்சை என்பது மருத்துவ விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாக வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் அறுவைச் சிகிச்சை மருத்துவத்தில் (MS) முதுநிலைப் பட்டம் முடித்து ஆயிரக்கணக்கில் நிபுணர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் சேவை இவர்கள் சார்ந்துள்ள அலோபதி மருத்துவத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. எதற்கெடுத்தாலும் ஆபரேஷன் தேவை என்றும் இல்லையென்றால் உயிர் பிழைப்பது அரிது என்றும் எச்சரிக்கப்பட்டு ஆபரேஷனுக்கு பலவந்தமாக உட்படுத்தப்படும் போக்கு அதிகரித்துக் கொண்டே செல்வதை மக்கள் கசப்புடனும், வெறுப்புடனும் உணரத் தொடங்கிவிட்டனர். நோயுற்ற உறுப்புகளை நீக்குவதால் மட்டுமே நோயைக் குணப்படுத்த முடியும் என்பது தவறு. நோயுற்ற உறுப்பு முழு அளவில் பாதிக்கப்பட்டால் அல்லது உயிரிழப்பு ஏற்படும் என்றால் மட்டுமே அறுவைச் சிகிச்சை தேவை.
அறுவை சிகிச்சையை ஹோமியோபதி முற்றிலும் எதிர்க்கவில்லை. பிறவி உடலமைப்புக் கோளாறுகள் (Congenital Deformities) விபத்துகளால் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட கடுமையான சேதங்கள், முற்றிய நிலைக் கட்டிகள் போன்ற சூழ்நிலைகளில் அறுவைச் சிகிச்சையின் நியாயமான பயன்பாட்டை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது.
ஆனால் மருந்து, மாத்திரைகளாலேயே குணப்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ள பல்வேறு வியாதிகளை, அதற்கான அவகாசமோ, வாய்ப்போ வழங்காமல், முயற்சிகள் மேற்கொள்ளாமல் அறுவைச்சிகிச்சை செய்வதைத்தான் ஹோமியோபதி விமரிசிக்கிறது. அறுவைச் சிகிச்சை வெற்றி என அறிவித்தாலும், பாதிக்கப்பட்ட பாகத்தை அறுவை செய்து நீக்கியதால் மட்டும் முழு குணம் ஏற்பட்டுவிடாது என்பதை விரைவிலேயே ஒவ்வொரு நோயாளியும் மறு அனுபவமாக (Reexperience) தெரிந்து கொள்கின்றனர்.
வியாதிக்குறிகளை அகற்றுவதால் மட்டுமே வியாதியின் அடிப்படை நீங்கி விடுவதில்லை. எனவேதான், டான்சில் ஆபரேஷன், செய்து கொண்ட குழந்தைகளுக்கு, டான்சிலால் ஏற்பட்ட எந்தத் தொந்திரவுகளுக்கும் மாறிவிடுதில்லை. வாழ்நாள் முழுவதும் தொடர்கின்றன. மூக்கடைப்பிற்காக (Nasal Blockage) சிகிச்சைக்கு செல்லும் பெரும்பாலோர்க்கு மூக்கினுள் உள்ள சிறிய சதை வளர்ச்சியைக் (POLYPY) காரணம் காட்டி அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. இருந்த போதிலும் மூக்கடைப்பு நீங்குவதில்லை. மீண்டும் சதை வளர்ச்சி ஏற்படுவதைத் தடுக்க முடிவதுமில்லை. அதே போல, மூல சதையை வெட்டி எறிவதால் மட்டும் மூலத்தின் மூலகாரணம் மறைந்துவிடுவதில்லை. மீண்டும் மூல அவஸ்தைக்கு ஆளாகின்றனர். பலமுறை மூல அறுவைச் சிகிச்சைக்கு ஆளானவர்கள் இறுதியில் ஹோமியோபதி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வருவதைப் பார்க்கிறோம்.
இருதய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு வலி ஏற்பட்டு மாரடைப்பு வரை செல்கிறது. ஆங்கில மருத்துவத்தில் அடைப்பை நீக்குவதற்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. அடைப்பின் அளவு 70% வரை இருந்தால் கூட ஆபரேஷன் இன்றி ஹோமியோபதி மருத்துவத்தில் குணமாக்க முடிகிறது.
கர்ப்பப்பை கட்டிகளை ஆங்கில மருத்துவத்தில் ஊசி, மருந்துகள் மூலம் குணமாக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. எனவே கர்ப்பப்பை அறுவைச் சிகிச்சை (Hysterectomy) மூலம் அகற்றப்படுகிறது. முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய்க் கட்டிகள் தவிர மற்ற அனைத்து வகை கட்டிகளையும் ஆபரேஷன் இன்றி குணப்படுத்த நம்பகமான வாய்ப்பு உள்ளது.
சிறுநீரகக் கற்களை அறுவைச் சிகிச்சையின்றி அகற்றுவதோடு மேலும் கற்கள் உருவாகும் போக்கினை தடுக்கவும் ஹோமியோ சிகிச்சை உதவுகிறது. உடலியல் அமைப்பையும், வளர்சிதை மாற்றக் கோளாறுகளையும் சரிசெய்கிறது.
உண்மை ஒரு நாள் வெளியாகும் – அதில்
உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்
என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. பல சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை தேவையில்லை என்ற உண்மை ஒரு புறமிருக்க, பல்வேறு நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு சற்று முன்னும் பின்னுமாய் ஹோமியோபதி மருத்துவர்களை சந்திக்கின்றனர். தவிர்க்க முடியாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்வதாகக் கூறி அறுவை சிகிச்சை காரணமாக பாதிப்புகள் நேராமல் இருக்க ஹோமியோ மருந்துகளைக் கோருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஹோமியோபதி அருந்துணை புரிந்து காக்கிறது. பொதுவாக அறுவை சிகிச்சைக்கு முன்பு எந்தவிதமான உணவும், பானமும் மருந்தும் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டாலும் ஹோமியோ மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் அறுவை சிகிச்சைக்கு எந்தவித இடையூறும் நேர்வதில்லை.
தேவைப்படும் காரணங்கள், சூழ்நிலைகள், குறிகளுக்கு ஏற்ப அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் கீழ்கண்ட ஹோமியோ மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.
Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர் – 626203
செல் – 9443145700