எதைச் சாப்பிடுகிறோம் என்பதே தெரியாமல் சிலர் டிவியைப் பார்த்தபடி உணவை உள்ளே தள்ளுகிறார்கள். சிலர் கண்ட கண்ட பதார்த்தங்களை நேரம் காலம் தெரியாமல் கபளீகரம் செய்கிறார்கள். சாப்பிடுவதற்கும் ஒரு முறை உள்ளது என்பதை இதுபோன்றவர்கள் அறிந்துகொள்வது அவசியம். இல்லையென்றால் நோய்கள் ஒருநாள் பாடம் கற்பிக்கும். இங்கே கூறப்படும் குறிப்புகள், சாப்பிடும் இலக்கணத்தை தெளிவாகக் கூறுகிறது!
உணவுப் பழக்கங்கள்:
நீங்கள் உண்ணும் உணவு நீங்கள் வாழும் இந்த நிலத்தின் சத்துக்களை உறிஞ்சி உருவானவை. நிலத்தின் ஒரு பகுதியான இந்த உணவு சாப்பிட்டபிறகு நீங்களாகவே மாறுகிறது. இது சாதாரண விஷயமல்ல. மிகப் பெரிய விஷயம். எனவே சாப்பிடும்முன் இந்த உணவு உங்களுக்கு கிடைக்க வழி செய்த அனைத்து சக்திகளுக்கும் உங்கள் நன்றியை வெளிப்படுத்திவிட்டு, முடிந்தவரை மௌனமாக உண்ணுங்கள்.
உணவை நன்றாக மென்று உண்ணுங்கள்.
ஒவ்வொரு வாய் உணவையும் குறைந்தபட்சம் 24 முறையாவது மெல்ல வேண்டும்.
உணவு செரிமானம்
உணவு செரிமானம் வாயில் தொடங்கி, மலக்குடல் வரை பல கட்டங்களாக நடக்கிறது. உமிழ்நீரில் இருக்கும் ஒருவிதமான நொதி, வாயிலிருந்தே உணவு செரிமானத்தைத் துவக்கிவிடுகிறது. உணவை, இந்த நொதி நிறைந்த உமிழ்நீருடன் கலந்து நன்றாக மென்று உண்பது, ஆபத்தான வைரஸ்கள், பாக்டீரியாக்கள், மற்ற நுண்ணுயிர்களிடமிருந்தும், வேறு பல இரசாயனங்கள், கதிர்வீச்சு மற்றும் விஷப் பொருட்களிடமிருந்தும் பாதுகாக்கிறது. சரியாக மென்று தின்றால், 40-50% உணவு செரிமானம் வாயிலேயே நடந்துவிடுகிறது. உணவு சரியாக மெல்லப்படாவிட்டால், சரியாக செரிமானமாகாத உணவு வயிற்றை அடைந்து, ஒட்டுமொத்த உடலமைப்புக்கும் பிரச்சனை ஏற்படுத்துகிறது.
தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும்?
சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். சாப்பாட்டுக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக சிறிதளவு சீரகத் தண்ணீரோ அல்லது சாதாரண நீரோ குடிப்பது நல்லது. சாப்பிட்டு 30-40 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் அருந்துவது நல்லது. முதலில் சமைக்காத, பச்சை உணவு வகைகளை உண்டுவிட்டு, பிறகு சமைத்த உணவுகளை உண்ணுங்கள்.
சாப்பிட்ட பிறகு தூங்குவதற்கு 2 மணி நேரம் காத்திருக்கவும். உடலுக்கு உணவைப் பற்றித் தெரியும். ஏனென்றால் உடலே உணவால் ஆனதுதான். எனவே எதை, எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதில் உங்கள் நாக்கை கவனிக்காமல், உடலை கவனியுங்கள். மாதத்துக்கு ஓரிரு முறையாவது ஒரு நாள் முழுவதும் பழங்களையும், காய்கறிகளையும், தானியக் கஞ்சியையும் மட்டும் உட்கொள்ளுங்கள். மாதத்துக்கு இருமுறை வயிறை காலியாக விட்டுவிடுவது இன்னும் சிறந்தது. இது உடலை சுத்தப்படுத்தும்.
ஏகாதசி
பாரம்பரியமாக, மக்கள் ஏகாதசி அன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்நாட்களுக்கு ஆன்மீக முக்கியத்துவமும் இருக்கிறது. உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, முதலில் எளிதில் ஜீரணமாகக் கூடிய பப்பாளி மற்றும் கஞ்சி போன்ற உணவு வகைகளை உண்ண வேண்டும்.
தேன்
தினந்தோறும் தேன் உட்கொள்வது ஒரு மனிதருக்கு பல அற்புதங்களை நிகழ்த்தக் கூடியது. தேனின் ரசாயன அமைப்பும், மனிதனின் ரத்த அமைப்பும் மிக நெருக்கமாக ஒத்திருக்கின்றன. ஆஸ்துமா மற்றும் சளித் தொந்தரவு இருப்பவர்களுக்கு தேன் ஒரு அருமருந்து. இதயம், மூளை இவற்றுக்கு நன்மை பயப்பது மட்டுமல்லாமல், மனதையும் கூர்மையாக வைத்திருக்கக் கூடியது. மிகவும் சக்தி ஊட்டக் கூடியது.
நன்றி : ஈஷா மையம்