பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான கால வரம்பை நீட்டிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய நிதியமைச்சகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் (ஆர்பிஐ) மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊர்மிளா வசுதேவ் கோவே என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் பூஷண் கவாய், வினய் தேஷ்பாண்டே ஆகியோர் கொண்ட அமர்வு, மத்திய நிதியமைச்சகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
முன்னதாக, மனுதாரர் தனது மனுவில் கூறியதாவது:
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8-ஆம் அறிவித்ததை அடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கு கொடுக்கப்பட்டிருந்த அவகாசம், கடந்த 24-ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. இதனால், கிராமப்புறங்களில் வசிக்கும் உழைக்கும் மக்கள், தாங்கள் வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியவில்லை. இதேபோல், புலம்பெயர்ந்து வசிக்கும் தொழிலாளர்களும் தங்களது பணத்தை மாற்ற முடியவில்லை. அவர்கள், ரிசர்வ் வங்கிக்கு நேரடியாகச் சென்று தங்களது பணத்தை மாற்றுவது இயலாத காரியம். எனவே, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான கால வரம்பை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் ஊர்மிளா வசுதேவ் குறிப்பிட்டடுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், அடுத்த விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தனர்.