பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை திரும்பப் பெற்ற நடவடிக்கையை விமர்சனம் செய்பவர்கள், 50 நாள்கள் பொறுமை காக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் ரயில்வே திட்டங்களுக்கு ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கருப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்காகவே பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றது. தேசத்தின் நலனைக் கருத்தில்கொண்டே, இந்த துணிச்சலான நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்துள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கையால் பயங்கரவாதிகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் நிதி சென்று சேருவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிலம், வீட்டுமனை, தங்கம் உள்ளிட்டவற்றின் விலைவாசியும் இனி குறையும்.
நாட்டின் நீண்டகால நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்கள் தாற்காலிகமானவைதான். இந்த அறிவிப்பை வெளியிடும்போதே, பொதுமக்கள் 50 நாள்களுக்கு சிரமங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
எனவே, இந்த நடவடிக்கையை குற்றம்சாட்டுபவர்களும், விமர்சிப்பவர்களும் அந்த 50 நாள்கள் பொறுமை காக்க வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.