ஒரு சமூகத்தையே தலைகுனிய வைத்த பெருமை செல்போனுக்கு உண்டு என்றால் மிகையில்லை. தெருவில் நடந்து போகும் போதும் சரி, வீட்டிலும் சரி, பயணங்களிலும் சரி அவரவர் செல்போனை குனிந்து பார்த்துக் கொண்டே அதில் குறுஞ்செய்திகளையோ வாட்ஸ் அப் விஷயங்களிலோ அல்லது பாடலிலோ அல்லது இணைய தளங்களிலோ உலவி வரும் மனிதர்களாகிவிட்டோம். உடலில் செல் இல்லாமல் கூட இருந்துவிடலாம், ஆனால் செல்போன் இல்லாமல் வாழவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.
விழித்திருக்கும் போது எப்போதும் உடன் இருக்கும் இந்தக் கருவி, உறங்கும் வரையில் கண் பார்வைக்குள் இருந்து கொண்டிருக்கும். உறக்கத்தின் கடைசி கணம் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பலர் அதனை தலையணைக்குக் கீழே வைத்துவிட்டு தூங்குவார்கள். இதனால் கண்கள் பாதிப்படைகிறது. அதிக சிரமம் எடுத்து பார்ப்பதால் கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படலாம். இப்படி ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரத்திலும் நம்முடன் வசிக்கும் இந்தக் கருவியால் நன்மை தீமை என்பதையெல்லாம் தாண்டி உடல் நலத்துக்கு அது எத்தகைய ஊறுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகிறோம்.
செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு மிகவும் ஆபத்தானது. செல்போன் கதிர்வீச்சினால் மூளையில் க்ளியோமஸ், அகெள்ஸ்டிக் நியூரோமஸ் என இரண்டு வகைப் புற்றுநோய் கட்டிகள் உருவாகக் கூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கதிர்வீச்சு பாதிப்புக்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.