உள்நாட்டில் ஒரு மணி நேரத்துக்குள்பட்ட விமானப் பயணத்துக்கு அதிகபட்சம் ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கும் "உடான்' திட்டம் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிப்பதுடன், சாதாரண மக்களும் விமானப் பயணத்தை மேற்கொள்ள வழிவகை செய்யும் இத்திட்டம், வரும் ஜனவரியில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
"உடான்' திட்டத்தின்படி, உள்நாட்டுக்குள் சுமார் 476 கி.மீ. முதல் 500 கி.மீ. வரையிலான பயணத்துக்கு (சுமார் ஒரு மணி நேரம்) அதிகபட்சமாக ரூ.2,500 நிர்ணயிக்கப்படும். இந்த கட்டணம் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும்.
உடான் திட்டத்தில் இணையும் விமானங்களில், பாதி இருக்கைகளுக்கு இத்திட்டத்தின்படியும், மீதி இருக்கைகளுக்கு சந்தை நிலவரப்படியும் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
இதற்கு நிதி திரட்டுவதற்காக, லாபம் ஈட்டும் நீண்டதூர விமான வழித்தடங்களில் சிறிய அளவிலான வரி விதிக்கப்படவுள்ளது. நாட்டில் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் விமான நிலையங்களை புதுப்பிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றார் கஜபதி ராஜு.