தம் அதீத அன்பால் பெற்றோர் தன்னையும் அறியாமல் எப்படி சுயநலனே பெரிதென நினைக்கும் பிள்ளைகள் உருவாகக் காரணமாகி விடுகின்றனர் என்பதை முந்தைய கட்டுரையில் கண்டோம்.
எம்மா பட்டாக்ளியா என்ற உளவியலாளர், ‘அதிகப்படியான பொருட்களை வாங்கி கொடுத்துதான் உங்கள் பிள்ளைகளைக் கெடுக்க வேண்டும் என்பதில்லை, உங்கள் அதீத அன்பாலும் அவர்களைக் கெடுத்து விட முடியும். அன்பை சரியான விதத்தில் காட்டுவதெனில் அது பிள்ளைகளை இந்த உலகை எதிர்கொள்ளும் சக்தி உள்ளவர்களாகவும் அதே சமயம் பணிவும் மனித நேயமும் கொண்டவர்களாகவும் வளர்ப்பதுதான்’, என்கிறார்.
பெற்றோர் அதீத அன்பு காட்டும் சமயங்கள்
குழந்தையை சுற்றியே தன் உலகை அமைத்துக் கொள்வது:
சில பெற்றோர் எப்போதும் குழந்தைகளுடனே தன் முழு நேரத்தையும் செலவழித்து தன் குழந்தை மட்டும் தான் உலகம் என்பது போல் நடந்து கொள்கின்றனர் . குழந்தையின் மகிழ்ச்சிக்கென தனது எந்த சந்தோஷத்தையும் விட்டுத் தர தயாராகவுள்ளனர் . குழந்தைகள் நமக்கு முக்கியம்தான், ஆனால் தனக்கான இடத்தையும் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். தனது ஆசைகளை நிறைவேற்றுவதை தவிர பெற்றோர்களுக்கு வேறு முக்கிய வேலை ஏதும் இல்லை என பிள்ளைகள் நினைத்து விடக் கூடாது. வயது வந்த பிள்ளைக்குக் கூட குளிக்கச் செல்லும் முன் உள்ளாடை எடுத்து தருவதிலிருந்து வீட்டுப்பாடம் செய்து தருவது வரை ஓடி ஓடி பணிவிடை செய்யும் பெற்றோர்கள் இந்த பட்டியலில் அடங்குவர்.
தன் பெற்றோரின் உடல் சுகமின்மையையும் பொருட்படுத்தாமல் அதிகார தொனியுடன் பிள்ளை வேலை வாங்கினாலும் பிள்ளை கூப்பிட்ட குரலுக்கு ஓடிச் சென்று நிற்கும் பெற்றோர் இந்த பட்டியலில் அடங்குவர். பெற்றோர்களுக்கு வீட்டு வேலைகளில் உதவுவது என்ற எண்ணமே துளியும் இல்லாமல் படிப்பது மட்டும் தான் என் வேலை, வீட்டு வேலைகள் பெற்றோருக்கானது என்று நினைக்கும் இப்பிள்ளைகள் வெளி உலகமும் இப்படி தனக்கு சாதகமாகவே இருக்க வேண்டுமென நினைத்து, அது நடக்காத போது ஏமாற்றத்தால் உடைந்து போவார்கள். தன்னை கவனிப்பது மட்டுமே பெற்றோர்களின் வேலை அல்ல; அவர்களுக்கென வாழ்க்கை, வேலை, ஆசை, சமூகப் பொறுப்பு எல்லாமே உண்டு; எனவே அவர்களுக்கு ஏற்றபடி தானும் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் விட்டுக் கொடுத்தலும் வளைந்து கொடுத்தலுமே வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்கும் என்பதையும் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும்.
பிள்ளைகளை சிறு துன்பமும் படாமல் வளர்க்க நினைப்பது
பிள்ளைகள் சிறு துன்பம், மன உளைச்சலுக்கும் ஆளாகி விடக் கூடாது என ஓடிப் போய் உதவிக்கரம் நீட்டும் பெற்றோர் அத்தகைய சூழலை எப்படி மேற்கொள்ள வேண்டுமென கற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர தானே எப்போதும் உடனிருந்து உதவ எண்ணக் கூடாது. குழந்தை கீழே விழுந்து விட்டால் தரையை அடிப்பதும் குழந்தை யாரால் காயப்பட்டதோ அவர்களை அடிப்பதும் குழந்தையின் மனதில் தான் சரி மற்றவர்கள் மீது தான் தவறு என்ற எண்ணத்தை ஆழமாக பதியவைத்துவிடும். மாறாக அழும் குழந்தையை எல்லாம் சரியாகிவிடும் என சமாதானப்படுத்தி மீண்டும் விளையாட வைப்பதே சரியான வழியாகும்.
கண்டிக்கவோ தவிர்க்கவோ வேண்டிய செயலை ஊக்கப்படுத்துவது
ஏதாவது ஒன்றை கேட்டு அடம் பிடித்து அழும் குழந்தையை சமாளிக்க கேட்டதை கொடுப்பது தவிர்க்க வேண்டிய ஒன்று. அடம் பிடித்து அழுதால் கண்டு கொள்ளாமல் விடுவதே சரியான வழி .
சரியான எல்லைகளையும் தெளிவான விதிமுறைகளையும் கற்றுக் கொடுக்காமலிருப்பது
ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளுக்கு சரியான நடத்தைக்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். மருத்துவரான சூசன் பட்றாஸ் என்பவர், ‘விதிமுறைகள் பின்பற்றப்படாத குடும்பத்தில் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்ட, மரியாதையற்ற, ஒத்துழைக்காதவர்களாக இருப்பார்கள்’, என்கிறார். தான் நினைத்தபடி நடக்க அனுமதிக்கப்படும் குழந்தைகள் கீழ்படிதலற்றவர்களாக, பிறரைப் பற்றிய உணர்வு அற்றவர்களாகவே இருப்பார்கள்.
விதிமுறைகளை ஒரே சீராக அனுசரிக்காமலிருத்தல்:
அளவுக்கு மீறிய செல்லமோ, கண்டிப்பா ஆபத்தானது என்பதுபோல் ஒரே விஷயத்திற்கு ஒரு நேரம் கண்டிப்பதும், ஒரு நேரம் போனால் போகிறது என விடுவதும் தவறாகும். உதாரணமாக வேறு யாரும் வீட்டில் இல்லாத போது குழந்தை தன்னை ஒருமையில் அழைப்பதையோ, திட்டுவதையோ, ஏன் அடிப்பதையோ கூட கண்டிக்காமல் ரசிப்பவர்கள் மற்றவர்கள் முன்னிலையில் மட்டும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்த்தால் எப்படி சாத்தியமாகும்?
தவறுக்கு தண்டனை உண்டென உணர்த்தாமலிருத்தல்:
பிள்ளைகள் தவறு செய்தால் அதை சுட்டிக் காட்டி சரி செய்ய வேண்டும். உதாரணமாக தன் தம்பியை அடித்தல், தவறான வார்த்தைகளை பயன்படுத்தல், பொருட்களை உடைத்தல், பெற்றோரை எதிர்த்து பேசுதல்,போன்றவை தவறான செய்கைகள் என்பதை உணர்த்தி சரி செய்யாவிடில், தான் தவறே செய்யமாட்டோம்; தான் செய்வது எல்லாமே சரியானது என்ற எண்ணம் பிள்ளையின் மனதில் பதிந்துவிடும்.
தவறான முன்னுதாரணமாக இருத்தல்:
பெற்றோர் நல்ல முன்னுதாரணமாக இல்லாமல் எப்போதும் சண்டையிடுவது,அழுவது, பொய் சொல்வது, கோபப்படுவது என்றிருந்தால் பிள்ளைகளும் அப்படித்தான் இருப்பார்கள்.
பிள்ளையின் தவறான நடத்தைக்கான விளைவையும் தானே ஏற்றல்:
தன் தவறுக்கான குற்றவுணர்வினையோ, மன அழுத்தத்தையோ பிள்ளைகள் உணர அனுமதிக்க வேண்டும். அதையும் பெற்றோர் தன் தலையில் சுமக்க வேண்டியதில்லை. தன் செயலுக்கான விளைவு இது என்பதை உணரும் போதுதான் மீண்டும் அதே தவறை செய்யாமல் இருப்பார்கள். அவமானம், ஏமாற்றம், மன அழுத்தம் தரும் பாடங்களே அவர்களை வலிமையுள்ளவர்களாக்கும். அவற்றை எதிர்கொள்ள நம் உதவி தேவைப்படுமாயின் அப்போது உதவலாம்.
பெற்றோர் தன் பிள்ளையை உண்மையான உலகை எதிர்கொள்ளும் வகையில் வளர்க்க வேண்டும். தான் நினைத்ததையெல்லாம் நினைத்த நேரத்தில் பெற்றுக் கொள்வது நிஜ உலகில் சாத்தியமில்லை என்பதையும், எதிர்படும் இன்னல்களையும், ஏமாற்றங்களையும் அனுபவங்களாக ஏற்றுக் கொள்ளவும், இன்ப துன்பங்களை சமநிலையில் கையாளும் பக்குவத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
அதீத அன்பு காட்டும் பெற்றோர் பின்வரும் எண்ணங்கள் பிள்ளையின் ஆழ்மனதில் பதியக் காரணமாகின்றனர் :
பொறுப்புமிக்க பிள்ளைகளை உருவாக்குவது எப்படி?
பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது தாயையே கொலை செய்யத் துணிந்த உமாபதி போன்று பொறுப்பற்ற, தன்னலமிக்க, பிறரைப் பற்றிய அக்கறையற்ற, கல்நெஞ்சர்கள் ஆகின்றனரா அல்லது தனித்துவமும், செயல் திறனும், தன்னம்பிக்கையும், சமுதாயத்தைப் பற்றிய அக்கறையும் கொண்ட நல்லவர்களாக உருவாகின்றனரா என்பது பெற்றோர்களின் வளர்ப்பில்தான் உள்ளது.
பெற்றோர்களுக்கு உதவும் சில குறிப்புகள் :
குழந்தைகளுக்கு நிலையான மகிழ்ச்சியை தரக் கூடியவை பெற்றோர்களிடமிருந்து கிடைக்க கூடிய அன்பு, ஏற்பு, பாதுகாப்பு ஆகியவை தான். இவை எத்தனை கோடி விலை கொடுத்தாலும் எந்த கடைகளிலும் கிடைக்காதவை. இந்தியாவை வல்லரசாக்கும் அரசியல் ஒரு புறம் இருக்கட்டும் அதை நல்லரசாக்குவது என்பது எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றும் பெற்றோர்களின் கைகளில்தானே உள்ளது? எனவே பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள். அதீத அன்பும் ஆபத்தானதே. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சல்லவா!
- பிரியசகி
- ஜோசப் ஜெயராஜ்