ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில், இந்திய ராணுவத்தின் முக்கிய ரகசியங்கள் மற்றும் நடமாட்டம் குறித்த ரகசியங்களை உளவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டான்.
கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி தங்கியிருந்த இடத்தில்இருந்து இரண்டு பாகிஸ்தான் சிம் கார்டுகளும், வரைபடங்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,ஜம்மு மாவட்டத்தின் சங்கிலியா கிராமத்தில் தங்கியிருந்த போத் ராஜ் என்பவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாகவும்,மிக முக்கிய ராணுவ ரகசியங்களை அவன் பாகிஸ்தானுக்கு தெரிவித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இதன் அடிப்படையில், சர்வதேச எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள ஜெர்தா கிராமத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த போத் ராஜை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்ததாகவும், அப்போது அவன் தப்பிச் செல்ல முயன்றதாகவும் காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவன் மீது சட்டத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்ட குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.