சுவைத்துக் கூடப் பார்க்காமல் பனங்கருப்பட்டி என்று சொன்னாலே வேண்டாம் எனக் கூறுகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்...! காரணம், அந்த அளவு வெள்ளை சர்க்கரை உள்ளது என்பது தான் உண்மை. சர்க்கரையின் ஆதிக்கம் அதிகமுள்ள இந்தச் சூழலில் பனங்கருப்பட்டியை பற்றி பார்ப்போம்...!
இப்போதும் கிராமப்பகுதிகளில் பனங்கருப்பட்டி என்பதை ஒரு மருத்துவ பொருளாகவும், சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்துவதை காணலாம்.
பனைமரத்தின் ஒவ்வொரு அங்குலமும் பயன் கொடுக்கக் கூடியது என்பது நகரத்தில் பிறந்து வளர்ந்த நம் இளைய தலைமுறையினர்க்கு தெரியுமா ?
பனங்கருப்பட்டியின் மருத்துவ குணங்கள் தெரியுமா ?
இப்படி பனையைப் பற்றிய ஒவ்வொரு விஷயமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
சர்க்கரை பல தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது அதில் கரும்பு, பனை, தென்னை முக்கியமானவை. சர்க்கரையை கரும்பினால் செய்கின்றோம், வெல்லம் என்பதில் மூன்று வகை உண்டு. கரும்பு வெல்லம், தென்னை வெல்லம், பனை வெல்லம் ! கருப்பட்டி என்பது பனையில் செய்யப்படும் ஒரு இனிப்பு. இதை பனை வெல்லம் அல்லது பனங்கருப்பட்டி என்கிறோம்.
கிராமங்களில் எப்போதுமே பனங்கருப்பட்டி காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது.
பனங்கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்தவில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மையின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.
பனையை பற்றிய தகவல்கள்...
பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்க படுகின்றன.
பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.
பனையிலிருந்து பெறப்படும் மற்ற பொருள்கள்
கதர் மற்றும் சிற்றூர் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவுப் பொருள்களாகும்.
ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
இத்தனை பயன் தரும் பனையில் இருந்து பதநீர் எடுத்து தயாரிக்கப்பட்ட இவ்வளவு அற்புதமான பனங்கருப்பட்டியை நாள்தோறும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக அனைவரும் பயன்படுத்தினால் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.
ஆரோக்கிய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்கிய பாரதத்தை உறுவாக்குவோம்.....!
ச.பாலகிருஷ்ணன், கோவை