ஜென் புதிரை விளக்கும் பாகுபலி கதை

பாகுபலி பற்றி ஓர் அற்புதமான கதை உள்ளது. பாகுபலி பல போர்களைச் சந்தித்தவன்
ஜென் புதிரை விளக்கும் பாகுபலி கதை

பாகுபலி பற்றி ஓர் அற்புதமான கதை உள்ளது. பாகுபலி பல போர்களைச் சந்தித்தவன். ஒரு கட்டத்தில் சொந்த சகோதரனுடனேயே போர் மூண்டது. அந்தப் போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் தலைசாய்க்கப்பட்டார்கள். போர்க்களம் எங்கும் மரித்த உடல்கள்..! ரத்த ஓடைகள்..!
 
எல்லாவற்றையும் பார்த்ததும் பாகுபலிக்கு திடீரென்று தொண்டை அடைத்தது. அவனுள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ‘எதற்காக இத்தனை உயிர்களை பலி வாங்கினேன்..?’ என்று பதிலில்லாத ஒரு கேள்வி முளைத்தது. அடுத்த கணம், எல்லாவற்றையும் துறந்துவிட்டு தியானத்தில் நின்றுவிட்டான்.

முழுமையான கவனத்துடன் அங்குலம் கூட அசையாமல் பாகுபலி பதினான்கு வருடங்கள் தியானத்தில் ஆழ்ந்தான். அந்தச் சாதனையின் மேன்மையில் அவன் பற்று கொண்டிருந்த எத்தனையோ விஷயங்கள் தகர்ந்து விழுந்தன.

உலகையே ஆள நினைத்த அந்த மனிதன் இப்போது ஒரு கழுதைக்குக்கூட தலைவணங்கத் தயாராக இருந்தான். ஆனாலும், அவனுக்கு ஞானோதயம் நடக்கவில்லை. பதினான்கு வருடங்கள் நின்றவன் யாருடனும் பேசவில்லை. எதற்காகவும் தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. அப்படியிருக்கையில், ‘ஏன் இன்னும் தனக்கு ஞானோதயம் கிடைக்கவில்லை..?’ என்று புரியாமல் அவன் நின்றிருந்தபோது, அந்தப் பக்கம் ஒரு குரு கடந்து போனார்.

‘இன்னும் நான் என்ன செய்ய வேண்டும்..? என்னுடைய அத்தனையையும் துறந்துவிட்டேனே..!’ என்று பாகுபலிக்கு அந்த குருவிடம் கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால், பதினான்கு வருடமும் யாருடனும் பேசாமல் இருந்தவனுக்கு குருவிடம் மட்டும் வாயைத் திறந்து கேள்விகள் கேட்க மனம் வரவில்லை. குரு அவனைத் திரும்பிப் பார்த்தபோது, பாகுபலியின் இடது கண்ணிலிருந்து ஒரே ஒரு கண்ணீர்ச் சொட்டு வெளியில் வந்து புரண்டது. ‘என்னுடைய ராஜ்ஜியத்தை இழந்துவிட்டேன்..! என் குடும்பம், அரண்மனை, வசதிகள் எல்லாவற்றையும் விட்டெறிந்துவிட்டேன். ஒரு பூச்சிக்குக்கூட தலைவணங்கும் அளவு உள்ளே உருகிவிட்டேன். இன்னும் என்னுள் நடக்க வேண்டியது என்ன இருக்கிறது..?’ என்ற கேள்வி அந்த கண்ணீர்த் துளியில் பொதிந்திருந்ததை குரு புரிந்துகொண்டார்.

குரு அவனைத் திரும்பிப் பார்த்தபோது, பாகுபலியின் இடது கண்ணிலிருந்து ஒரே ஒரு கண்ணீர்ச் சொட்டு வெளியில் வந்து புரண்டது. ‘என்னுடைய ராஜ்ஜியத்தை இழந்துவிட்டேன்..! என் குடும்பம், அரண்மனை, வசதிகள் எல்லாவற்றையும் விட்டெறிந்துவிட்டேன். ஒரு பூச்சிக்குக்கூட தலைவணங்கும் அளவு உள்ளே உருகிவிட்டேன். இன்னும் என்னுள் நடக்க வேண்டியது என்ன இருக்கிறது..?’ என்ற கேள்வி அந்த கண்ணீர்த் துளியில் பொதிந்திருந்ததை குரு புரிந்துகொண்டார். 

குரு நின்றார். 'நீ அற்புதமான மனிதனாக மாறிவிட்டாய்..! ஒரு புழுவுக்கோ, பூச்சிக்கோ கூட அடிபணியும் அளவு உனக்குள் மாற்றம் நிகழ்ந்துவிட்டது. ஆனால், இதே விருப்பத்துடன் உன்னுடைய சகோதரனிடம் உன்னால் பணிந்து போக முடியுமா..? இயலாது..! அதுதான் உன்னை இழுத்துப் பிடித்திருக்கிறது..' என்றார். பாகுபலிக்கு தன்னுடைய நிலை புரிந்தது. சகோதரனிடம் இருந்த வெறுப்பு காரணமாகக் கொண்ட பற்றைக் களைந்தான். அந்தக் கணமே ஞானோதயம் பெற்றான். 

இப்படித்தான் பலர், வீடு, வசதிகள், பணம், மனைவி, கணவன் என்ற உறவு, குழந்தைகள் மீதுள்ள பற்று, எல்லாவற்றையும் விட்டெறிந்துவிட்டு ஆசிரமத்தை நாடுவார்கள். ஆனால், ஏதோ ஒன்றை விடமுடியாமல் பிடித்து வைத்துக்கொள்வார்கள். எவ்வளவோ பேர் சிறிய வயதிலேயே அந்த வயதுக்குரிய சுகங்களை எல்லாம் துறந்துவிட்டு, ஆசைப்பட்டதைச் சாப்பிடாமல், போதைப் பழக்கம் இல்லாமல், காமத்துக்கு அடிமையாகாமல், இரவு, பகல் பாராமல், தான் என்கிற அகங்காரம் இல்லாமல் வேலை செய்வார்கள். ஆனால் ஏதோ ஒன்று அவர்களை அறியாமல் அவர்களிடம் தங்கியிருக்கும்! சமயத்தில் பார்க்கும்போது, ரத்தக் கண்ணீர் வரும். ‘அர்த்தம் இல்லாத ஏதோ ஒன்றை எதற்கு இவர்கள் பற்றிக் கொண்டிருக்கிறார்கள்..?’ என்று கவலைப்படுவேன். 

ஒரு பரிமாணத்திலிருந்து இன்னொரு பரிமாணத்துக்கு மாறும்போது, முன் பின் அனுபவமற்ற ஒரு பிரதேசத்துக்குள் நுழையும்போது, தன்னிச்சையாக ஏற்படுகிற அச்சம் காரணமாக, தனக்கு ஏற்கெனவே பழக்கமான ஏதோ ஒன்றை விட்டுவிட முடியாமல் மனம் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது. அவர்களுடைய இறந்த காலத்திலிருந்தோ, அல்லது அவர்கள் கற்றறிந்த விஷயத்திலிருந்தோ, அல்லது அவர்கள் ரசித்த ஏதோ ஒன்றையோ பிடித்து வைத்துக்கொள்வார்கள்.

சொர்க்கத்துக்கே அழைத்துச் சென்றாலும், அவர்களுடைய சுண்டுவிரல் மட்டும் இன்னும் ஏதோ ஒன்றைச் சுற்றி பற்றிக்கொண்டிருக்கும். அது, பணமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலருக்கு அவர்கள் பயன்படுத்தும் போர்வையாகக் கூட இருக்கலாம். அல்லது ஒரு செல்ஃபோனைப் பிடித்து வைத்துக்கொள்வார்கள். அல்லது தனக்கான இடம் என்று ஓரிடத்தைப் பார்த்து, அங்கே உட்கார்ந்துதான் தியானம் செய்வார்கள். உடல் முழுவதும் வந்துவிட்டாலும், வால் மட்டும் சிக்கிப் போவது இப்படித்தான்! அந்த வாலை, சரியான நேரம் பார்த்துக் கத்தரித்துவிட்டால், அவர்களுக்கு ஞானோதயம் ஏற்பட்டுவிடும். இதைத்தான் அந்த ஜென் குரு தனது சீடர்களுக்கு, கதையாக விளக்கிச் சொன்னார்.

நன்றி : சத்குரு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com