பாகிஸ்தான் மீது சைபர் தாக்குதலுக்கு இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய சைபர் பாதுகாப்பு கூடுதல் இயக்குநர் ஜெனரல் எஸ்.அமர் பிரசாத் ரெட்டி கூறினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய சைபர் பாதுகாப்பு கருத்தரங்கம் - 2016 வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் அமர் பிரசாத் ரெட்டி பேசியது:
பாகிஸ்தானின் டிஜிட்டல் கட்டமைப்புகளை முடக்குவதற்கு இந்தியா தயாராக உள்ளது. தேசிய சைபர் பாதுகாப்பைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழுவினர், பாகிஸ்தானின் முக்கிய அதிகாரப்பூர்வ இணைதயங்களுக்குள் நுழைய தயாராக உள்ளனர். தேவைப்பட்டால் பாகிஸ்தானின் இணையதளங்களை முடக்குவதற்கு இந்தியா தயாராக உள்ளது. பதான்கோட் தாக்குதலுக்குப் பின்பு இணையதளங்களை முடக்குவது தொடர்பான செயல்பாடுகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
இந்திய அரசு இணையதளங்களைப் பொருத்தவரை, அவை நவீன பாதுகாப்பு தொழில்நுட்பத்தின்படி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்திய இணையதங்களை முடக்குவது சாத்தியமில்லை. தேசிய சைபர் பாதுகாப்பு கொள்கைகள் இருந்தும் அவற்றை பல மாநிலங்கள் பின்பற்றுவதில்லை. எனவே, அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற சைபர் பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்க அறிவுறுத்தி வருகிறோம்.
தற்போது தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பிடம் 1,500 நிபுணர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை 10 லட்சமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் முக்கியமான இணையதள தரவுகளை, நெருக்கடியான நேரங்களில் பாதுகாக்க முடியும் என்றார் அமர் பிரசாத் ரெட்டி. இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் பேசுகையில், "சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சைபர் பாதுகாப்புக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மிகவும் அவசியமாகும்' என்றார் அவர்.