நாட்டின் பல்வேறு இடங்களில் முகாம்களை நடத்தி ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு ஆள் சேர்க்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இனி எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே அடுத்தக் கட்ட தேர்வுகளுக்கு அழைக்கப்படுவார்கள் என்று ராணுவ உயரதிகாரி தெரிவித்தார்.
ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், ராணுவத் தலைமையகத்தின் பணியமர்த்துதலுக்கான இயக்குநர் மேஜர் ஜெனரல் ஜே.கே.மார்வல் பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராணுவத்தின் சார்பில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளில் தேர்ச்சியடைபவர்களை மட்டுமே இனி அடுத்த கட்ட தேர்வுகளுக்கு அழைக்கப்படுவார்கள் என்று அரசு முடிவு செய்துள்ளது.
இது, பணியமர்த்தல் முறையில் மிகப்பெரிய மாற்றம் ஆகும். இதன் மூலம், நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும் தேவைகளும் குறையும். மேலும், வசதியாகவும் இருக்கும் என்று மேஜர் ஜெனரல் ஜே.கே.மார்வல் தெரிவித்தார்.