காவிரி நீர்ப் பாசனக் கழகத்தின் மேலாண் இயக்குநராக இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.என்.சிக்கராயப்பாவின் உறவினர் வீடுகளில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
காவிரி நீர்ப் பாசனக் கழக மேலாண் இயக்குநராகப் பணியாற்றிய டி.என்.சிக்கராயப்பா, மாநில நெடுஞ்சாலைத் திட்ட தலைமை செயல் அதிகாரி எஸ்.சி.ஜெயசந்திரா ஆகிய இரு உயர் அதிகாரிகளின் வீடுகளில் வருமான வரித் துறையினர் நவ.30-ஆம் தேதி முதல் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.152 கோடி அளவுக்கு கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் ரூ.5.63 கோடி அளவுக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும் வருமான வரித் துறையினர் தவிர, சிபிஐ அதிகாரிகளும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக அரசின் ஊழல் ஒழிப்புப் படையின் உதவியுடன் கோலார் மாவட்டத்தின் சின்சண்லாஹள்ளி மற்றும் குருபூரு கிராமங்களில் உள்ள டி.என்.சிக்கராயப்பாவின் உறவினர்களின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். டி.என். சிக்கராயப்பாவின் ஓர்படியார் (சகலை) அனந்த்மூர்த்தியின் வீட்டிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.