கச்சத்தீவு தேவாலய நிகழ்வில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வெளியுறவுத் துறை அனுமதி மறுப்பு

கச்சத்தீவு தேவாலய நிகழ்ச்சியில் தமிழக மீனவர்கள் பங்கேற்க இந்திய வெளியுறவுத் துறை அனுமதி மறுத்துள்ளது.

கச்சத்தீவு தேவாலய நிகழ்ச்சியில் தமிழக மீனவர்கள் பங்கேற்க இந்திய வெளியுறவுத் துறை அனுமதி மறுத்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயம் ஓட்டு கொட்டகையில் அமைந்துள்ளது. இதையடுத்து, அதன் அருகிலேயே சீரமைக்கப்பட்ட தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. அங்கு கட்டடப் பூச்சு வேலைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. இதையடுத்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவை நடத்த இலங்கை மறை மாவட்ட நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வரும் 7-ஆம் தேதி சிறிய அளவிலான நிகழ்ச்சிக்கு இலங்கை தரப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதில் பங்கேற்க இலங்கை மீனவர்கள் தரப்புக்குக்கூட அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், நன்றி தெரிவிக்கும் நிகழ்வை கட்டடத்தின் திறப்பு விழா நிகழ்வாக சித்திரித்து சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதைப் பார்த்த தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில், தமிழக அரசின் தலைமைச் செயலர் வெளியுறவுத் துறைக்கு கடிதம் அனுப்பினார். இலங்கை தரப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு தொடர்பான அழைப்பிதழ் இந்தியாவுக்குக் கிடையாது. இத்தகைய சூழலில் இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்வது ஏற்புடையதாக இருக்காது.
மேலும், கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய ஆண்டுத் திருவிழாவையும் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்த இலங்கை தரப்பு ஏற்பாடு செய்து வருவதாக அறிகிறோம். கச்சத்தீவு விவகாரம் தொடர்புடைய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இது குறித்து சர்ச்சைகளை தமிழக மீனவர்கள் தரப்பும், ஊடகங்களும் தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com