தினமும் ஒரு கிண்ணம் நிறைய பழங்கள் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவது 12 சதவிகிதம் குறையும் என்கிறது ஒரு ஆய்வு.
நீரிழிவு நோய் இருப்பவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் 17 சதவிகிதம் இறப்பை தடுக்க முடியும் என்கிறது அந்த ஆராய்ச்சி.
நீரிழிவு நோய் மட்டுமல்லாமல் பக்கவாதம், இதய நோய்கள், சிறுநீரகப் பிரச்னைகள், கண் நோய்கள், நரம்பியல் மற்றும் ரத்த நாளக் கோளாறுகள் போன்ற அனைத்து வியாதிகளுக்கும் மிகச் சிறந்த மருந்து இயற்கையாக கிடைக்கும் பழங்கள் தான். தினமும் ஒரு கிண்ணம் நிறைய பழங்களையும் பச்சை பசிய காய்கறிகளையும் உட்கொள்வதன் மூலம் 13 லிருந்து 28 சதவிகிதம் வரை மேற்சொன்ன வியாதிகளின் தன்மை குறைகிறது என்கிறது இந்த மருத்துவ ஆராய்ச்சி.
பழங்களையும் காய்கறிகளையும் அதிகளவில் உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான் என்றாலும், அதிலுள்ள இனிப்பானது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்புடையதா என்ற கேள்வியும் பலருக்கு இருந்து வருகிறது. இந்த பயத்தால் பல நீரழிவு நோயாளிகள் பழங்கள் சாப்பிடுவதை அறவே தவிர்த்து வந்தார்கள் என்று பதிவு செய்துள்ளது PLOS மெடிசன் என்ற பத்திரிகை.
இதனை தொடர்ந்து நோயாளிகளுக்கான பழ உணவு பற்றிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. சீனாவில் 5,00,000 நபர்கள் இதில் பங்கேற்றனர். பழங்களை தொடர்ந்து உணவாக உட்கொண்ட இவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து 0.2 சதவிகிதம் நீரிழிவு நோய்க்குரிய ஆபத்து குறைந்தது என்று இந்த ஆராய்ச்சியில் கண்டறிந்தனர்.
மேலும் நீரிழிவு நோயாளிகள் அதிக அளவில் பழங்கள் உட்கொள்வதன் மூலம், ஐந்து வருடங்களில் அவர்களின் மைக்ரோவாஸ்குலர் மற்றும் மாக்ரோவாஸ்குலர் பிரச்னைகள் குறைந்து போனது, இதன்மூலம் அவர்களின் இறப்பு 1.9 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றும் பதிவு செய்தனர்.