பணத்தட்டுப்பாட்டால் அவதியுற்றுவரும் ஏழைகள், தொழிலாளர்களுக்கு உண்டியலில் சேர்ந்த பணத்தை இலவசமாகப் பகிர்ந்தளித்து மனிதநேயத்தை உயர்த்திப் பிடித்துள்ளது பெங்களூரில் உள்ள ஒரு கோயில் நிர்வாகம்.
பெங்களூரு, பீன்யா 2-ஆவது ஸ்டேஜில் செயல்பட்டுவருகிறது ஸ்ரீ ராமசேவா அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை அப்பகுதியில் ஸ்ரீ சாய் கோயில், ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயிலை நடத்தி வருகிறது.
இக்கோயிலுக்கு தினமும் பக்தர்கள் வருகை தந்து சாய்பாபாவையும் துர்கா பரமேஸ்வரியையும் வணங்கி செல்வது வழக்கம். தொழிலாளர்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வசிக்கும் இப்பகுதி மக்கள் ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டபிறகு உருவான பணத்தட்டுப்பாட்டால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பழைய ரூபாய் தாள்களை புதிய தாள்களாக மாற்றுவதில் சிக்கல் உள்ளது தவிர, வங்கியில் இருந்து பணம் எடுத்தாலும் 2 ஆயிரம் ரூபாய் தாள்களுக்கு சில்லறை கிடைக்காமல்மக்கள் அவதிப்பட்டுவந்தனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவிரும்பிய ஸ்ரீ ராமசேவா அறக்கட்டளை நிர்வாகத்தினர், கடந்த 2 ஆண்டுகளாகத் திறக்காத கோயில் உண்டியலை அண்மையில் திறந்து பார்த்தனர்.
அதில் ரூ. 10 முதல் ரூ.100 வரையான தாள்களே இருந்ததால், அதை அப்பகுதியில் பணத் தட்டுப்பாட்டால் அவதிப்படும் ஏழைகள், தொழிலாளர்களுக்கு விநியோகிக்க முடிவு செய்துள்ளனர். உண்டியலில் இருந்த ரூ.1.23 லட்சத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஏழைகள், தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கினர். அறக்கட்டளை மற்றும் கோயில் நிர்வாகத்தின் மனிதநேயப்பணியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.