பெற்றோர்களின் கவனத்திற்கு! செஃல்போன் பயன்படுத்தும் டீன் ஏஜ் வயதினருக்கு இத்தனை ஆபத்துக்களா? 

சின்னஞ்சிறியவர்கள் முதல் கல்லூரியில் படிக்கும் இளையோர்கள் வரை அனைவரின் கையிலும் விடாப்பிடியாக
பெற்றோர்களின் கவனத்திற்கு! செஃல்போன் பயன்படுத்தும் டீன் ஏஜ் வயதினருக்கு இத்தனை ஆபத்துக்களா? 

சின்னஞ்சிறியவர்கள் முதல் கல்லூரியில் படிக்கும் இளையோர்கள் வரை அனைவரின் கையிலும் விடாப்பிடியாக இடம் பிடித்திருக்கும் வஸ்து மொபைல் ஃபோன். நாம் நினைத்தவுடன் வீட்டினர், நண்பர்கள், உறவினர்கள் என யாருடன் வேண்டுமானாலும் எளிதாக பேச முடிவதால், இது அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியமான சாதனமாகிவிட்டது. பிஸினெஸ் செய்பவர்களுக்கு இந்த செல்ஃபோன்களின் சேவை மிகவும் தேவை. விரல் நுனியில் உலகத்தை தொடர்பு கொள்ள வேறு என்ன வழியிருக்கிறது? எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இந்த ஃபோன்களால் தொல்லைகளும் அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதிலும் குறிப்பாக டீன் ஏஜ் வயதினர் இதனை அதிகம் பயன்படுத்துவதால், மற்றவர்களைவிட மிக அதிகமாக பாதிப்புக்கு உள்ளார்கிறார்கள். மெட்ரோ என்ற படத்தில் வரும் விஷயங்கள் எல்லாம் கற்பனையில் எழுதப்பட்டவை அல்ல. செல்ஃபோனுக்காக தொடர் குற்றங்களை செய்யும் ஒரு கல்லூரி இளைஞனின் கதை அது. ஆசைப்படுவது தவறில்லை ஆனால் பேராசைப்படுவதும், தன் வயதுக்கு மீறி செயல்படுவதும் நிச்சயம் தவறு. பதின் பருவத்தினர் அதிகளவில் செல்ஃபோன் பயன்படுத்தினால் ஏற்படும் சில தீமைகள் இவை : 

1. கை மற்றும் முதுகு வலி

டீன் ஏஜ் வயதினர் குறுஞ்செய்தி, வாட்ஸ் அப், கேம், ஃபேஸ்புக் போன்றவற்றை தங்களின் ஸ்மார்ட் ஃபோனில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஃபோனை பயன்படுத்தும் போது ஆணியடித்தது போல் ஒரே இடத்தில் மணிக்கணக்காக அமர்ந்திருப்பார்கள்.

சாப்பிடும் போதும், நடக்கும் போதும் கூட ஒரு கையில் போனுடன் கேம் அல்லது வாட்ஸ் அப் செய்து கொண்டிருப்பதால் அடிக்கடி கை வலி, முதுகு வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். இது தொடர்ந்தால் டெண்டினைடிஸ் (tendinitis) என்ற பிரச்னை ஏற்படும்.

மணிக்கட்டில் தொடர்ந்து தாங்க முடியாத வலி எடுத்தால் உடனடியாக மருத்துவரின் பரிந்துரைக்குப் பின் பிஸியோதெரபி செய்துதான் இந்தப் பிரச்னையை குணப்படுத்த முடியும். கைகளுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கும் வேலைகளைச் செய்வதால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

தோட்டவேலை, கார்பண்டரி, பெயிண்டிங், டென்னிஸ் விளையாடுவது, போன்றவற்றைச் செய்யும்போது கைகளில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டால் Tendinitis ஏற்படும். தற்போது இளைஞர்களின் செல்ஃபோன் பயன்பாட்டாலும் ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

2. கண் பார்வைக் கோளாறுகள்

தொடர்ந்து மொபைல் ஃபோனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் இளையோருக்கு கண் பார்வையில் பிரச்னைகள் ஏற்படுகிறது. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் செல்ஃபோன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

நாள் முழுவதும் ஃபோன் திரையைப் பார்ப்பதாலும், இரவில் குறைந்த விளக்கொளியில் செல்ஃபோன்களைப் பயன்படுத்துவதாலும், கண்களில் கடுமையான அழற்சி தோன்றுகிறது. அது நாளாவட்டத்தில் கண்களில் அழுத்தத்தை உருவாக்கி பலவிதமான பிரச்னைகளை வரவழைத்துவிடும். இத்தகைய பாதிப்புக்கள் கடுமையாக இருந்தால் பார்வைக் குறைபாடு அல்லது பார்வை இழப்பும் கூட ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

3. தூக்கமின்மை

பெரும்பாலான டீன் ஏஜ் பிள்ளைகள் தங்கள் தலையணைக்கு அடியில்தான் மொபைல் ஃபோனை வைத்திருப்பார்கள். காரணம் 24 மணி நேரமும் அவர்கள் ஆன் லைனில் இருக்க நினைக்கிறார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏதாவது மெசேஜ் அல்லது அழைப்பு வந்தால், எடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்று தங்கள் அருகிலேயே ஃபோனை வைத்திருப்பதை வழக்கமாக்கிக் கொள்கிறார்கள்.

மொபைல் லேசாக சிணுங்கினால் கூட இவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்துவிடுவார்கள். அது என்ன ஏது என்று பார்த்த பிறகு, மீண்டும் தூங்க முயற்சிப்பார்கள். ஆனால் ஆழ்ந்த உறக்கம் அதன்பின் தடைபட்டுவிடும். இதனால் நாளாவட்டத்தில் தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் அவர்களுக்கு ஏற்படும்.

காலையில் சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு அல்லது கல்லூரிக்குக் கிளம்ப முடியாமல் சிரமப்படுவார்கள். வகுப்பறையிலும் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் தூங்கி வழிவார்கள். தூக்கக் கலக்கத்தில் வண்டி ஓட்டினால், விபத்துகளில் மாட்டிக் கொள்வார்கள். இதனால் படுகாயம் அடைவதுடன் சில சமயம் உயிரையே இழக்க நேரிடலாம். 

4. நரம்புக் கோளாறுகள்

செல்ஃபோன்களிலிருந்து வெளிப்படும் மின் காந்த சக்தி உடலுக்குள் ஊடுருவி விடக் கூடியது. நீண்ட நேரம் செல்போனை கைகளில் வைத்திருந்தாலோ பாக்கெட்டில் வைத்திருப்பதோ ஆபத்தில்தான் முடியும். அது நரம்பு மண்டலத்தை பாதித்து, மூளைப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கிவிடலாம்.

5. இளம் குற்றவாளிகள்

சைபர் க்ரைம் விஷயங்களில் அதிகளவு ஈடுபடுவது டீன் ஏஜ் வயதினர்தான் என்கிறது ஒரு ஆய்வு. இத்தகைய குற்றங்களில் மூன்றில் ஒரு பங்கு டீன் ஏஜ் பிள்ளைகளின் பங்கு இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தியும் இதை ஊர்ஜிதப்படுத்துகிறது. பத்தாவது வகுப்பு படிக்கும் மாணவன் தன் அம்மா மற்றும் அக்காவை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்று விட்டான். படிப்பு கெட்டுவிடும் என அவனது ஃபோனை பறித்துள்ளார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இத்தகைய கொடும் செயலை செய்திருக்கிறான்.

தினந்தோறும் இதுபோன்ற சிறியதும் பெரியதுமான குற்றங்களை இவர்கள் சிறிதும் மனசாட்சியோ அச்சமோ இல்லாமல் செய்யத் துணிவதற்குக் காரணம் செல்ஃபோனில் அடிமையாகிவிட்ட நிலைதான். 

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கையில் ஒரு ஃபோன் இருக்கும் சிறுவர்களின் மனநிலை எவ்வித குற்றச் செயலுக்கும் தூண்டிவிடக் கூடிய அளவுக்கு ஆபத்தானது.

இது அவர்களின் மன நலனுக்கு மட்டுமல்லாது உடல் நலனுக்கும் பேராபத்து என்கின்றன ஆய்வுகள். எத்தனை ஆராய்ச்சிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தாலும், மேலும் மேலும் செல்ஃபோன்களின் உற்பத்தியும், பயன்பாடும் அதிகரித்துதான் வருகிறது. அதனால் நாம் தான் சற்று கவனமாக செயல்பட வேண்டும். நாமே அதில் மூழ்கிக் கிடக்காமல், அதன் சாதக பாதங்களை கவனத்தில் கொண்டு பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய குழந்தைகளின் கைகளில் செல்போன் இருப்பதை பெருமையாக நினைக்காமல் ஆபத்தின் ஒரு எளிய வடிவமாக அதனைப் பார்க்க வேண்டும். அவர்களை அதன் பயன்படுத்த அனுமதிக்கலாம், ஆனால் அந்தக் கருவிக்கு அடிமையாகிவிடாமல் ஒவ்வொரு பெற்றோரும் தங்களை குழந்தைகளை தற்காக்க வேண்டும்.

முன்பு எப்போதையும் விட இந்தக் காலகட்டம் மிகவும் குழப்பமானதாகவும், அதி வேக தொழில்நுட்ப வளர்ச்சிக்கானதாகவும் இருப்பதால் எது சரி எது தவறு என்பதை அவரவர் யோசித்து முடிவு செய்து அதற்கேற்ப இளைய சமூகத்தை வழிநடத்த வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com