மூத்த பத்திரிகையாளர் சோ மறைவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அத்வானி புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "சிறந்த தேசப்பற்று மிக்க பத்திரிகையாளர், விமர்சகர், அரசியல் நையாண்டியாளராகவும் திகழ்ந்தவர் சோ.ராமசாமி.
துக்ளக் இதழை நிறுவி, அதன் மூலம் பொது முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கியப் பிரச்னைகளை எடுத்துக் கூறியவர். குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணன் இருந்த போது, மாநிலங்களவை நியமன உறுப்பினராக இருந்தார். பன்முகத்தன்மை வாய்ந்த அவர், தமிழக அரசியலில் கருத்துகளை உருவாக்கக் கூடிய நிலையில் இருந்தார். பல்வேறு திரைப்படங்களை இயக்கியும், மேடை நாடக நடிகரகவும் விளங்கினார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்திக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, அமித் ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "சோ.ராமசாமியின் மறைவு, தேசிய, ஜனநாயக நெறிகளுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. தலைமுறைகளைக் கடந்து அவரது எழுத்துகள் வரலாற்றில் நீடிக்கும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் "துக்ளக்' வாசகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என கூறியுள்ளார்.