இந்த உணவை கொங்கு ஸ்பெஷல் அல்லது கொங்கு உணவின் முக்கிய அடையாளம் என்று கூறலாம். இந்த உணவுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உண்டு. மிக எளிமையான ஆனால் மிகவும் சுவை கொண்ட உணவாகும் இது.
தேவையான பொருள்கள்
புழுங்கல் அரிசி - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
சி. வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு அல்லது 50 மி.லி
சீரகம் - 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சீரகம், கருவேப்பில்லை போட்டு பொரிக்கவும். சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, கருவேப்பில்லை போட்டு வதக்கவும்.
வதக்கியவுடன் அரிசை, பருப்பை ஒன்றாக நீரில் கழுவி, அந்தக் கலவையில் கொட்டவும். (புழுங்கல் அரிசியே உபயோகிக்கலாம், அது தான் சுவையாக இருக்கும்). மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு போட்டு கலக்கவும். கலக்கியபின் 1 கப் அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் ஊற்றவும். அனைத்தையும் நன்றாகக் கலக்கி உப்பைச் சரிபார்த்து பின் குக்கரை மூடிவிடவும். இரண்டு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
குழந்தை முதல் பெரியவர் வரை எல்லோரும் விரும்பி உண்ணும் உணவு இது. சாப்பிடும்போது ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சாப்பிடவேண்டும். அல்லது நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிட்டாலும் ஓகேதான்.
அரிசியும் பருப்பும் சாதம் டிஃபன் பாக்ஸில் கட்டிகொடுப்பதற்கு நன்றாக இருக்கும். தொட்டுக்கொள்ள அப்பளம் போதும்.
- எழில்