சமீபத்தில் வெளியான ஒரு ஆராய்ச்சி முடிவு பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அலுவலக வேலையில் நீண்ட நேரம் சேரில் உட்கார்ந்திருப்பவர்களின் ஆயுள் குறைந்துவிடும் என்கிறது அந்த ஆராய்ச்சி. நம்ப முடியவில்லையா? உண்மை அதுதான்.
நீண்ட நேரம் நாற்காலியில் உட்காருவதாலும், அப்படி உட்காருகையில் பல வருடங்கள் தொடர்ந்து தவறான பொசிஷனின் உட்காருவதாலும் ‘பாஸ்சர்ஸ் ஸ்கோலியசிஸ்’ என்ற பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்கிறது அந்த ஆராய்ச்சி. இதனால் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு, முதுகுவலி வரும். கணினியின் முன்னால் நீண்ட நேரம் ஆடாமல், அசையாமல் ஏன் இமைக்காமல் கூட உட்கார்ந்தே இருப்பதால், ‘ரேடியேட்டிங் பெய்ன்‘ (ராடிகலோபதி) என்ற பாதிப்பும் ஏற்படக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள். தவிர, காலை தொங்கப் போட்டபடி உட்கார்ந்திருக்கும்போது, கால் வீக்கம், வலி, மறத்துப் போதல் போன்றவை ஏற்படலாம்.
ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும் போது உடலில் எல்.டி.எல் என்ற கெட்ட கொழுப்பு அதிகமாகும்.
எட்டு மணி நேரம் நடமாட்டமே இல்லாமல் ஒரே இடத்தில் உட்காரும் போது உடலில் உள்ள தசைகளில் செயல்பாடுகள் குறைந்து இருக்கும். இதனால் தசைகள் இறுகத் தொடங்கும். கழுத்து வலி, முதுகு வலி, உடல் வலி, உடல் சூடு போன்று பல உபாதைகளுக்கு வழி வகுக்கும்.
நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதால் நாளாவட்டத்தில் எலும்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படாமல் உடலில் தங்கிவிடும். இது தொடர்ந்தால் உடலில் க்ளுகோஸின் அளவு மாற்றம் அடைந்து டைப் 2 வகை சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்பு உருவாகிவிடும்.
உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் போன் மேரோ டென்சிட்டி மெல்ல குறைய ஆரம்பிக்கும். தவிர உடல் பருமனாகும்
அதிக நேரம் அமர்ந்து வேலை செய்யும் சூழலில், வேலை காரணமாக ஏற்படும் மன அழுத்தமானது சில தேவையற்ற ஹார்மோன்களை சுரக்கச் செய்யும். அத்தகைய ஹார்மோன்களில் ஒன்றான ‘கேட்டகோலமைன்’ சுரப்பு அதிகரித்தால் ‘கரோனரி ஹார்ட் டிசீஸ்’ என்ற இருதய சம்பந்தமான பிரச்னை வரலாம்.
இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு என்னவோ எளிமையானதுதான், அலட்சியப்படுத்தாமல் பின்பற்ற வேண்டும் அவ்வளவே.
நம்முடைய உடலை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வரும் முன் காப்போம் என்பது தான் இக்காலகட்டத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஆப்த வாக்கியம்.
படங்கள் - விக்கி ஹெள