ஆபரேஷன் ஜாக்கிரதை!

அறுவைச் சிகிச்சை என்பது மருத்துவ விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாக வளர்ந்துவிட்டது.
ஆபரேஷன் ஜாக்கிரதை!

அறுவைச் சிகிச்சை என்பது மருத்துவ விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாக வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் அறுவைச் சிகிச்சை மருத்துவத்தில் (MS) முதுநிலைப் பட்டம் முடித்து ஆயிரக்கணக்கில் நிபுணர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் சேவை இவர்கள் சார்ந்துள்ள அலோபதி மருத்துவத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. எதற்கெடுத்தாலும் ஆபரேஷன் தேவை என்றும் இல்லையென்றால் உயிர் பிழைப்பது அரிது என்றும் எச்சரிக்கப்பட்டு ஆபரேஷனுக்கு பலவந்தமாக உட்படுத்தப்படும் போக்கு அதிகரித்துக் கொண்டே செல்வதை மக்கள் கசப்புடனும், வெறுப்புடனும் உணரத் தொடங்கிவிட்டனர். நோயுற்ற உறுப்புகளை நீக்குவதால் மட்டுமே நோயைக் குணப்படுத்த முடியும் என்பது தவறு. நோயுற்ற உறுப்பு முழு அளவில் பாதிக்கப்பட்டால் அல்லது உயிரிழப்பு ஏற்படும் என்றால் மட்டுமே அறுவைச் சிகிச்சை தேவை.

அறுவை சிகிச்சையை ஹோமியோபதி முற்றிலும் எதிர்க்கவில்லை. பிறவி உடலமைப்புக் கோளாறுகள் (Congenital Deformities) விபத்துகளால் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட கடுமையான சேதங்கள், முற்றிய நிலைக் கட்டிகள் போன்ற சூழ்நிலைகளில் அறுவைச் சிகிச்சையின் நியாயமான பயன்பாட்டை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது.

ஆனால் மருந்து, மாத்திரைகளாலேயே குணப்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ள பல்வேறு வியாதிகளை, அதற்கான அவகாசமோ, வாய்ப்போ வழங்காமல், முயற்சிகள் மேற்கொள்ளாமல் அறுவைச்சிகிச்சை செய்வதைத்தான் ஹோமியோபதி விமரிசிக்கிறது. அறுவைச் சிகிச்சை வெற்றி என அறிவித்தாலும், பாதிக்கப்பட்ட பாகத்தை அறுவை செய்து நீக்கியதால் மட்டும் முழு குணம் ஏற்பட்டுவிடாது என்பதை விரைவிலேயே ஒவ்வொரு நோயாளியும் மறு அனுபவமாக (Reexperience) தெரிந்து கொள்கின்றனர்.

வியாதிக்குறிகளை அகற்றுவதால் மட்டுமே வியாதியின் அடிப்படை நீங்கி விடுவதில்லை. எனவேதான், டான்சில் ஆபரேஷன், செய்து கொண்ட குழந்தைகளுக்கு, டான்சிலால் ஏற்பட்ட எந்தத் தொந்திரவுகளுக்கும் மாறிவிடுதில்லை. வாழ்நாள் முழுவதும் தொடர்கின்றன. மூக்கடைப்பிற்காக (Nasal Blockage) சிகிச்சைக்கு செல்லும் பெரும்பாலோர்க்கு மூக்கினுள் உள்ள சிறிய சதை வளர்ச்சியைக் (POLYPY) காரணம் காட்டி அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. இருந்த போதிலும் மூக்கடைப்பு நீங்குவதில்லை.  மீண்டும் சதை வளர்ச்சி ஏற்படுவதைத் தடுக்க முடிவதுமில்லை. அதே போல, மூல சதையை வெட்டி எறிவதால் மட்டும் மூலத்தின் மூலகாரணம் மறைந்துவிடுவதில்லை. மீண்டும் மூல அவஸ்தைக்கு ஆளாகின்றனர். பலமுறை மூல அறுவைச் சிகிச்சைக்கு ஆளானவர்கள் இறுதியில் ஹோமியோபதி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வருவதைப் பார்க்கிறோம்.

இருதய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு வலி ஏற்பட்டு மாரடைப்பு வரை செல்கிறது. ஆங்கில மருத்துவத்தில் அடைப்பை நீக்குவதற்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. அடைப்பின் அளவு 70% வரை இருந்தால் கூட ஆபரேஷன் இன்றி ஹோமியோபதி மருத்துவத்தில் குணமாக்க முடிகிறது.

கர்ப்பப்பை கட்டிகளை ஆங்கில மருத்துவத்தில் ஊசி, மருந்துகள் மூலம் குணமாக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. எனவே கர்ப்பப்பை அறுவைச் சிகிச்சை (Hysterectomy) மூலம் அகற்றப்படுகிறது. முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய்க் கட்டிகள் தவிர மற்ற அனைத்து வகை கட்டிகளையும் ஆபரேஷன் இன்றி குணப்படுத்த நம்பகமான வாய்ப்பு உள்ளது.

சிறுநீரகக் கற்களை அறுவைச் சிகிச்சையின்றி அகற்றுவதோடு மேலும் கற்கள் உருவாகும் போக்கினை தடுக்கவும் ஹோமியோ சிகிச்சை உதவுகிறது. உடலியல் அமைப்பையும், வளர்சிதை மாற்றக் கோளாறுகளையும் சரிசெய்கிறது.

உண்மை ஒரு நாள் வெளியாகும் – அதில்

உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்

என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. பல சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை தேவையில்லை என்ற உண்மை ஒரு புறமிருக்க, பல்வேறு நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு சற்று முன்னும் பின்னுமாய் ஹோமியோபதி மருத்துவர்களை சந்திக்கின்றனர். தவிர்க்க முடியாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்வதாகக் கூறி அறுவை சிகிச்சை காரணமாக பாதிப்புகள் நேராமல் இருக்க ஹோமியோ மருந்துகளைக் கோருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஹோமியோபதி அருந்துணை புரிந்து காக்கிறது. பொதுவாக அறுவை சிகிச்சைக்கு முன்பு எந்தவிதமான உணவும், பானமும் மருந்தும் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டாலும் ஹோமியோ மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் அறுவை சிகிச்சைக்கு எந்தவித இடையூறும் நேர்வதில்லை.

தேவைப்படும் காரணங்கள், சூழ்நிலைகள், குறிகளுக்கு ஏற்ப அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் கீழ்கண்ட ஹோமியோ மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.

  • அறுவை சிகிச்சையின் போது அல்லது சிகிச்சைக்குப் பின்னர் இறந்து போவோம் என்ற பயத்துடன் இருப்பவருக்கு அகோனைட் கொடுக்கலாம்.
  • ஜெல்சியம், அகோனைட் போன்ற மருந்துகளை அறுவை சிகிச்சைக்கு முதல் நாள் இரவு ஒரு வேளையும், அறுவை சிகிச்சை நாளன்று காலை ஒரு வேளையும், அறுவை சிகிச்சை முடிந்த பின் பயம், பதற்றம் நீடித்தால் சில வேளைகளும் தரலாம்.
  • பொதுவாக எந்த ஒரு அறுவை சிகிச்சைக்கும் இரண்டு நாள் முன்னதாக தினம் 3 வேளை வீதம் ஃபெர்ரம் பாஸ் 6 எடுத்துக் கொள்வதால், அறுவை சிகிச்சையால் ஏற்படும் அதிக ரத்த ஒழுக்கையும், தொற்றுநோயையும் கட்டுப்படுத்தலாம் (Infection and hemorrhaging).
  • அறுவை சிகிச்சைக்கு முன் பதற்றம், நடுக்கம், மனச்சோர்வு ஏற்படும் போது ஜெல்சிமியம் 30 பயன்படும்.
  • அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்திய மயக்க மருந்தின் விளைவுகளைப் போக்க அசிடிக் ஆசிட், மயக்க மருந்தினால் ஏற்படும் வாந்தியைக் கட்டுப்படுத்த சாமோமில்லா போன்ற மருந்துகள் பயன்படும்.
  • அறுவை சிகிச்சைக்கு பின் சில காலம் கழித்துத் தழும்புள்ள இடத்தில் வலி ஏற்பட்டால் ஸ்டாபிசாக்ரியா பயன்படும்.
  • அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட தழும்பு (Scarring & Adhesions) மறைய தயோசினமினம் தாய் திரவத்தையும் காலண்டுலா தாய் திரவத்தையும் வெளிப்பூச்சாக தினம் 1 வேளை சில வாரம் அல்லது சில மாதம் பயன்படுத்த வேண்டியிருக்கும். கிராபைட்டிஸ் 30 வாரம் 1 வேளை மட்டும் சாப்பிட வேண்டும்.
  • அறுவை சிகிச்சைக்குப் பின் சிறுநீர் தடை பட்டால் காஸ்டிகம் கொடுக்கலாம்.
  • அறுவை சிகிச்சை முடிந்த பின் ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டு, உடல் வெப்பமும் குறைந்தால் காம்போரா குணப்படுத்தும்.
  • தையல் போட்ட இடம் நோக்கி சுற்றியுள்ள தோல் இழுக்கப்பட்டிருந்தால் காலிபாஸ் கொடுக்கலாம்.
  • தையல் பிரித்தபின் கருநிறும் தெரிந்தால், சதைகளில் வலி, பலவீனம் காணப்பட்டால் சல்ப்யூரிக்க் ஆசிட் கொடுக்கலாம்.
  • கருச்சிதைவு (Dilation & curatege) சிகிச்சைப் பின் பெல்லடோனா 30, ஆர்னிகா, 30 சபீனா 30 (குறிகளுக்கேற்ப) 4 மணி நேரத்திற்கு ஒரு வேளை வீதம் சில நாள் தேவைப்படும்.
  • குழந்தை பிறக்கும் வழியை இலகுவாக்கு செய்யப்படும் சிறிய அறுவைக்குப் பிறகு பெல்லிஸ் பெரனிஸ் 30 அல்லது ஸ்டாபி சாக்ரியா 30 தினம் 4 வேளை சிலநாள் கொடுக்கலாம்.
  • அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றப்பட்ட பின் (Hysterectomy) காஸ்டிகம் 30 அல்லது ஸ்டாபிசாக்ரியா 30 தினம் 4 வேளை வீதம் சில தினங்கள் கொடுக்க வேண்டும்.
  • மார்பக கவர்ச்சிக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் பெண்களுக்கு சிகிச்சைக்குப் பின் பெல்லிஸ் பெரன்னிஸ் 30 தினம் 3 வேளை சில தினங்கள் கொடுக்கலாம்.
  • முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை எனில் ஹைபரிகம் 30 பயன்படும்.
  • கண் அறுவை சிகிச்சைக்குப் பின் லேடம்பால் 30 4 மணி நேரத்திற்கு 1 வேளை வீதம் 3 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்.
  • அப்பெண்டிசிடிஸ் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ரஸ்டாக்ஸ் 30 தினம் 3 வேளை தரலாம்.
  • சுக்கிலச் சுரப்பியில் (Prostate Gland) அறுவை சிகிச்சை நடைபெற்றபின் ஸ்டாபி சாக்ரியா 30 பயன்படுத்தலாம்.
  • பித்தப்பையில் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பின் லைகோபோடியம் 30 பயன்படும்.
  • அடிவயிற்று அறுவை சிகிச்சைக்குப் பின் உப்புசம் (Flatulance) ஏற்பட்டால் சைனா அல்லது லைகோபோடியம் முழு நிவாரணமளிக்கும்.
  • அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அடிக்கடி வாயு உற்பத்தியாவதும் வெளியேறாமல் இருப்பதும், வயிற்றுத் தொந்திரவுடன் மலச்சிக்கலும் ஏற்படுமாயின் ரபேனஸ் நன்மை செய்யும்.
  • அறுவை சிகிச்சை மூலம் பற்களை அகற்றுவதற்கு முன் ஆர்னிகா பயன்படுத்தலாம். பற்களை அகற்றிய பின்னர் அதிர்ச்சி மற்றும் ரத்தம் பெருக்கை கட்டுப்படுத்த ஆர்னிகா, பெர்ரம் பாஸ், ஹைபரிகம், பாஸ்பரஸ் பயன்படும். ஆனால், தாடை வலி, நரம்பு வலி ஏற்பட்டு நீடிக்குமானால் ஹெக்லலாவா அல்லது ஹைபரிகம் 200 நல்ல பலன் அளிக்கும்.
  • டான்சில் மற்றும் அடினாய்டு அறுவை சிகிச்சையை (Tonsil Lectomy and Adenoidectomy) தொடர்ந்து 4 மணி நேரத்துக்கு 1 வேளை வீதம் ரஸ்டாக்ஸ் 30 சில நாட்கள் சாபிடுவது நல்லது.
  • கண்பொறை (Cataract) அறுவை சிகிச்சைக்குப் பின் பார்வை மங்கல் ஏற்பட்டால் செனேகா பயன்படும்.
  • அறுவை சிகிச்சைக்கு முன்னும், செய்த பின்னும் ஸ்டாபிசாக்ரியா 30 அல்லது ஏஸ்குலஸ் 30 பயன்படும்.
  • பெளத்திரம் அறுவைக்குப் பின்னர் காலிபாஸ் 30 பயன்படும்

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர் – 626203

செல் – 9443145700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com